Ad

வெள்ளி, 22 அக்டோபர், 2021

கொக்கையாறு நிலச்சரிவு: கட்டியணைத்தவாறே புதையுண்ட பிஞ்சுகள்! - கண்ணீரில் கரைகிறது கடவுளின் தேசம்

கேரள மாநிலம் பீர்மேடு தாலுகாவில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியான கொக்கையாற்றில் காபி, வாழை உள்ளிட்ட விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலி தொழிலாளிகளாக இருக்கிறார்கள். மலைமேடுகளில் சிறுக சிறுக சேர்த்து வைத்த சேமிப்பைக் கொண்டு சிறிய அளவிலான வீடுகளை கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தனர்.

வழக்கம் போல அன்றைய விடியலும் கொக்கையாறு பகுதி மக்களுக்கு தாமதமாக இருந்தது. வழக்கத்தை விட கூடுதல் மழை என்பதால் விவசாயப் பணிகளுக்கு யாரும் வெளியே செல்லவில்லை. அவரவர் வீடுகளில் முடங்கி கிடந்தனர். தாங்களும் நிலச்சரிவில் சிக்கி மடிவோம் என அவர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். எனவே தாழ்வான பகுதிகளை நோக்கி ஓடும் வெள்ளைத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

விடியோ

அப்போது தொடர்மழையால் மண்ணின் ஈரத்தன்மை அதிகரித்து பிடிமானத்தை இழந்துகொண்டிருந்தது. அக்டோபர் 16 காலை 10.30 மணியளவில் குழந்தைகள் வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை அவர்களது அம்மா விடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போதும் அவர்கள் நிகழவிருக்கும் கோரத்த அறிந்திருக்கவில்லை. அந்தகணம் நிலம் சரிந்து வீட்டையே முழுங்கி கொண்டது. அதில் சிக்கிய குழந்தைகளோ அப்போதும் கட்டியணைந்தவாறே இறந்திருப்பது மீட்புப் பணியின் போது தெரியவந்தது.

அந்தக் காட்சியை கண்ட மீட்புப்பணியினர் மட்டுமில்ல கடவுளின் தேசமான கேரளமே கண்ணீர் சிந்தியது.

நிலச்சரிவு

அன்று உயிரிழந்தவர்களில் ஆன்சி என்பவரைத் தவிர மற்றவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். பைஷலின் என்பவரின் குழந்தைகளான அப்ஷால், அபியான் மற்றும் பைஷலின் சகோதரி பவுசியாவின் குழந்தைகள் அமீன்ஷியாத், அம்னா ஆகியோர் எப்போதும் ஒன்றாகவே விளையாடுவர்களாம்.

கொக்கையாறில் கனமழை பெய்தபோது வீட்டின் வழியாக ஆர்ப்பரித்து ஓடிய வெள்ளத்தை பவுசியா தனது செல்போனில் விடியோ எடுத்துள்ளார். மேலும் அந்த விடியோவை தனது நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

அந்த நேரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அவர்கள் இறந்துள்ளனர். நிலச்சரிவின் போதும் எடுக்கப்பட்ட விடியோவில் அமீன்ஷியாத், அம்னா ஆகியோர் பயத்தில் நடுங்கியவாரு இருந்துள்ளனர்.

எப்போதும் ஒன்றாகவே விளையாடிக் கொண்டிருந்த அப்ஷால், அபியான் மற்றும் அம்னா ஆகியோர் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தவாறு இறந்துள்ளதைக் கண்டு மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் கலங்கியுள்ளனர்.

செந்தில்குமார்

மூணாறு பகுதி சமூக ஆர்வலர்களைக் கொண்ட அவசரகால மீட்புக் குழுவைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் விசாரித்தோம். ``கடந்த ஆண்டு மூணாறு ராஜமலை பெட்டிமுடியில் நிலச்சரிவு ஏற்பட்டு 70 பேர் உயிரிந்தனர். அப்போது அட்வென்ஞ்சர் ஆக்டிவிட்டிஸில் ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டோம். ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழு இருப்பினும் இப்பகுதியை நன்கு அறிந்தவர்களால் எளிதில் மீட்புப் பணியை செய்ய முடிந்தது. இதையடுத்து தான் மூணாறு ஊராட்சியில் அவசரகால மீட்பு குழு உருவாக்கப்பட்டது. நாங்கள் மீட்புப்பணியில் ஈடுபடும் போது பெரிதும் சங்கடப்படுவது குழந்தைகளின் சடலங்களை எடுக்கும்போதுதான். அந்த பிஞ்சு முகங்களை பார்க்கக்கூடாது என்று இறைவனை வேண்டி கொண்டது உண்டு. ஆனாலும் அவ்வாறான சூழல்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்று கூடிய உறவினர்கள், நண்பர்கள் மொத்தமாக நிலத்தில் புதைந்தனர். அதுபோல விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கட்டியணைந்தவாறு இறந்துகிடந்தது எங்களை கண்கலங்க வைத்துவிட்டது. இதுதொடரக் கூடாது என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.



source https://www.vikatan.com/news/accident/kokkaiyaru-landslide-the-while-state-is-crying-for-the-kids-who-lost-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக