Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

கரூர்: மூன்று குழந்தைகளுக்கும் விஷம்... தற்கொலை முயற்சி! - பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

குடும்பப் பிரச்னை காரணமாக தனது மூன்று குழந்தைகளுக்கும் அரளி விதையை அரைத்துக் கொடுத்து, தானும் சாப்பிட்டப் பெண் ஒருவர், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

லாலாபேட்டை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது லாலாப்பேட்டை. இந்த கிராமத்துக்கு அருகில் இருக்கும் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி முத்துலட்சுமி.

இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். கணவன், மனைவிக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சண்டை ஏற்படுமாம்.

குளித்தலை அரசு மருத்துவமனை

இரண்டு நாள்களுக்கு முன்பு செந்தில் குமாருக்கும், முத்துலட்சுமிக்கும் சண்டை வந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி, அரளி விதையை அரைத்து, தான் முதலில் சாப்பிட்டுவிட்டு, தனது மூன்று குழந்தைகளுக்கும் சாப்பிடக் கொடுத்துள்ளார்.

Also Read: சென்னை: `காலையில் பெண் பார்க்கும் படலம்; இரவில் தற்கொலை' - பெண் இன்ஜினீயரின் விபரீத முடிவு

'கசக்குதும்மா. சாப்பிட முடியலை. உமட்டிக்கிட்டு வருது' என்று மூன்று குழந்தைகளும் சொல்ல, வற்புறுத்தி அவர்களை சாப்பிட வைத்துள்ளார். கொஞ்ச நேரத்தில் முத்துலட்சுமியும், மூன்று குழந்தைகளும் மயங்கி சரிய, அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். மூன்று குழந்தைகளையும் குளித்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முத்துலட்சுமியை மட்டும் மேல்சிகிச்சைக்காக முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மார்ச்சுவரி

இந்த நிலையில், தீவிர சிகிச்சையில் இருந்த முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக கொண்டுசெல்லப்பட்டது. மூன்று குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. தாய் மற்றும் அவரது மூன்று குழந்தைகளும் விஷமருந்தியதில், தாய் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/karur-woman-commits-suicide-over-family-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக