நடிகர் தவசி இக்கட்டான சூழலில் சிகிச்சை பெற்றுவருகிறார். சமூக ஆர்வலர்களும் சினிமா பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கோணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடிகர் தவசி. 'கிழக்கு சீமையிலே' தொடங்கி 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது திண்டுக்கல்லில் உள்ள தனது மனைவியின் வீட்டில் வசித்து வருகிறார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் தவசி நடித்தக்காட்சி மீம் மெட்டீரியலாக மாற பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். ரஜினியின் 'அண்ணாத்தே' படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகியிருக்கும் நிலையில் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தவசி.
தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு தவசியின் தோற்றம் மாறியுள்ளது. வறுமையின் காரணமாக சிகிச்சை பெற சிரமப்பட்ட தவசிக்கு மதுரையில் டாக்டர் சரவணன் சிகிச்சை அளித்து வருகிறார்.
"தவசிக்கு உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. முற்றிய நிலையில் உள்ள கேன்சரால் அடைப்பு ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறார். தற்போது அடைப்பை நீக்கி வளை போன்று அமைப்பை வைத்துள்ளோம். இதனால் லேசான ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள முடிகிறது. கீமோதெரப்பி சிகிச்சை அளிக்கிறோம். தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும். முன்பைவிட உடலில் முன்னேற்றம் உள்ளது. எங்களால் முடிந்த முயற்சிகளை எடுப்போம்” என்றார் சரவணன்.
"தற்போது அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. ஆபத்து இல்லை என்கிறார்கள். அனைவரும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்... அதுபோதும்!" என்கிறார் தவசியின் மூத்த மகள் முத்தரசி.
source https://www.vikatan.com/news/cinema/actor-thavasi-has-crossed-critical-stage-after-proper-treatment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக