Ad

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

`சச்சின் யார்?' எனக் கேட்ட ஷரபோவாவிடம் `மன்னித்துவிடு மரியா' என உருகும் மலையாளிகள் - என்ன காரணம்?

கடந்த 2015-ம் ஆண்டு டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில், இந்தியர்கள் பலரும் அவரைக் கண்டபடி வசைபாடி கமென்ட்டுகளை பதிவிட்டிருந்தனர். குறிப்பாக மலையாளிகள் பலரும் அந்தச் சமயத்தில் அவருக்குக் கண்டனம் தெரிவித்துப் பதிவுகளை இட்டிருந்தனர்.

மரியா ஷரபோவா

ஆனால், தற்போது ஷரபோவாவை புகழ்ந்து ஏராளமான கமென்ட்டுகளை மலையாளிகள் பதிவிட்டு வருகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் காரணம் என்ன தெரியுமா?

வசைபாடக் காரணம் என்ன?

2015-ம் ஆண்டு நடந்த நேர்காணல் ஒன்றில், `சச்சின் டெண்டுல்கர் யாரென்று எனக்குத் தெரியாது' என்று கூறியிருந்தார் மரியா ஷரபோவா. அதன் காரணமாகத்தான் சமூக வலைதளங்களில், அவரை ஏகத்தும் திட்டி பதிவுகள் போடப்பட்டிருந்தன.

சச்சின்

Also Read: ரிஹானா பற்றவைத்த தீ; கிரிக்கெட்டர்களுக்கு டாப்ஸியின் பதிலடி; பிசிசிஐ அழுத்தம் - என்ன நடக்கிறது?

மன்னிப்புக் கேட்கக் காரணம்?

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த சர்வதேச பிரபலங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகக் கடந்த புதன்கிழமை அன்று கருத்துப் பதிவிட்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர். இதனால் சச்சின் டெண்டுல்கர் மீது ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடாகத்தான் மரியா ஷரபோவாவிடம் தற்போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

சில பதிவுகள்!

மரியா ஷரபோவா தனது பேஸ்ஃபுக் பக்கத்தில் பதிவிட்ட கடைசி இரண்டு புகைப்படங்களின் கமென்ட் செக்‌ஷனில் அவரிடம் மன்னிப்புக் கேட்டு ஆயிரக்கணக்கான கமென்ட்டுகள் போடப்பட்டு வருகின்றன. கமென்ட் செய்பவர்களில் அநேகம் பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

ஷரபோவாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட ஒரு கமென்ட்டில், ``மன்னித்துவிடுங்கள் மரியா. சச்சினை எங்களுக்கு வீரராகத்தான் தெரியும். மனிதராகத் தெரியாது. நீங்கள் கணித்தது சரிதான். நீங்கள் லெஜண்ட்!'' என்று பதிவிட்டிருக்கிறார்.

மரியா ஷரபோவா

மற்றொருவர், ``லாரி முழுவதும் உங்களுக்காக மன்னிப்பு ஏற்றி வருகிறேன்'' என்று பதிவிட்டிருந்தார். இன்னொரு கமென்ட்டில், ``சரியான புரிதல் இல்லாத காலகட்டத்தில் சச்சினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உங்களைத் திட்டிவிட்டேன். மன்னித்து விடுங்கள்'' என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் சிலர், ``நீங்கள் கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்கு வர வேண்டும். திருச்சூர் பூரம் பண்டிகையில் கலந்து கொள்ள வேண்டும்'' என்றெல்லாம் கமென்ட்டுகளைத் தட்டியிருந்தனர்.

குழம்பிய மரியா!

2015-ல் நடந்த சம்பவத்துக்காக இப்போது பலரும் மன்னிப்பு கேட்டு வருவதை அறிந்த மரியா, ``யாருக்கேனும் ஆண்டுகள் பற்றி குழப்பம் வந்துவிட்டதா?!'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/viral/malayalies-says-sorry-to-maria-sharapova-for-this-sachin-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக