இரண்டாவது முறையாக திருமங்கலத்தில் போட்டியிடும் ஆர்.பி.உதயகுமார் கிராமத்து வீடுகளில் டீ குடிப்பது, டீக்கடைகளில் மாஸ்டராகி டீ போடுவது, முதியோர் காலில் விழுவது என தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில், பல்வேறு ஊர்களில் பிரசாரம் செய்த அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி, "கடந்த சட்டமன்ற தேர்தலில் என் தந்தை இங்கு போட்டியிட்டார். அவரை 24,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். கடந்த ஐந்து வருடங்களாக நீங்கள் அளித்த கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார்.
24 மணி நேரமும் தொகுதி மக்களின் நலனைப் பற்றி சிந்தித்துக்கொண்டே இருப்பார். எங்கள் குடும்பத்தினர் திருமங்கலம் தொகுதி மக்களுக்காக எனது தந்தையை அர்ப்பணித்து விட்டார்கள். திருமங்கலம் தொகுதியில் அனைத்து கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேபோல் இந்தப் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. 33 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் தொகுதி உச்சப்பட்டியில் துணைக்கோள் நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது.
திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா காலத்தில் அரிசி தொகுப்பு, காய்கறி தொகுப்பு, கோதுமை தொகுப்பு, கபசுரக் குடிநீர், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் வேட்பாளராக எனது தந்தையை முதல்வரும், துணை முதல்வரும் அறிவித்துள்ளனர்.
கடந்த ஐந்தாண்டுகளில், ஐம்பது ஆண்டுகாலம் செய்யவேண்டிய பல திட்டங்களை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
மக்கள் நலனே தன் நலம் என்று இரவு பகல் பாராது தன்னை அர்ப்பணித்து உழைத்துவரும் என் தந்தைக்கு வாக்கு அளித்து மீண்டும் தமிழக முதலமைச்சராக எடப்பாடியாரை அரியணையில் அமர்த்தும் வகையில் திருமங்கலம் தொகுதியில் அதிகமான வாக்குகளை பெற்ற தொகுதி என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும்" என்றார்.
பிரியதர்ஷினியின் பிரசாரம் திருமங்கலம் தொகுதியில் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
source https://www.vikatan.com/news/election/rb-udhaykumar-daughter-election-campaign
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக