Ad

திங்கள், 15 பிப்ரவரி, 2021

இவை இல்லையெனில் கடல் வாழ் உயிரினங்களே இருக்காது... கடல் சூழலியலைக் காக்கும் காவலர்களே ஆமைகள்!

கடல் சூழ்நிலை மண்டலமானது பூமியின் மிகப்பெரிய சூழ்நிலை மண்டலமாகும். இதில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆமை இனங்கள் ஆகும். உலகம் முழுவதும் 360 ஆமை இனங்கள் வாழ்கின்றன. அவை `ஊர்வன' வகுப்பைச் சார்ந்தவை. ஆமைகள் `டெஸ்டுடின்' வரிசையில் அடங்கும். ஆமைகள் காற்றை சுவாசிக்கும் இனங்கள். அவற்றின் ஓடுகள் காரபேஸ் (மேல் ஓடு), பிளாஸ்ட்ரான் (கீழ் பிரிவு) ஆகிய இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளன. ஆமைகள் பழைமையான ஊர்வன வகையாகும். அவற்றின் உடல் வெப்பநிலை சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி மாறும் (குளிர் ரத்த வகை). பெரும்பாலான ஆமைகள் நீரில் வாழ்ந்தாலும் நிலத்தில் முட்டையிடுபவை (அம்னியோட்ஸ்). மணல் நிறைந்த கடற்கரைகளில் முட்டையிடுகின்றன. நுரையீரலை இளைப்பாற்றுவதற்கு அடிக்கடி மேற்பரப்புக்கு வருகின்றன.

ஆமை இனங்கள் அடிப்படையில், நீருக்குள் மூழ்கியுள்ள நேரம் 60 விநாடிகள் முதல் 1 மணிநேரம் வரை மாறுபடும். மீனவர்கள் `சொறி' என்றழைக்கும் இழுது மீன்கள் (jelly fish) மற்றும் கடல் பாசிகள் கடலாமைகளின் முதன்மை உணவாகும். வளர்ந்தபின் ஆமைகள் நத்தை, புழுக்கள், பூச்சிகளைச் சாப்பிடுகின்றன. ஆமைகள் சுற்றுச்சூழல் அமைப்பின் உயிரியலில் கணிசமான இடத்தைப் பெற்றுள்ளன.

ஆமை

சுற்றுச்சூழலில் கடல் ஆமைகளின் முக்கியத்துவம்:

ஆமைகள் கடல் புல்படுக்கைகள், பவளப்பாறைகள், வாழ்விடங்களை வழங்குதல் ஆகியவற்றில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஆமைகளின் அழிவு சுற்றுச்சூழலுக்கு ஒரு சரிவாக அமையும். அவற்றின் முட்டைகள் பல உயிரினங்களுக்கு உணவாகும். கடல் ஆமைகள் அழிந்து விட்டால் தாவரங்கள் ஊட்டச்சத்துகளுக்குரிய ஒரு முதன்மை ஆதாரத்தை இழந்துவிடும். இதன்விளைவாக மணல் அரிப்பு அதிகரிக்கும். கடல் ஆமைகள் ஒரு `கீஸ்டோன் இனம்.' அதாவது, சுற்றுச்சூழலை பராமரிப்பதில் அவை முக்கிய அங்கமாக விளங்குகின்றன. ஆமைகள் அழிந்துவிட்டால் இயற்கை ஒழுங்கு சீர்குலைந்துவிடும். இது மற்ற கடல் விலங்குகளையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது.

உணவுச் சங்கிலியில் ஆமைகளின் முக்கியத்துவம்:

கடல் ஆமைகளில் மிகப் பெரியது `லெதர்பேக்கு' ஆமைகள். அவை வெகுதூரம் பயணிப்பவை. லெதர்பேக் ஆமைகள் கடல் சொறி மீன்களை உண்பதன் மூலம் ஊட்டச்சத்தைப் பெறுகின்றன. அவை 440 பவுண்ட்ஸ் கடல் சொறி மீன்களை உட்கொள்கின்றன. கடல் சொறி மீன்களில் பல வகைகள் உள்ளன. அவை மீன் முட்டைகளையும் மீன் குஞ்சுகளையும் அதிகம் உட்கொள்ளும். இதனால் மீன்வளம் பெரிதளவில் பாதிப்படைகிறது. கடல் சொறி மீன்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மீன்வளம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடல் சொறி மீன்கள் எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே மீன் இனங்களைப் பாதுகாக்க முடியும். அவற்றில் சில வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை.

ஆமை

மீனவர்களும் இவற்றை ஆபத்தான உயிரினங்களாகக் கருதுகின்றனர். அவற்றின் விஷத்தன்மை மனிதர்களுக்கு உயிர் சேதம் விளைவிக்கும். லெதர்பேக் ஆமைகள் கடல் சொறி மீன்களை உட்கொள்வதால் கடல் சொறி மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டு மீன்வளத்துக்கு பெரிதளவில் நன்மை தருகின்றன. இந்த வகை ஆமைகள் அழிவதால் கடல் சொறி மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. ஆமை ஓடுகளில் உள்ள `பர்னாக்கல்ஸ்' (கொட்டகைகள்) மீன்களுக்கும் இறால்களுக்கும் உணவாகின்றன.

இதனால் ஆமைகளின் ஓடும் சுத்தமாகின்றன. ஆமை முட்டைகள், இளம் ஆமைகள் மற்ற உயிரினங்களுக்கு இரையாகவும் அமைகின்றன. முதிர்ச்சியடைந்த ஆமைகள் சுறாக்களுக்கு இரையாகும்.

பவளப்பாறைகளில் ஆமைகளின் முக்கியத்துவம்:

கடல் பஞ்சுகள் (sponge) கடல் தரையில் வாழும் உயிரினங்கள் ஆகும். அவை வாழ்விடத்துக்காக பவளப் பாறைகளுடன் போட்டியிடும். கடல் பஞ்சுகளின் ஆதிக்கத்தால் பவளப்பாறைகள் வாழ்விடம் பாதிக்கப்பட்டு அழியும் வாய்ப்புண்டு. பவளப்பாறைகளின் எண்ணற்ற பயன்கள் இதனால் குறைவடைகிறது. `ஹாக்ஸ்பில் ஆமை' கடல் பஞ்சுகளை உண்பதன் மூலம் பவளப்பாறை இனங்களுக்கு பயன் தருகிறது. இவ்வாறு ஆமைகள் கடல் பஞ்சுகளை உட்கொள்வதால் கடல் பஞ்சுகளின் ஆதிக்கம் குறைந்து பவளப்பாறைகள் வாழ்விடம் அதிகரிக்கும்.

அடிமட்ட வாழ்விகள் வளர்ச்சியில் ஆமைகளின் பங்கு:

பச்சை ஆமைகள் கடல் பாசிகளை உட்கொள்பவை. கடல் பாசிகள் கடலின் மேற்பரப்பில் படர்ந்து வாழ்பவை. கடல் பாசிகளின் அடர்த்தியைப் பொறுத்து சூரிய ஒளி ஊடுருவும் அளவு வேறுபடும். கடல் பாசிகள் அடர்த்தியாகப் படர்ந்து இருந்தால் அடிமட்ட வாழ்விகளுக்கும் தன்னூட்ட நுண்ணுயிரிகளுக்கும் கிடைக்கவேண்டிய சூரிய ஒளி 3 சதவிகிதம் வரை குறைந்து அவற்றின் வளர்ச்சி பாதிப்படையும். பச்சை ஆமைகள் கடல் பாசிகளை உட்கொள்வதால் கடல் பாசிகளின் அடர்த்தி குறைந்து தன்னூட்ட நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்குத் தேவையான அளவு சூரிய ஒளி கிடைக்கும்.

ஆமை

கடல்தரை சுற்றுச்சூழலில் ஆமைகளின் முக்கியத்துவம்:

`லாகர்ஹெட்' ஆமைகள் தங்கள் உணவைத் தேடி தரையில் மேய்கின்றன. இந்த ஆமைகள் கடல் முள்ளெலி போன்றவற்றை உண்கின்றன. உணவு தேடுவதின் மூலம் வண்டல் மண்ணை துடைத்து தரையில் ஊட்டச்சத்து சுழற்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு தீவனம் தேட தரையை மேய்வதால் அடிமட்டத்தில் ஊட்டச்சத்து சுழற்சி இயற்கை முறையில் நிகழ்வதைவிட வேகமாக நிகழும். மேலும், கடல் அடிமட்ட உயிரினங்களுக்கும் கடல்தரைக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. கடற்கரையில் முட்டையிடுவதால் அப்பகுதியில் உள்ள மணல் பரப்புகளில் தாது உப்புகள் மற்றும் இதர சத்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

வாழ்விடம் வழங்குதல்:

`எபிபயான்ட்ஸ்' என்று அழைக்கப்படும் சிறிய உயிரினங்கள் ஆமை ஓடுகளில் ஒட்டிக்கொண்டு வாழும். `லாகர்ஹெட்' ஆமைகள் தன் ஓடு வழியாக `எபிபயான்ட்ஸ்' உயிரினங்களுக்கு இருப்பிடத்தை அளிக்கிறது. `கொலம்பஸ்' வகை நண்டுகள் அந்த எபிபயான்ட்ஸ்களை உண்ணும். `ஆலிவ் ரிட்லிஸ்' வகை ஆமைகளின் ஓடுகள் கடல் வழி செல்லும் பறவைகளின் ஓய்விடமாகத் திகழ்கின்றன. சிறிய வகை மீன்கள் ஆமையின் பின் மறைந்து வேட்டை மீன்களிடமிருந்து தப்பிச் செல்கின்றன.

ஆமைகளுக்கு நிகழும் ஆபத்துகள்:

ஆசிய கண்டத்தில் ஆமை ஓடுகள் பெட்டி, சீப்பு, தூரிகை, கைப்பிடி, காதணிகள், நகைகள் செய்வதற்கு பயன்படுவதால் மக்கள் அதை வேட்டையாடி வருகின்றனர். இழுவலையில் எதிர்பாராத விதமாகச் சிக்கிக் கொள்வதாலும் ஆமை இனங்கள் அழிந்துவருகின்றன. எண்ணெய்க் கசிவு போன்ற நிகழ்வுகளும் ஆமை அழிவுக்கு ஒரு காரணம். `கிரீன் சீ டர்டில்', `ஆலிவ் ரிட்லிஸ்' `லாகர்ஹெட்' போன்ற ஆமைகள் உணவுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. எனவே, இதைத் தடுக்க பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இழுவலையில் ஆமைகள் மாட்டி இறக்காமல் இருக்க `ஆமை விலக்கு இயந்திரம்' (turtle extruding device –TED) பொருத்தப்பட்ட வலைகளைப் பயன்படுத்த சட்டம் உள்ளது.

ஆமை

உலகளவில் ஆமை பாதுகாப்புச் சட்டம்:

``அழிந்து வரும் இனங்களுக்கான சட்டம்” (Endangered species act-1973) (அமெரிக்கா) இச்சட்டம் லாகர்ஹெட், ஹாக்ஸ்பில் வேட்டைக்கு எதிரானவை. ``ஆமை பாதுகாப்பு மற்றும் நிவாரண சட்டம்” கோஸ்டா ரிக்கா (2002), ``அமெரிக்கா ஆமை பாதுகாப்பு சட்டம் 2008”, (பனாமா), ``அழிவின் விழிம்பில் உள்ள உயிரினங்கள் வணிகத் தடைச் சட்டம்” போன்ற சட்டங்கள் உலகளவில் ஆமைகளைப் பாதுகாத்து வருகின்றன. ஆமைகள், சுற்றுச்சூழல் பராமரிப்பில் பெரிய பங்கு அளிப்பவை. கடல்தரையைச் சுத்தமாக்குதல், பவளப்பாறைகளைப் பாதுகாத்தல், மற்ற உயிரினங்களுக்கு இருப்பிடம் அளித்தல், சூழ்நிலை மண்டலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அதிகப்படியான சொறி மீன்கள் எண்ணிக்கை குறைத்தல், கடல்பாசிகளை மேய்தல், ஊட்டச்சத்து சுழற்சிக்கு உதவுதல், எபிபயான்ட்ஸ்- உயிரினங்களுக்கு உணவு அளித்தல், நண்டுகளுக்கு உணவு அளித்தல், கடல் பறவைகளுக்கு ஓய்விடம் தருதல் எனப் பல உதவிகர செயல்களைச் செய்து வருகின்றன. இருந்தாலும் மனிதர்கள் தங்களின் மருத்துவ, வணிக சுய லாபத்துக்காக சட்ட விரோதமாக வேட்டையாடுகின்றனர். தற்போது 40 சதவிகிதம் ஆமை வகைகள் அழியும் நிலையில் உள்ளன. அரசு இயற்றியுள்ள சட்டங்களைக் கடைப்பிடித்தால் ஆமை இனத்தையும் கடல் வளத்தையும் பாதுகாக்க முடியும்.

ச.ஆஹிக் அஹமத், ப.பவின்குமார், முனைவர் ப.அகிலன்,

டாக்டர். எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி

மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி.

திருவள்ளூர் மாவட்டம்.



source https://www.vikatan.com/news/environment/here-is-the-reason-why-we-should-protect-turtles-to-protect-ocean-environment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக