எங்கள் ஊரில் [விஜயமங்கலம்] மரங்களின் காதலன் இருக்கிறார். அவர் பெயர் சுந்தரமூர்த்தி. அவரை நாங்கள் 'வனம் சுந்தர்' என்றுதான் சொல்லுவோம். 4000 மரங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். 3000 பனை மரங்களை வைத்திருக்கிறார். பயன்படாத கிணறுகளை தூர் வாரி பண்பட செய்துள்ளார்.
எங்கள் கிராமத்தைச் சுற்றிலும் மரங்களை வைத்து பராமரித்து வருகிறார். குட்டைகளைச் சுற்றிலும் மரங்களை வைத்து பராமரித்து வருகிறார். அவையெல்லாம் இன்று வளர்ந்து நிற்கின்றன. பஞ்சாயத்தின் உதவியுடன் 'சோழர் வனம்' என்ற பெயரில் அடர் வனத்தை உருவாக்கியுள்ளார்.
அங்கே அவர் செய்திருக்கும் நீர்ப்பாசன முறை வித்தியாசமானது. கழிவுநீர் பாசன முறையை பயன்படுத்துகிறார். அங்கு இருக்கும் மரங்கள் அனைத்தும் நம் நாட்டு மரங்களே. அவற்றின் பயன்கள் அனைத்தும் தெரிந்து வைத்திருக்கிறார். பனைகளை விதைத்து அவற்றைப் பாதுகாக்க பனை வேலி அமைத்துள்ளார். 'கதம்ப வனம்' எனும் சிறிய வனத்தையும் உருவாக்கியுள்ளார்.
பெரும்பாலும் தனது செலவில்தான் மரங்களை வைப்பார். டிராக்டர் வாங்கி மரங்களுக்கு நீர் ஊற்றுகிறார். 'பசுமை சிறகுகள்' என்ற அமைப்பின் மூலம் மரங்களைப் பாதுகாத்து வருகிறார்.
'நெகிழி இல்லா கிராமம்' உருவாக்க அனைவரிடமும் சொல்வார். நெகிழிக்கு மாற்று உபயோகிங்கள் என்று கூறுவதோடு, அதைச் செயலிலும் செய்கிறார். பெரும்பாலும் தான் செய்ததை வெளியே சொல்லமாட்டார்... தன்னை அடையாளப்படுத்தி கொள்ள மாட்டார்.
பொதுவாக நிறைய பேர் மரங்களை வைப்பார்கள். ஆனால் அவை வளர்கின்றனவா என்று பார்க்கமாட்டார்கள். சுந்தர் அவற்றைக் குழந்தைபோல் பாதுகாக்கிறார். பிறந்தநாள், திருமண நாள் என்று அவரிடம் வாழ்த்து பெற சென்றால், 'மரம் ஒன்று வாங்கி கொடுங்கள்... இன்று உங்கள் பெயரில் ஓரு மரம் வைக்கிறேன்' என்பார். என்னை வியக்க வைக்கிறது அவர் மரத்தின் மேல், சுற்றுச்சூழல் மேல் காட்டும் அக்கறை. இது சுந்தருக்கு ஓரு அங்கீகாரம் மட்டுமல்ல... அவரைப் போல எல்லா இளம் தலைமுறைக்கும் உத்வேகமாகச் செயல்பட வேண்டும்.
ஆம்... யார் வேண்டுமாலும் மரம் வைக்கலாம். ஆனால், கடைசிவரை பாதுகாக்க வேண்டும் - சுந்தரை போல!
- ஷன்மதி
source https://www.vikatan.com/social-affairs/environment/tree-lover-vijayamangalam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக