Ad

வெள்ளி, 3 டிசம்பர், 2021

தஞ்சாவூர்: காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட 3 பட்டியலின இளைஞர்கள்! - கதறும் உறவினர்கள்

தஞ்சாவூர் அருகே பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த மூன்று இளைஞர்களை திருட்டு வழக்கின் விசாரணைக்காக அழைத்து செல்வதாக கூறி போலீஸ் அழைத்து சென்ற நிலையில், அதில் இருவரை மட்டும் போலீஸார் ரிமாண்ட் செய்துள்ளனர். ஒருவரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் போலீஸ் அவர்களை அடித்து சித்தரவதை செய்ததாக அவர்களது உறவினர்கள் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் ஸ்டேஷன் முன்பு உறவினர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். அவரின் மனைவி ராணி. கடந்த 1-ம் தேதி இருவரும் வல்லம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் டூவீலருக்கு பெட்ரோல் போட்டு கொண்டிருந்த போது தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக போலீஸார் விசாரணை என்ற பெயரில் கணவன், மனைவி இருவரையும் அழைத்து சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து 2-ம் தேதி ராஜ்குமார் அண்ணன் விஜயனுக்கு போன் செய்த போலீஸ் காணாமல் போன உங்களோட டூவீலர் கிடைத்து விட்டது. ஆர்சி புக் உள்ளிட்ட ஆதாரங்களை காட்டி விட்டு வாங்கி செல்லுங்கள் என அழைத்துள்ளனர். உடல் நிலை முடியாமல் இருந்த விஜயன் தன் மனைவி சரோஜாவையும் அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார்.

முகநூல் மோசடி, கைது

இதே போல் முனையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவர் இரும்பு கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த நிலையில் கடைக்கு சென்று அவரையும் அழைத்து சென்றனர். மூன்று பேரையும் தனி தனி இடத்தில் வைத்து விசாரித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு ராஜ்குமாரை தவிர மற்ற இரண்டு பேரையும் போலீஸார் ரிமாண்ட் செய்துள்ளனர். ராஜ்குமார் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களின் உறவினர்கள் போலீஸாரிடம் கேட்டதற்கும் முறையான பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மூன்று பேருடைய மனைவி மற்றும் உறவினர்கள் வல்லம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள், ``திருந்தி வாழும் மூன்று பேர் மீதும் போலீஸார் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளதாக” குற்றம் சாட்டினர். இந்த விவகாரத்தை விட்னஸ் பார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பு கையில் எடுத்திருக்கிறது. குற்றத்தை ஒப்பு கொள்ள வைப்பதற்காக மூன்று பேரையும் போலீஸ் அடித்து சித்ரவதை செய்துள்ளதாக ஜெம்பீம் திரைப்படத்தில் வருவது போன்றே நடந்துள்ளதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர்.

உறவினர்கள்

இது குறித்து ராஜ்குமார் மனைவி ராணி கூறுகையில், ``நானும் எனது கணவரும் ஆட்டுக்கல் வியாபாரம் செய்து வருகிறோம். விசாரணை என்ற பெயரில் போலீஸ் எங்களை அழைத்து சென்றனர். என்னை தனியாக இருக்க வைத்து விட்டு என் கணவர் ராஜ்குமாரை மட்டும் வேறு இடத்திற்கு அழைத்து சென்றனர். நீண்ட நேரமாகியும் அவரை திரும்பி அழைத்து வரவில்லை. நான் கேட்டதுக்கும் சரியாக பதில் சொல்லவில்லை.

பின்னர் என்னை ஹோம் ஒன்றில் தங்க வைத்தனர். `என் வீட்டுக்காரர் எங்கே, நாங்க எந்த தப்பும் செய்யலை அப்புறம் ஏன் எங்களை பிடிச்சு சித்திரவதை செய்றீங்க? என்னைய எதுக்கு ஹோமுல தங்க வைக்குறீங்கனு?’ கேட்டேன் விசாரணை முடிந்த பிறகு அனுப்பி விடுகிறோம் என சொன்னாங்க. அதன் பிறகு மேலும் இரண்டு பேரை கைது செய்திருக்காங்க.

Also Read: கள்ளக்குறிச்சி: காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடிகள்! - `பொய்வழக்கு; சித்ரவதை’ எனப் புகார்

ரெண்டு பேரை மட்டும் சிறையில போட்டிருக்காங்க. என் கணவர் என்ன ஆனார்... எங்கே இருக்கிறார்... என தெரியவில்லை. போலீஸ் எங்களை நிம்மதியாவே வாழ விடமாட்டாங்க போல” என கண்கலங்கினார். விஜயன் மனைவி சரோஜா கூறுகையில், ``காணாமல் போன டூவீலர் கிடைத்து விட்டது வாங்கிக வாங்கனு சொன்னதுனால ஒன்றரை வயது குழந்தையை தூக்காமல் நானும் என் கணவர் மட்டும் ஸ்டேஷனுக்கு போனோம்.

போலீஸ் அவரை மட்டும் தனியா அழைச்சுக்கிட்டு போனாங்க. என்னை ஸ்டேஷன்ல உட்கார வச்சுட்டாங்க. `ஒன்றரை வயசு பையனை வீட்டுல விட்டுட்டு வந்துட்டேன் என்னை காணாம தவிச்சு போயிருவான் என்னையாவது அனுப்புங்கனு’ நேரம் ஆக ஆக போலீஸ்கிட்ட கெஞ்சினேன். அவங்க மனசு இரங்கவே இல்லை. இரவாகியும் நாங்க வீட்டுக்கு போகாததுனால பையனை தூக்கிகிட்டு எங்க சொந்தகாரவங்க ஸ்டேஷனுக்கு வந்துட்டாங்க. பின்னர் என்னை ராணியை வச்சிருந்த அதே ஹோமுல இருக்க வச்சாங்க. என்ன தப்புக்காக விசாரிக்குறீங்க... எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்கனு சொன்னதுக்கு அமைதியாகவே இருந்தனர் போலீஸ். அதிகாரம் படைத்த போலீஸுக்கு எங்க குரல் கேட்கவா போகுதுனு” கலங்கினார்.

போலீஸ் ஸ்டேஷனில்

விட்னஸ் பார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பின் செயல் இயக்குநர் ஜெயசுதாவிடம் பேசினோம், ``மூன்று பேரையும் கைது செய்த போலீஸ் அவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்காமல், தனி தனியாக ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துள்ளனர். எங்க வைத்து விசாரிக்கிறோம் என்ற விவரத்தை அவர்களது மனைவிக்கு கூட தெரியப் படுத்தவில்லை. போலீஸ் குற்றத்தை ஒப்பு கொள்ள வைப்பதற்காக மூன்று பேரையும் அடித்து சித்தரவதை செய்துள்ளதாக தெரிகிறது.

எங்கு வைத்திருந்தனர் என்பது தெரியாததால் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி ரவளி பிரியா, திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் ஆகியோர் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றோம். அதன் பிறகும் எங்கு இருக்கிறார்கள் என்பது கேள்விகுறியாக இருந்த நிலையில் விஜயன், பரமசிவத்தை மட்டும் ரிமாண்ட் செய்துள்ளனர். ராஜ்குமார் நிலை என்னவென்று தெரியவில்லை. போலீஸ் ஏன் அவரை மறைக்கிறார்கள் என்பதும் புரியவில்லை” என்றார்.

Also Read: கள்ளக்குறிச்சி: காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடிகள்! - `பொய்வழக்கு; சித்ரவதை’ எனப் புகார்

வல்லம் டி.எஸ்.பி பிருந்தாவிடம் பேசினோம், ``பழைய திருட்டு வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்த ராஜ்குமார் உள்ளிட்டவர்களை கைது செய்திருக்கிறோம். ராஜ்குமார் திருட்டில் ஈடுப்பட்ட போது பொதுமக்களே அவரது டூவீலரை பிடித்து கொடுத்திருந்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்தும் விசாரணை நடத்தினோம். அவர்களிடமிருந்து நகைகள் ரெக்கவரி செய்திருக்கிறோம். மூன்று பேரையும் ரிமாண்ட் செய்ய இருக்கிறோம்” என்றார். ஆனால் இரண்டு பேர் மட்டும் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/crime/police-arrested-3-scheduled-caste-peoples-sparks-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக