நாடு முழுவதும் 170-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் தொடங்கப்பட்ட வாசன் ஐ கேர் நிறுவன உரிமையாளர் அருண் மாரடைப்பால் மரணமடைந்தார்.
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டுநாடு முழுவதும் 170 கிளைகளுடன் வாசன் ஐ கேர் நிறுவனம் இயங்கி வந்தது. இதன் உரிமையாளர் அருண். இவர் திருச்சியில் ஏ.பி.சி மருத்துவமனை, வாசன் மெடிக்கல் மெடிக்கல் ஆகியவற்றையும் நடத்திவந்தார். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவரும் கரூர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி முருகையாவின் மகனுமான அருண், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்து வந்தார்.
இன்னும் சொல்லப் போனால் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு நண்பர் மட்டுமல்ல, தொழில் பார்ட்னராகவும் இருந்தவர். இவர் முக்கிய நபர்களுக்குப் பினாமியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இவரது நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்
சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் மேலும் பல தனியார் நிதி நிறுவனங்களிலும் சோதனை நடந்தது. இந்நிலையில் கார்த்திக் சிதம்பரம் குடும்பத்தோடு அருணுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதோடு, இருவருக்குள் ஒரு சில பிரச்னைகளும் நடந்தாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவர் வெளிநாட்டில் பல மாதங்களாகத் தங்கியிருந்திருக்கிறார். சமீபத்தில் சென்னை திரும்பிய அருண், ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வசித்திருக்கிறார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறையிலிருந்து வெளியே வரவில்லை என்று சொல்லப்படுகிறது. அவரை எழுப்பியபோதும் எழுந்திருக்கவில்லை.
இந்நிலையில் அவரது உறவினர்கள் கதவை உடைத்துப் பார்த்த போது அவர் மயக்க நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை சென்னை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று சொல்லியிருக்கிறார்கள். அவரது உடல், ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே அருண் மரணத்துக்கான காரணம் தெரியும் என்று சொல்கிறார்கள்.
என்ன நடந்தது என்று அவரது உறவினர்கள் வட்டாரத்தில் பேசினோம். ``பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் அருண். ஆனால், அதே கட்சியைச் சேர்ந்தவர்களால் இன்று நடுத்தெருவுக்கு வந்திருக்கிறது அவரது குடும்பம். அருண், ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் நெருங்கிப் பழகிவந்தவர். ப.சி அமைச்சராக இருந்தபோது, வாசன் ஐ கேர் நிறுவனம் தொடக்க விழாவுக்கு ஆளுநர் முதல் பிரதமர் வரை முக்கிய அரசியல் பிரபலங்கள் பலர் வருகை புரிந்தனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதால் இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. பல இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்திக் சிதம்பரமும் அவரது பங்கைத் திரும்பப் பெற்றார். அன்றிலிருந்து கடுமையான பண நெருக்கடியில் சிக்கித் தவித்துவந்த அருண், வெளிநாடுகளில் பணம் திரட்டும் வேலையிலும் இருந்து வந்தார். ஆனால், சொல்லிக்கொள்ளும்படி அவரால் நிதி திரட்டமுடியவில்லை. இதனால் அவர் மன உளைச்சல் அடைந்திருக்கிறார். பல்வேறு நெருக்கடி, மிரட்டல்களுக்கும் ஆளாகி இறந்திருக்கிறார்'' என்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/death/vasan-eye-care-founder-doctor-arun-passes-away-in-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக