Ad

திங்கள், 6 டிசம்பர், 2021

``வாங்காத பணத்தைக் கட்டச் சொல்லி மிரட்டுறாங்க!" - ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் குழுவினர் புகார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வில்லிசேரி கிராமம். இங்கு மகளிர் சுய உதவிக்குழு செயல்பட்டு வருகிறது.இந்தக் குழுவினர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருக்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 5 சவரனுக்குத் தங்க நகைக்கடன் பெற விண்ணப்பித்திருக்கின்றனர். அப்போது பதவியிலிருந்தவர்கள், ``கூட்டுறவு வங்கியில் பணம் கையிருப்பு இல்லை. எனவே, நகையை அடமானம் வைத்து விட்டுச் செல்லுங்கள். பிறகு வங்கிக்குப் பணம் வந்ததும் அனைவரின் கைகளிலும் கடனுக்கான தொகை வழங்கப்படும்” என உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

பாஸ் புத்தகம்

அதை நம்பி வில்லிசேரியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுப் பெண்கள் அனைவரும் கூட்டுறவு வங்கியில், பணம் பெறாமலேயே 5 சவரனுக்கு நகையை வங்கியில் அடமானம் வைத்திருக்கின்றனர். இதையடுத்து பணம் கேட்டுச் சென்ற போதெல்லாம், ``விரைவில் அனைவரது வங்கிக் கணக்கிலும் பணம் வரவு வைக்கப்படும்” என வங்கியின் அதிகாரிகள் ஆறுதல் சொல்லிச் சமாளித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குப் பெற்ற நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சுய உதவிக் குழு பெண்கள் வங்கிக்குச் சென்று நகையை மீட்கச் சென்றிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், நகைக்கடனுக்கான அசல் தொகையை வட்டியுடன் திரும்பச் செலுத்துமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் நகை அடமான ரசீதுடன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜைச் சந்தித்து நகைமோசடி தொடர்பாகப் புகார் அளித்தனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய மகளிர் குழுவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, ``எங்க கிராமத்துல உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில நகைக் கடனுக்கு பணம் பெறாமலேயே நகையை அடமானம் வைத்தோம். தற்போது நாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து நகையைத் திரும்பக் கேட்டபோது வட்டியுடன் மொத்தத் தொகையை செலுத்தினால் மட்டுமே நகை தரப்படும் என அதிகாரிகள் எங்களை மிரட்டுகிறார்கள். நாங்கள் இதுவரை நகைக் கடனுக்கான பணத்தையும் வாங்கவில்லை.

மனு

அடமானம் கொடுத்த நகையும் கண்ணுல பார்க்கவும் இல்லை. தற்போது கூட்டுறவு வங்கியிலிருந்து நகைக் கடனுக்கான தொகையைக் கட்டச் சொல்லி மிரட்டுகிறார்கள். அதனால், இந்த விஷயத்துல கலெக்டர்தான் விசாரணை நடத்தி, வங்கியில அடமானத்துல இருக்குற எங்க நகைகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கணும்” என்றனர்.

Also Read: தூத்துக்குடி பயிற்சி மருத்துவர் சித்ரவதை வழக்கு: கைதான திமுக நிர்வாகிமீது நில அபகரிப்பு புகார்!



source https://www.vikatan.com/news/crime/group-of-women-filed-a-complaint-against-cooperative-money-lending-society-in-collector-office

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக