Ad

வியாழன், 10 டிசம்பர், 2020

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா - ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரேண்யேஸ்வரர் கோயிலில் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீ சனீஸ்வரபகவான். இக்கோயிலில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள சனிப் பெயர்ச்சி விழாவில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் 

திருநள்ளாறில் பிரசித்திபெற்ற சனீஸ்வரபகவான் சந்நிதியில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வரரை தரிசனம் செய்வர். இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா வருகிற  27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு நடக்கிறது. அன்று சனீஸ்வரர், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

சனிப்பெயர்ச்சி விழாவுக்கு இன்னும் 16 நாள்களே உள்ளதால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை கலெக்டர் அர்ஜூன்சர்மா, கோயில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கவனித்து வருகிறார்கள்.

சனிப்பெயர்ச்சி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் கலெக்டர் அர்ஜூன்சர்மா கூறியதாவது:

"திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழா கொரோனா பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு வருகிற 27-ந் தேதி சமூக இடைவெளியோடு நடைபெறும். விழாவில் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

ஆன்லைன் முகவரி www.thirunallarutemple.org ஆகும். ஆன்லைனில் முன் பதிவு செய்யாதவர்களுக்கு சனிப்பெயர்ச்சி அன்று கோயில் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

திருநள்ளாறு

இந்த நடைமுறை சனிப்பெயர்ச்சி விழா அன்றும், சனிப்பெயர்ச்சி விழாவுக்கு முந்தைய வார இறுதி நாள்களான (19, 20, 26-ந் தேதிகள்) மற்றும் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு வரும் 4 வார இறுதி நாள்களிலும் (ஜனவரி 2, 3, 9, 10, 16, 17, 23, 24-ந் தேதிகள்) நடைமுறையில் இருக்கும். சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்

உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா அறிகுறி இருந்தால், உரிய சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

சனிப்பெயர்ச்சியன்று கோயில் சார்பில் 3 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நளன்குளத்தில் சனிப்பெயர்ச்சி நாளில் பக்தர்கள் புனித நீராடலாமா, வேண்டாமா... அல்லது வேறு மாற்று ஏற்பாடுகள் குறித்து உரிய ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும்.

வெளிமாவட்டங்களிலிருந்து பக்தர்கள் திருநள்ளாறுக்கு வந்து செல்லத் தேவையான பஸ் வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. மேலும், ரூ.1000, ரூ.600 மற்றும் ரூ.300 தனிநபர் விரைவு தரிசன டிக்கெட், சிறப்பு நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யலாம். இந்தத் தரிசன டிக்கெட்டை இலவச கார், வாகன பாஸாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்" என்றார்.



source https://www.vikatan.com/spiritual/news/thirunallar-sanipeyarchi-ceremony-devotees-need-to-do-online-registration

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக