Ad

செவ்வாய், 25 மே, 2021

`கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை!' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து அவர், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கொரோனா‌ பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அவர், கொரோனா தடுப்பூசி முகாம்களை தொடங்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.செந்தில்ராஜ் ஆகியோரும் ஆய்வு செய்தனர்.

அமைச்சர்கள் ஆய்வு

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளோம். தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்திலிருந்து, தற்போது 34 ஆயிரத்து 800ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. இதுவரை 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 18 வயது முதல் 44 வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக ரூ.46 கோடி செலவில் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவழைக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக 3.50 கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்காக உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடான சூழல் இருந்தது.

தடுப்பூசி முகாம்

ஆனால், தமிழக சுகாதாரத் துறை, தொழில்துறை, மின்சார வாரியத் துறைகளின் முயற்சியால் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளிலிருந்து ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு தற்போது மருத்துவ ஆக்சிஜனின் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டாலும்கூட, அதனை சமாளிக்கக் கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றவர், கறுப்பு பூஞ்சைத்தொற்று குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், ”நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கறுப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், கொரோனா பாதிப்பில் உள்ளவர்களுக்கும் கறுப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்துறை அலுவலர்கள் அடங்கிய 10-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின் போது, "ஸ்டீராய்டு" கொடுப்பதாலும், அசுத்தமான தண்ணீரிலிருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து, அதை மூச்சுககாற்றாக உள்ளிழுப்பதன் மூலமாகவும் கறுப்பு பூஞ்சைத் தொற்று ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள்.

ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தில் ஆய்வு

இது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு அதற்கான வல்லுனர்கள் குழு, இரண்டு நாட்களில் ஆராய்ச்சியை தொடங்கும். கொரோனா உயிரிழப்பு குறித்த உண்மையைச் வெளிப்படையாகச் சொன்னால்தான் மக்களிடையே சிறு பயமும், அது குறித்த விழிப்புணர்வும் வரும். எனவேகொரோனா தொற்று உயிரிழப்புகளில் எந்த ஒளிவு மறைவும் இல்லை” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/there-is-no-luminosity-fading-in-the-corona-death-toll-says-minister-ma-subramanian

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக