Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

AKS 74: கிஷோரின் சவாலை எதிர்கொள்வானா பரத்? காயத்ரி செய்தது சரியா?

கிஷோர் புனிதாவின் அலுவலக அறைக்கு வருகிறான். புனிதா சோர்வாக இருப்பதைப் பார்த்துவிட்டுக் காரணம் கேட்கிறான். புனிதா கொச்சி சென்று வந்ததிலிருந்து பரத்துக்கும் தனக்கும் நடந்த சண்டையைப் பற்றியும் பரத் அவளை பிரிந்து தனியாக தங்கி இருப்பதைப் பற்றியும் கிஷோரிடம் சொல்கிறாள். கிஷோர் தன்னால்தான் புனிதா மற்றும் பரத்தின் இடையில் இவ்வளவு பிரச்னைகள் என்று சொல்லி பரத்திடம் தான் பேசிப் பார்க்கிறேன் என்கிறான். பிரச்னை இன்னும் தீவிரமாகும் என்பதால் புனிதா அதெல்லாம் வேண்டாம் என மறுக்கிறாள். கிஷோரின் ஈகோவால்தான் புனிதாவிற்கும் பரத்துக்கும் இடையில் இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன என்று கிஷோருக்கு நன்றாகத் தெரியும்.

AKS - புனிதா

அவன் ஏற்கெனவே பரத்திடம் புனிதாவை தன்வசம் இழுத்துக் காட்டுகிறேன் என்று சவால் விட்டிருக்கிறான். புனிதா எவ்வளவு அறிவோடு மற்ற விசயங்களில் நடந்து கொண்டாலும் கிஷோரின் விசயத்தில் அவனை கண்மூடித்தனமாக நம்புகிறாள். ஆரமபத்தில் பரத் எவ்வளவோ எச்சரித்தும் புனிதாவிற்கு புரியவில்லை. பரத் தன்னுடைய சுதந்திரத்தில் தலையிடுவதாக தான் யோசித்தாளே தவிர பரத் சொல்வதை நம்பவில்லை. அவனைப் புரிந்துகொள்ளவும் இல்லை. இதை தனக்கு சாதகமாக்கி புனிதாவை ட்ரெய்னிங் என்கிற பெயரில் கிஷோர் கொச்சிக்கு அழைத்து செல்கிறான். அங்கு மது அருந்த புனிதாவின் அறைக்கு வந்துவிட்டு அங்கேயே மயக்கம் போட்டு விழுந்து புனிதாவுடன் தங்கியதுகூட ஒரு வகையில் நாடகமாக இருக்கலாம்.

பரத்தும் சிவாவும் பாரில் மது அருந்திக்கொண்டு இருக்கிறார்கள். கிஷோர், தன் வாழ்வை நாசமாக்கி விட்டான் என்று பரத் சிவாவிடம் புலம்புகிறான். சிவா பரத் பேசும் எதையும் கவனிக்கமுடியாத மனநிலையில் இருக்கிறான். பரத், தான் சொன்ன எதையும் சிவா கவனிக்கவில்லை என்று அலுத்துக்கொள்கிறான். சுந்தர் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் இருக்கிறான். காயத்ரி அவன் அருகில் இருக்கிறாள். இந்தப் பிரச்னை வீட்டுக்குத் தெரிந்தால் காயத்ரி எப்படி எதிர்கொள்வாள் என்கிற குழப்பத்தில் சிவா இருக்கலாம். அதுபோக காயத்ரியும் அழுதுகொண்டே இருப்பது சிவாவின் மனதைப் பாதித்திருக்கலாம். எல்லோருக்குமே அவரவர் பிரச்னைதான் பெரியதாக இருக்கும்.

AKS பரத் சிவாவிடம் புலம்புதல்

பரத் புனிதாவால் கிடைக்க இருந்த வங்கிக் கடனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தான் முன்பு வேலை செய்த இடத்திற்கே வேலைக்கு செல்கிறான். புனிதா எவ்வளவோ சொல்லியும் பரத் அவளுடைய உதவியை ஏற்க மறுக்கிறான். தானாகவே திரும்பி வந்ததால் அவன் முன்பு வாங்கிக் கொண்டிருந்த அதே சம்பளத்தை தான் தர முடியும் என அவனது ஜிம் உரிமையாளர் சொல்கிறார். அதை நினைத்துவருந்தி பரத் சிவாவிடம் புலம்பி அழுகிறான். தான் இந்நேரம் ஒரு ஜிம் உரிமையாளராக இருக்க வேண்டியது என்றும் அது கிஷோரால் நடக்காமல் போய்விட்டது என்றும் பரத் கோபமாக சொல்கிறான்.

புனிதாவைத் தன்வசமாக்கிக் காட்டுவதாக கிஷோர் சவால்விட்டது, அதை பரத் சொல்லும்போது நம்பாமல் அவனைக் கோபித்துக்கொண்டது எல்லாம் உண்மைதான் என்றாலும் பரத் சிறிது பொறுமையாக இருந்து புனிதா சொல்வதையும் நம்பிக் கேட்டிருக்க வேண்டும். கிஷோரின் நாடகம் தெரிந்தபோது கோபப்பட்டு எல்லாவற்றையும் அவசர அவசரமாக முடிவெடுத்து புனிதாவை விலகிச் சென்று விடுகிறான். சிவாவும், பரத்தும் பேசிக் கொண்டிருக்கும்போதே கிஷோர் தனது நண்பர்களுடன் அங்கு வருகிறான். சிவா கிஷோரைக் கண்டதும் அவனை அழைத்துப்பேசுகிறான். கிஷோர் தான் செய்தவைக்காக பரத்திடம் வருந்துகிறான். ஆனால் பரத் கிஷோர் நடிப்பதாக சொல்லி, அவனை அடித்து விடுகிறான். கிஷோர் தன்மீது எந்த தவறும் இல்லாதது போல் தனது நண்பர்கள் முன்பும் சிவா முன்பும் நடிக்கிறான்.

AKS கிஷோரை அடிக்கும் பரத்

பரத்தை சிவா வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு சென்று விடுகிறான். பரத் கிஷோரை அடித்தது அவனுடைய ஈகோவை மேலும் தூண்டுவதாக இருக்கிறது. அதோடு அவனது நண்பர்களும் பரத்தை ஜெயிக்க வேண்டும் என்று கிஷோருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். அதற்காக புனிதாவை கிஷோரின் வசம் ஆக்கிக் காட்ட வேண்டும் என்றும் திட்டம் போட்டுக் கொடுக்கிறார்கள். கிஷோர் ஏற்கனவே அந்த எண்ணத்தில்தான் இருக்கிறான். மறுநாள் அலுவலகத்தில் புனிதாவைச் சந்திக்கும் கிஷோரின் கன்னத்தில் இருக்கும் காயத்தைப் பற்றி புனிதா கேட்கிறாள். கிஷோர் மழுப்பலாக பதில் சொல்லி உள்ளே சென்றுவிட, அவனது நண்பன் முன் தினம் பாரில் பரத் கிஷோரை அடித்ததைப் பற்றி சொல்கிறான். புனிதாவிற்கு பரத்தின் மீது அளவில்லாத கோபம் வருவதற்கும், சிவாவின் மீதிருக்கும் “சாப்ட் கார்னர்” அதிகமாவதற்கும் இதுவே போதுமானதாக இருக்கிறது.

சுந்தரை பரிசோதித்துவிட்டு டாக்டர் அவனுக்கு இன்னும் சிறிது நேரத்தில் சுயநினைவு வந்துவிடும் என்றும் பயப்பட வேண்டாம் என்றும் காயத்ரியிடம் சொல்கிறார். சுந்தரின் தந்தை காயத்ரிக்கு கால் செய்கிறார். சுந்தருக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான் என்று காயத்ரி சொல்ல, அவர் பதறுகிறார். இதை தங்களுக்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும் என்றும் தான் உடனே கிளம்பி வருவதாகவும் சொல்லும் அவரை காயத்ரி சமாளிக்கிறாள். தானே சுந்தரை பார்த்துக்கொள்வதாகச் சொல்லி காயத்ரி காலை கட் செய்கிறாள்.

AKS சுந்தரைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள்

ஏற்கெனவே சொன்னதுபோல இதுபோன்ற ’எமர்ஜென்சி’ விசயங்களில் சம்பந்தப்பட்டவரின் பெற்றோர் அல்லது நெருங்கிய குடும்பத்தினரிடம் முதலில் சொல்வதுதான் சரி. சுந்தருக்கு விபரீதமாக வேறு ஏதாவது நேர்ந்து இருந்தால் காயத்ரிக்கு அது காலம் முழுவதும் தீராத பழியாகவும், பிரச்னையாகவும் ஆகியிருக்கும். கவிதாவின் பெற்றோர்கள் அவளுக்கும் பாண்டியனுக்கும் திருமணம் செய்து வைப்பதை பற்றி பேச சென்னை வருகின்றனர். கவிதா அவர்கள் முன்னால் தன்னுடைய காதலனாக நடிக்கச் சொல்லி ராஜேஷைக் கேட்கிறாள். ராஜேஷ் மறுத்து விடுகிறான்.

AKS ராஜேஷை நடிக்கச்சொல்லும் கவிதா

கவிதா தன் பெற்றோர்களை எப்படி சமாளிக்கப் போகிறாள்?

காயத்ரி சுந்தரின் பெற்றோர்களுக்கு என்ன சமாதானம் சொல்வாள்?

காத்திருப்போம்!



source https://cinema.vikatan.com/television/article-about-aadhalinaal-kaadhal-seiveer-youtube-series-episode-74

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக