Ad

திங்கள், 24 மே, 2021

`நீ அழகாக இருக்கிறாய், சினிமாவுக்குப் போகலாமா' - பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர்மீது பாலியல் புகார்

சென்னை கே.கே.நகரில் பி.எஸ்.பி.பி தனியார் பள்ளி செயல்பட்டுவருகிறது. அந்தப் பள்ளியில் பணியாற்றும் வணிகவியல் ஆசிரியர் ஒருவர்மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர். இது தொடர்பாக கடந்த 23.5.2021-ல் பள்ளியின் டீனுக்கு முன்னாள் மாணவிகள் தரப்பில் ஒரு பரபரப்பான புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த மனுவில் `` கடந்த 20 ஆண்டுகளாக அவர் வணிகவியல்துறையில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். அவர் உடற்கல்வி வகுப்புகளையும் நடத்திவந்தார். அப்போது மாணவிகளிடம் அநாகரிகமான கேள்விகளைக் கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி வருகிறார். மேலும், மாணவிகளின் உருவதோற்றம் குறித்து கேலி செய்துவருகிறார்.

பாலியல் தொல்லை

மாணவர்கள், ஆசிரியர் புனிதத்தைத் தாண்டி அவர் செயல்பட்டுவருகிறார். தொடர்ச்சியாக மாணவிகளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திவருகிறார். பாலியல் நோக்கத்தோடு கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்டுவருகிறார். சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் மாணவிகளின் நடத்தைகளை விமர்சிக்கிறார். நாகரிகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாகப் பேசுகிறார். இந்த ஆசிரியரின் நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகளின் பெற்றோர்கள் புகாரளித்திருக்கின்றனர். ஆனால் பள்ளி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெயருக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தி, எச்சரித்து அனுப்பிவைத்திருக்கின்றனர். அதனால் அந்த ஆசிரியர் தொடர்ந்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைகளைக் கொடுத்துவருகிறார்.

மேலும் மாணவிகளிடம், என்னைப் பற்றி புகார் செய்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என மிரட்டி வந்திருக்கிறார். ஊரடங்கு காலகட்டத்தில் நடந்த ஆன்லைன் வகுப்புகளில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் அரைகுறை ஆடையுடன் கிளாஸ் நடத்துகிறார். அதனால் மாணவிகள் தர்மசங்கடத்துக்குள்ளாகியிருக்கின்றனர். அதோடு மாணவிகளின் போட்டோக்களை வாட்ஸ்அப்பில் அனுப்பும்படி ஆசிரியர் கூறியிருக்கிறார். ஆசிரியருக்கு போட்டோக்களை அனுப்பிய மாணவிகளில் சிலரிடம் `நீ அழகாக இருக்கிறாய்' என்று கூறியிருக்கிறார்.

பாலியல் தொல்லை

ஒரு மாணவியிடம் `நீ என்னுடன் படம் பார்க்க வா' என்று ஆசிரியர் தெரிவித்திருக்கிறார். அதனால் மாணவிகள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வேதனையடைந்திருக்கின்றனர். மாணவிகளின் செல்போன் நம்பர், அவர்களின் பெற்றோர் செல்போன் நம்பர், வீட்டின் முகவரி என அனைத்து விவரங்களும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் இருக்கின்றன. தன்னைப் பற்றிப் பள்ளி நிர்வாகத்துக்குப் புகரளித்தால் மதிப்பெண்களை குறைத்துவிடுவேன் என மாணவிகளை மிரட்டிவருகிறார். அவரின் செயல்பாடுகள் சட்டத்துக்கு விரோதமானவை. ஆசிரியரால் பாதிக்கப்பட்டு தற்போது பள்ளியில் படித்துவரும் மாணவிகளுக்கு நாங்கள் முழு உறுதுணையாக இருப்போம்.

Also Read: கும்பகோணம்: பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை?!; அதிரவைத்த புகார்! - இளைஞர்களைத் தேடும் போலீஸார்

பள்ளியில் நடந்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை வெளிப்படையாக இல்லை. அது, பள்ளி மாணவிகள் சம்பந்தப்பட்ட பிரச்னை. அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள். எனவே உடனடியாக ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை பள்ளி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருக்கின்றனர். மேலும் மாணவிகள் அளித்த புகாரில் ஆறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 1. சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். 2. அவரை வகுப்புகள் நடத்த அனுமதிக்கக் கூடாது. 3. கல்வி சம்பந்தமான பணியில் ஈடுபடுத்தக் கூடாது.

பாலியல் தொல்லை

4. விடைத்தாள்களைத் திருத்த அனுதிக்கக் கூடாது. 5. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கமிட்டி அமைத்து சுதந்திரமாகவும் நேர்மையாகவும் விசாரணை நடத்த வேண்டும். 6. விசாரணை கமிட்டிக்கு முன் ஆசிரியரை ஆஜர்படுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவிகளின் எதிர்கால நலன்கருதி அவர்களின் பெயர் உள்ளிட்ட எந்தவிதத் தகவலும் வெளியில் வரக் கூடாது" எனக் கூறியிருக்கிறார்கள்.

`இவரைப் போன்றவர்களுக்கு எந்தக் கல்வி நிறுவனத்திலும் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடாது.எங்களின் கோரிக்கைகளுக்கு நியாயமான முறையில் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். மாணவிகளுக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது' எனவும் முன்னாள் மாணவிகள் தங்களின் புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

மாணவிகளின் புகார் மனுவை பாடகி சின்மயி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தி.மு.க எம்.பி கனிமொழியும் இந்தப் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

பிரபல பள்ளியின் ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க பல தடவை முயன்றோம். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. பள்ளி நிர்வாகத்தின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக இருக்கிறோம்.



source https://www.vikatan.com/news/crime/student-complaint-against-teacher-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக