Ad

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

திருச்சி:`ஸ்டாலின் முதல்வரானால்தான் ஏழு பேர் விடுதலை சாத்தியமாகும்!’ - ஆர்.எஸ்.பாரதி

``பிப்ரவரி 28 -ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது. அதற்கான வேலைகளில் தி.மு.க எப்போதோ தயராகிவிட்டது” என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

தி.மு.க வழக்கறிஞர்கள் அலுவலகம்

திருச்சி மாவட்ட தி.மு.க வழக்கறிஞர்கள் களப்பணி அலுவலகத்தை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ``தேர்தல் ஆணையம் தொடர்ந்து பல புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது. தி.மு.க.வுக்கு வரும் தேர்தல் சவாலாக இல்லை. பல தேர்தலைச் சந்தித்தவர்களுக்கும் சட்டப்பூர்வமான அறிவுரைகள் தேவைப்படுகிறது. எனவே வழக்கறிஞர்களை வைத்துப் பல முன் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறோம்.

கமல் தி.மு.க கூட்டணியில் இணைவாரா என்பது குறித்து எங்களுக்கு ஜோசியம் தெரியாது. தி.மு.க ஏற்கெனவே ஆட்சியிலிருந்த போதும் முரண்பட்ட கொள்கை கொண்ட கட்சியினர் மத்தியில் ஆட்சியிலிருந்துள்ளனர். இருந்தபோதும் நாங்கள் சிறந்த ஆட்சியைத் தந்துள்ளோம். வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க ஆட்சியிலிருந்தாலும் சிறந்த முறையில் ஆட்சி செய்வோம். மத்தியில் இருப்பவர்களோடு கூட்டாட்சி செய்ய அறிவுக் கூர்மை இருந்தால் போதும்.

ஸ்டாலின் முதலமைச்சரானால்தான் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சாத்தியமாகும். தற்போது ஆட்சியில் உள்ள அ.தி.மு.க-வினரால் அவர்களை விடுதலை செய்யும் தைரியம் இல்லை. பிப்ரவரி 28-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க உள்ளார்கள். அது குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 20 நாட்களே உள்ளதால் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து அ.தி.மு.க-வால் எதுவும் செய்ய இயலாது.

தி.மு.க கூட்டணியில் புதிய கட்சிகளைச் சேர்ப்பது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான் முடிவெடுப்பார். சசிகலாவின் கணவர் நடராஜன் தி.மு.க விலிருந்து உருவானவர். தற்போது தி.மு.க-வுக்கும் சசிகலாவிற்கும் எந்த உறவும் இல்லை" என்றார்.

தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு

பேட்டியின் போது அருகிலிருந்த தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த நேரு, ``அவர்கள் ஏமாற்றி வருகிறார்கள்” என்றார். மேலும், ``தி.மு.க வை தோல்வி அடையச் செய்ய வேண்டும் எனத் தினகரன் கூறுகிறார். அவருக்கும் தி.மு.க-வுக்கும் எந்த உறவும் இல்லை" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/only-stalin-can-release-the-seven-members-says-dmks-rs-bharathi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக