Ad

சனி, 4 டிசம்பர், 2021

``இயக்கத்தை சீரழித்து விடாதீர்கள்... இனியும் என்னால் சும்மா இருக்க முடியாது!" - சசிகலா அறிக்கை

``இயக்கத்தை சீரழித்து விடாதீர்கள்... இனியும் என்னால் சும்மா இருக்க முடியாது!" - சசிகலா அறிக்கை

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற நிர்வாகிகளை, அந்த கட்சியினரே தாக்கி விரட்டியடித்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

`கழகத்தினர் ஒற்றுமையுடன் இருந்தால் தான் எதிரிகளை வெல்ல முடியும்!' என்ற தலைப்பில் சசிகலா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் நம் இருபெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்திருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும் போது ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. என்றைக்கு நம் புரட்சித் தலைவி நம்மை விட்டுச் சென்றார்களோ, அன்றுமுதல் இன்றுவரை நம் இயக்கத்தில் நடைபெறும் செயல்களைப் பார்க்கும்போது என் மனது மிகவும் வேதனைப்படுகிறது. எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதித்து அவர்களுடைய நலனில் அக்கறை காட்டும் போதுதான், அதைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் அந்த இயக்கத்தின் மீது ஒரு நல்ல எண்ணமும் நம்பிக்கையும் வரும். எந்த ஒரு இயக்கத்துக்கும் கொடி பிடிக்கும் தொண்டர்கள் தான் தேவையே ஒழியத் தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல.

சசிகலா

திரு.ஓமப்பொடி பிரசாந்த் சிங் அவர்கள் புரட்சித் தலைவரின் அன்பைப் பெற்றவர் அதுமட்டுமல்லாமல் திரு பிரசாத் சிங் அவர்கள் தலைவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்தால் தான், தனக்குத் திருமணம் என்று திருமண மேடையில் வெகு நேரம் காத்திருந்து, திருமணம் செய்து கொண்டவர். அதேபோன்று எளிய தொண்டரான திரு.ராஜேஷ் அவர்களும், தலைமை கழகத்திலேயே தாக்கப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. இன்று நம் தொண்டர்களின் நிலையை இருபெரும் தலைவர்களும் கண்ணீரோடு தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கட்டிக்காத்த இந்த இயக்கத்தைச் சீரழித்து விடாதீர்கள். இனியும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு என்னைப் போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது.

தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது விழும் அடியாகவும், என் மீது விழுந்த அடியாகவும் நான் நினைக்கிறேன். ஒரு தலைமையால் தான் அந்த வலியை உணரமுடியும். ஆணிவேரான தொண்டர்கள் இருந்தால்தான் இந்த இயக்கம் ஆலமரமாகத் தழைத்தோங்கும். இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து நம் தலைவர்கள் காட்டிய வழியில் ஒற்றுமையுடன் இருந்தால்தான் வரும் நாள்களில் நம் எதிரிகளை வெல்ல முடியும். அதன் அவசியத்தை நாம் உணர்ந்ததாக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-05-12-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக