Ad

வியாழன், 12 நவம்பர், 2020

37 ஆண்டுகளுக்குப் பின் நீலகிரியில் தென்பட்ட அரிய பறவை... அதிசயித்த ஆய்வாளர்கள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கேத்தி பள்ளத்தாக்கு பகுதியில் மலை காய்கறி விவசாயம் மேற்கொண்டு வருபவர் சுப்பிரமணி. இவரது விளை நிலத்திற்கு அருகில் உள்ள ஒரு கேரட் தோட்டத்தில் பறவை ஒன்று பறக்க முடியாமல் தவிப்பதைக் கண்டு, அதனருகில் சென்று காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா எனப் பார்த்துள்ளார்.

Lesser Cuckoo

இதுவரை அந்தப் பகுதியில் அவர் கண்டிராத வகையில் அந்தப் பறவை இருப்பதைக் கண்ட அவர், செல்போனில் புகைப்படம் எடுத்துவிட்டு, காக்கை மற்றும் பூனைகளிடம் இருந்து காப்பாற்றும் நோக்கில் அருகிலுள்ள பகுதியில் பாதுகாப்பாக விடுவித்துள்ளார்.

பின்னர், இந்தப் பறவையின் புகைப்படங்களை நண்பர்களின் உதவியுடன் பறவையியல் ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ளார். அதைக் கவனித்த ஆய்வாளர்கள், [Lesser Cuckoo] (Cuculus poliocephalus), என்ற அரியவகை சிறுகுயில் இனத்தைச் சேர்ந்ததுதான் அந்தப் பறவை என்பதைக் கண்டு அதிசயித்துள்ளனர்.

Lesser Cuckoo

அவர்கள் அதிசயிக்கக் காரணம், தமிழ்நாட்டிலேயே இந்த வகை பறவை இனம் இப்போதுவரை ஒன்பது முறை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரியில் 37ஆண்டுகளுக்குப்பின் இரண்டாவது முறையாக இப்போதுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரியவகை குயில் குறித்து நம்மிடம் பகிரும், மும்பை இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் ஆராய்ச்சி உயிரியலாளர் சாம்சன் அரோக்கியநாதன், "ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்திரகாண்ட், சிக்கிம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் இந்த பறவை இனம், இலங்கை மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் குளிர் காலத்தில் வலசை போகின்றன.

சாம்சன் அரோக்கியநாதன்

இப்படி, வலசை போகும் இந்த அரியவகை பறவைகளை தமிழ்நாட்டில் 9 முறைகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். நீலகிரியில் கடந்த 1983 ஆம் ஆண்டு கடைசியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 37 ஆண்டுகளுக்குப்பின் தற்போது இரண்டாவது முறையாக தென்பட்டுள்ளது. இந்தப் பதிவின் மூலம் இவற்றின், வலசை முறைகள் மற்றும் வழித்தடம் ஆகியவற்றை அறிய உதவியாக இருக்கும். இது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி" என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சுப்பிரமணி, "தோட்டத்துக்கு பக்கத்துல பறக்க முடியாம இருந்த இந்த பறவைய, காக்கா, பூனை ஏதாச்சும் கொன்னுடுமோன்னு பத்திரமா எடுத்து பக்கத்துல இருக்க காட்டுல விட்டேன். வித்யாசமா இருக்குன்னு படமும் எடுத்தோம்.

Lesser Cuckoo

கடைசில பாத்தா இது 6 ஆயிரம் கிலோமீட்டர் பறக்கும் குயில்னு சொன்னாங்க. வெயில் காலத்தை குளிரான இடத்திலயும் குளிர்காலத்த வெதுவெதுப்பான இடத்திலயும் கழிக்குமுன்னு சொன்னாங்க" என ஆச்சர்யத்துடன் தெரிவிக்கின்றார்.



source https://www.vikatan.com/news/environment/rare-lessor-cuckoo-bird-spotted-in-nilgiris-after-37-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக