கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள மருகால்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர் பரமசிவம் (37). இவரது வீட்டிலேயே செல்போன் பழுது பார்க்கும் மெக்கானிக் ஷாப் நடத்தி வந்தார். பரமசிவத்தின் மனைவி சாரதா (35). சாரதாவிற்கு உடல் நலக்குறைவு எற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலன் அளிக்காமல் சாரதா நேற்று முந்தினம் காலை உயிரிழந்துள்ளார். இதனால் உடைந்துபோன பரமசிவம், மிகவும் சோகமாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு பரமசிவம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விசாரணை நடத்தியதில் பரமசிவம் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.
அந்த கடிதத்தில் "நான் பரமசிவன், என் மனைவி சாரதா. அவள் இல்லை நானும் இனி உயிர் வாழமாட்டேன். எங்களது கடைசி ஆசை, எங்கள் இருவரையும் இணைத்து புதைக்க வேண்டும், எரிக்கக் கூடாது. எங்கள் இருவரையும் பிரிக்க வேண்டாம். என்றும் என் உயிர் அவளுக்கு மட்டும்தான். ஒரே இடத்தில் கைகோர்த்து புதைக்க வேண்டும். என் மனைவி தாலி அவள் கழுத்தில் இருக்க வேண்டும். அதை கழட்டக்கூடாது. என் சாவுக்கு நான் மட்டுமே காரணம். இப்படிக்கு பரமசிவன் சாரதா" என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
மேலும், ஒரு ஹார்ட் வரைந்து அதில் 'சிவ சாரா லவ்' என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுசீந்திரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "பரமசிவனுக்கும் சாரதாவிற்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. பரமசிவனும், சாரதாவும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் அன்பாக இருந்துள்ளனர். இந்த நிலையில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் பரமசிவம் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். அவர் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/husband-commit-suicide-after-wife-died-due-to-illness
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக