Ad

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

குமரி: `பாரம்பர்யம் தவறினால் தடுத்து நிறுத்துவோம்!’ - எச்சரிக்கும் இந்து முன்னணியினர்

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனையை ஒட்டி சரஸ்வதி சுவாமி கோயில் அமைந்திருக்கிறது. கம்பர் வழிபட்டதாகக் கூறப்படும் இந்தக் கோயிலில் மூலவராக சரஸ்வதி தேவி அருள்பாலிக்கிறார். கேரள மாநிலம், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அருகில் நடக்கும் நவராத்திரி விழாவுக்காக ஆண்டுதோறும் சரஸ்வதி சுவாமி செல்வது வழக்கம். இதற்காக நவராத்திரி விழா தொடங்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பே பத்மநாபபுரத்திலிருந்து யானை மீது சரஸ்வதி அம்மன் புறப்படும் விழா நடைபெறும். இதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் முருகன் சுவாமிகளும் பத்மநாபபுரத்துக்கு வந்து, அங்கிருந்து சரஸ்வதி அம்மனுடன் பல்லக்கில் திருவனந்தபுரம் செல்வது வழக்கம்.

பல்லக்கில் செல்லும் சுவாமிகளை இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் சுமந்து செல்வது வழக்கம். அப்படி சுவாமி நவராத்திரி பவனியாகச் செல்லும்போது வழிநெடுகிலும் பக்தர்கள் பூஜைப் பொருள்களைவைத்து வழிபாடு செய்வார்கள். அந்த வழிபாட்டுக்கு, `திருக்கஞ்சார்த்து’ என்று பெயர். இந்த பவனியின்போது கேரள போலீஸார் அணிவகுப்பு மரியாதை செலுத்தி சுவாமியை அழைத்துச் செல்வார்கள்.

நவராத்திரிக்காக சுவாமிகளைப் பல்லக்கில் கேரளா அழைத்துச் செல்லக் கோரி நடந்த போராட்டம்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் சென்றதும் முன்னுதித்த நங்கை அம்மனை செந்திட்டை கோயிலிலும், முருகன் சுவாமியை ஆரியசாலை பகவதி அம்மன் கோயிலிலும், சரஸ்வதி அம்மனை பத்மநாபசுவாமி கோயில் அருகிலுள்ள நவராத்தி மண்டபத்திலும் வைத்து பூஜைகள் நடத்தப்படும். நவராத்திரியின் ஒன்பது நாள்களும் பூஜைகள் முடிந்த பிறகு மீண்டும் சுவாமிகளை பல்லக்கில் கோயிலுக்குத் திரும்பக் கொண்டுவருவார்கள். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்திலிருந்தே பாரம்பர்யமாக இந்த விழா நடந்துவருகிறது. அது இப்போதும் தொடர்ந்து நடந்துவருகிறது.

Also Read: `கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை!' - குமரி கோயில் சர்ச்சைக்கு அறநிலையத் துறை விளக்கம்

இந்த ஆண்டு வரும் 16-ம் தேதி முதல் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா தொடங்குகிறது. கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, நவராத்திரி விழாவுக்காகக் குமரி மாவட்ட சுவாமிகளை வாகனம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு செல்ல இரு மாநில அரசு அதிகாரிகளும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு இந்து முன்னணி அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசா சோமன் கூறுகையில், ``பாரம்பர்ய முறைப்படி சுவாமியைப் பல்லக்கில் சுமந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்துமுன்னணி குமரி மாவட்ட தலைவர் மிசா சோமன்

கொரோனா காலம் என்பதால், `சாலை ஓரங்களில் சுவாமிக்கு வரவேற்பு அளிக்கும்விதமாக வழிபாடு செய்ய வேண்டாம்’ எனக் கூறலாம். அதைவிடுத்து சுவாமிகளை வாகனத்தில் கேரளா எடுத்துச் செல்ல அரசு முயற்சித்தால் அதைத் தடுத்து நிறுத்துவோம். ஒவ்வொரு கோயிலிலுமிருந்தும் சுவாமியை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல், பெரும் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி மற்றும் கலெக்டர் ஆகியோர் இந்து முன்னணி அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/general-news/hindu-munnani-protest-on-navarathiri-festival

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக