Ad

வியாழன், 4 பிப்ரவரி, 2021

`உள்ளுறுப்புகள் தூய்மையாகும்; குடல் புற்றுநோயைத் தடுக்கும்!' -சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மகத்துவங்கள்

பொதுவாக கிழங்கு வகைகளைச் சாப்பிட்டால் வெயிட் போடும், வாயுத் தொல்லையை உண்டாக்கும் என்று சொல்லியே அவற்றை ஒதுக்கிவிடுவோம். ஆனால், எக்கச்சக்கமான மருத்துவ குணங்களைத் தந்து, இயற்கையாய் உடல் முழுவதையும் சுத்தம் செய்கிறது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. வாய் முதல் ஆசனவாய் வரையுள்ள உறுப்புகளில் ஏற்படும் சில புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

முதன் முதலில் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பயிரிடப்பட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கை, கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயினுக்கு திரும்பியபோது கொண்டு சென்றுள்ளார். இங்கிருந்து உலகம் முழுவதும் பரவிய சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆசிய பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Sweet Potato

வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ளது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் சத்துகளை அளித்து உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

இந்தநிலையில், சமீபகாலமாக மருத்துவர் ஆஷா லெனின் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பயன்கள் குறித்துப் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில், சர்க்கரை வள்ளிக்கிழங்கு நுரையீரலில் ஏற்படும் எம்பஸீமா நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என்றும், குடல் புற்றுநோயில் தொடங்கி உடலிலுள்ள அனைத்து உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது என்றும், இது உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைத்து, உடல் முழுவதையும் சுத்தம் செய்து, உடலை சர்வீஸ் செய்யும் என்றும் மருத்துவர் ஆஷா லெனின் கூறியிருந்தார்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இயற்கையாக இத்துணை மருத்துவ குணங்களா, இப்படி அதனால் உடல் முழுவதையும் சுத்தம் செய்ய முடியுமா என்ற கேள்விகளோடு சென்னை, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர் எஸ்.டி.வெங்கடேஷ்வரனிடம் பேசினோம்.

எஸ்.டி.வெங்கடேஷ்வரன்

``சர்க்கரை நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே போனதாக அர்த்தம் இல்லை. உடலைப் பராமரித்துக் கொள்ளத் தொடங்கும் தருணம் அது. உடலிலுள்ள குளூக்கோஸ் அளவை அதிகரிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான அனைத்து சக்தியையும் கொடுக்கும். இதை சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்று சொல்வதை விட சர்க்கரை கொல்லிக் கிழங்கு என்றுதான் சொல்ல வேண்டும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின் உள்ளிட்ட சில சத்துகள் சில வகையான புற்றுநோய் வராமல் தடுக்கும். புற்றுநோயை குணமாக்க உதவுமா என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.

உருளைக்கிழங்கை விட சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கலோரிகள் அதிகம். இதைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். இதிலிருக்கும் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் எலும்புகள் வலுப்பெற உதவும். அனைத்திற்கும் மேல், வயது அதிகமாக அதிகமாக பார்வை மங்கும், சருமத்தில் சுருக்கம் ஏற்படும். இது போன்ற வயது முதிர்வினால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைத்து என்றும் இளமையாகக் காட்டும் சிறந்த உணவு சர்க்கரை வள்ளிக்கிழங்கு.

தினம் தினம், நாம் சாப்பிடும் உணவு மலக்குடலில் தங்கும் போது, மலச்சிக்கல் ஏற்பட்டு நாளடைவில் மலம் இறுகி குடல் புற்றுநோயாக மாறிவிடும். வயிற்றைச் சுத்தம் செய்ய அந்தக் காலத்தில் விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்வோம். ஆனால் தற்போது அதுபோன்ற பழக்கங்கள் இல்லை. குடலை இயற்கையாகச் சுத்தம் செய்ய சர்க்கரை வள்ளிக்கிழங்கை எடுத்துக்கொள்ளலாம்.

Health (Representational Image)

Also Read: புகை, மது, உடல் பருமன்... உயிரைப் பறிக்கும் உணவுக்குழாய் புற்றுநோய்... எதிர்கொள்வது எப்படி?

வாரத்தில் 5 நாள்கள் வேலை பார்த்தால், இரண்டு நாள்கள் ரெஸ்ட் எடுப்பது போல, அவ்வப்போது நாம் விரதம் மேற்கொள்வதன் மூலமும் குடலைச் சரி செய்து கொள்ள முடியும்." என்றார்.

குடல் புற்றுநோய் பாதிப்புகளுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு இயற்கையான தீர்வாகுமா என்பது குறித்து புற்றுநோயியல் மருத்துவர் ரத்னா தேவி'யிடம் பேசினோம்..!

``மனிதர்களின் உடலில் பி6 வைட்டமின் குறைபாடு ஏற்படும் போது, மகிழ்ச்சி ஹார்மோன் என்று சொல்லப்படும் டோபமைன் குறைவதால் மன அழுத்தம், மனக்கவலை போன்ற மன ரீதியான தொல்லைகள் ஏற்படும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பி6 வைட்டமின், அதிகம் இருப்பதால் உடலில் டோபமைன் ஹார்மோன் சுரக்கும் போது, மனதில் மகிழ்ச்சியை அதிகரித்து நம்மை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளதால் வைட்டமின் ஏ சத்தை உடலுக்கு அதிகம் அளித்து கண் சம்பந்தமான நோய்கள் வராமலும் தடுக்கிறது. புகை பிடிக்கும் போது, குடல் வீங்கத் தொடங்கும். இதுபோன்ற, உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைக்கவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உதவும்.

வெளிநாட்டவர்கள் அசைவ உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். நார்ச்சத்து குறைவாக உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்வதால், தினம் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாதவர்களாக இருப்பார்கள். இதுவே, உடலில் நச்சுத் தன்மையை அதிகரித்து நாளடைவில் குடல் புற்றுநோய் (Colon Cancer) வருவதற்கு காரணமாகிறது. தமிழர்களைப் பொறுத்தவரையில் காய்கறிகள், நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள்தான். இருப்பினும் பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ் என்று பெருகி வரும் துரித உணவு கலாசாரத்தால், போதிய நார்ச்சத்து கிடைக்காமல், தினமும் சரிவர மலம் கழிக்காமல் இங்குள்ளவர்களுக்கும் குடல் புற்றுநோய் வருவது அதிகரித்திருக்கிறது.

மருத்துவர் ரத்னா தேவி

சர்க்கரை வள்ளிக்கிழங்கு கிடைக்கும் சீசனில், அதை உட்கொண்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து, மலம் கழிப்பதில். உள்ள சிக்கலைத் தீர்த்து, அதனால் ஏற்படும் குடல் புற்றுநோயை வராமல் தடுக்கும்.

குழந்தைகள் பிறந்தது முதல் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பார்கள். 7 மாதங்களில் இருந்து உணவு கொடுக்கத் தொடங்கலாம். அப்போது, தொடக்கத்திலிருந்தே சர்க்கரைவள்ளிக் கிழங்கை மசித்துக் கொடுத்து வந்தால், குழந்தைகள் வளர்ந்த பிறகும் குடல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க முடியும். சிறு வயது முதல் சர்க்கரைவள்ளிக் கிழங்கு எடுத்துக்கொண்டால், குடலுக்கு அது பழகிவிடும், அதிலிருக்கும் நார்ச்த்து மலக்குடலை சரி செய்து புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வருவதைத் தடுக்கும்." என்றார்.



source https://www.vikatan.com/health/healthy/doctors-explain-health-benefits-of-sweet-potato-and-how-it-prevents-colon-cancer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக