Ad

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

முடிவடைந்தது நான்கு ஆண்டு சிறை தண்டனை! - சசிகலாவை தொடர்ந்து விடுதலையானார் இளவரசி

கடந்த 2017-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனை காலம் முடிந்து, மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கடந்த ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

சசிகலா, இளவரசி

சசிகலாவைத் தொடர்ந்து, இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுக் கடந்த ஜனவரி 23-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த அவர் கடந்த 2-ம் தேதி மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டார்.

இளவரசி, தனக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையான ரூ.10 கோடியை ஏற்கனவே செலுத்திவிட்டார். முன்னதாக, இளவரசி தனது தண்டனை காலத்தில் பிணையில் வெளியே வந்த காரணத்தினால் அவரது விடுதலை தாமதம் ஆகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இளவரசியின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைந்தது. சிறைத்துறையின் விடுதலை நடைமுறைகள் அனைத்தும் முடிந்து விடுதலை செய்யப்பட்டார்.

சசிகலா

சிறையில் இருக்கும் போது சசிகலாவுக்கு வந்த கடிதங்கள் அனைத்தையும் சிறைத்துறையினர், இளவரசியிடம் ஒப்படைத்தனர். சிறையிலிருந்து இளவரசியை, அவரின் மகன் விவேக், வழக்கறிஞர் ராஜா செந்தூரப்பாண்டியன் ஆகியோர் சசிகலா தங்கியுள்ள சொகுசு பங்களாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது.

Also Read: `அன்று பல கோடியில் திருமணம்... இன்று 10 கோடிக்குத் திண்டாட்டம்' - பரிதாபத்தில் சுதாகரன்!

இவர்கள் இருவரும், வரும் 8-ம் தேதி பெங்களூரிலிருந்து சென்னை வரத் திட்டமிட்டுள்ளனர். சசிகலா, இளவரசி இருவரும் விடுதலையான நிலையில், தற்போது சுதாகரன் மட்டும் சிறையில் இருக்கிறார். சுதாகரனின் தண்டனைக் காலம் கடந்த மாதமே முடிவடைந்த போதிலும், அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தாததால் அவரின் விடுதலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/iavarasi-was-released-after-serving-four-years-in-prison

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக