Ad

வியாழன், 27 மே, 2021

வாணியம்பாடி: 4 பெண்களை திருமணம் செய்த பைனான்ஸியர்! - 4வது மனைவியின் மகளிடமும் அத்துமீறிய கொடூரம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 47). பைனானஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இந்த நபர், இதுவரை நான்கு பெண்களை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். முதல் மனைவிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்த நிலையில், கருத்து-வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால், பெண் குழந்தைகளை பாரதியிடமே விட்டுவிட்டு இரண்டாவது மனைவி எங்கேயோ சென்றுவிட்டார். இதனால், மூன்றாவது திருமணம் செய்திருக்கிறார் பாரதி. அவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்திருக்கிறார்கள்.

சிறுமி - Representational Image

6 பிள்ளைகளுடனும் மூன்றாவது மனைவியுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார் பாரதி. இந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக சென்னையில் சில தினங்கள் இருந்த பாரதிக்கு, அங்கு தங்கியிருந்த வேறொருவரின் மனைவியுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எதைப்பற்றியும் கவலைப்படாத சென்னைப் பெண், கணவனை உதறி தள்ளிவிட்டு இரண்டு மகள்களை அழைத்துக்கொண்டு பாரதியுடன் வாணியம்பாடிக்கு வந்துவிட்டார். தனது வீட்டிற்கே நேராக அழைத்துச்சென்று தங்க வைத்த பாரதியின் செயலால் அதிர்ந்துப் போனார் மூன்றாவது மனைவி.

அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. பாரதியுடன் வாழ பிடிக்காமல், குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துச் செல்ல விருப்பமில்லாமல் மூன்றாவது மனைவியும் பிரிந்துச் சென்றுவிட்டார். சென்னையிலிருந்து அழைத்துவந்த பெண்ணை நான்காவது திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்த தொடங்கினார் பாரதி. இந்த நிலையில், நான்காவது மனைவியின் 10 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இரவில், அனைவரும் தூங்கியப் பின்னர் அந்த சிறுமியிடம் தொடர்ந்து அத்துமீற முயற்சித்திருக்கிறார் பாரதி. சமீபத்தில்தான், தன் மகளுக்கு நேரவிருந்த கொடுமையை கண்கூடாகப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார் நான்காவது மனைவி.

பாரதி

இதுகுறித்து, வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், பாரதியை கைதுசெய்து சிறையிலடைப்பதற்காக கொரோனா பரிசோதனை செய்தனர். அதில், அவருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதேசமயம், பாரதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐந்தாவதாக மேலும் ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்திருக்கிறது. பைனான்ஸியர் பாரதியின் அடுத்தடுத்த திருமணங்களும், வளர்ப்பு மகளிடமே அத்துமீறிய கொடூர செயலும் காவல்துறையினரையே திகைக்க வைத்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/vaniyambadi-10-year-old-girl-sexually-harassed-mothers-husband-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக