Ad

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

`அதிகாரம் இருந்தால் முடக்கிவிடலாம் என நினைக்கிறார்கள்!’- பழவேற்காட்டில் கொதித்த திருமாவளவன்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ளது அதானி குழுமத்துக்குச் சொந்தமான துறைமுகம். கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த துறைமுகத்தை L&T நிறுவனத்திடம் இருந்து வாங்கிய அதானி குழுமம், 330 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள துறைமுகத்தை 6,110 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்காக, அந்நிறுவனம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

பழவேற்காடு

அதானி குழுமத்தின் இந்த துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு காலஞ்சி, காட்டுப்பள்ளி, பழவேற்காடு என 80-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். அதே போல், அரசியல் கட்சியினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். அதன் காரணமாக, பழவேற்காடு போராட்டக் களமாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நேற்று மாலை பழவேற்காடு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடக் கோரி கண்டன உரையாற்றினார்.

அதானி துறைமுகம்

கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ``பழவேற்காடு இயற்கை நமக்கு அளித்த கொடை என்றுதான் சொல்ல வேண்டும். கடலும் ஏரியும் சங்கமிக்கும் இந்த பழவேற்காட்டை நம்பி 80-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் குறித்து கொஞ்சமும் யோசிக்காமல் பிரதமர் மோடி, தன் பினாமியான கவுதம் அதானிக்கு துறைமுக விரிவாக்க அனுமதி என்ற பெயரில் பழவேற்காட்டைத் தாரைவார்க்கத் துடிக்கிறார்.

ஆனால், தற்போது அதானி குழுமம் அந்த துறைமுகத்தை விரிவாக்கம் செய்து துறைமுகத்தின் மூலம் 3,800 லட்சம் டன் பொருள்கள் வரை கையாளத் திட்டமிட்டுள்ளது. இது அந்தப்பகுதியில் இயங்கி வரும் பொதுத்துறை துறைமுகங்களின் திறனைக் காட்டிலும் மிக அதிகம். விரிவாக்கத்தால் அரசின் கை அடங்கி தனியாரின் கை ஓங்கும் நிலை ஏற்படும்.

திருமாவளவன்

தற்போது, மீண்டும் அதானி என்ற பண முதலையின் தனி நபர் வளர்ச்சி பசிக்கு ஏழை மக்களை பலிகடாவாக்க மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. அதற்கு ஆளும் அ.தி.மு.க அரசும் துணை போகிறது. இயற்கையை அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தால் தான் வளர்ச்சி ஏற்படும் என்றால் அப்படிப்பட்ட வளர்ச்சி எங்கள் மக்களுக்குத் தேவையில்லை.

துறைமுக விரிவாக்கத்துக்கு நிலம் தந்தால் நேரடியாக 1,500 பேருக்கும், மறைமுகமாக 4,000 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறியிருக்கிறார்கள். இந்த பழவேற்காட்டை நம்பி வாழும் ஒரு லட்சம் மக்களில் வெறும் 5,000 பேருக்கு வேலை கிடைத்தால் போதுமா?... மீன்பிடித் தொழிலைத் தவிர மக்களுக்கு வேறு என்ன தொழில் தெரியும்.

கண்டன கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள்

அதிகாரம் கையிலிருந்தால் மக்களை முடக்கி விடலாம் என்று அதானியும், மோடியும் நினைக்கிறார்கள். மக்கள் போராட்டத்தால் மாறிய கதைகள் வரலாற்றில் ஏராளம் என்பதை நான் நினைவுகூற விரும்புகிறேன்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்கள் சக்திதான் இறுதியில் வென்றது. அதே போல், கார்ப்பரேட் முதலை கவுதம் அதானிக்கு எதிரான போராட்டத்திலும் வெல்லப்போவது மக்கள் சக்தி தான்" என்று கண்டன உரையாற்றினார்.

Also Read: `எங்க பழவேற்காடு பாதுகாக்கப்படணும்!' - காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்க்கும் மாணவர்கள்

இந்த கண்டன பொதுக்கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கோபி நயினார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பூவுலகின் நண்பர்கள் குழுவின் பொறுப்பாளர் சுந்தரராஜன் கலந்துகொண்டு துறைமுக விரிவாக்க எதிர்வினைகள் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/vck-leader-thirumavalaval-slams-pm-modi-admk-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக