Ad

வெள்ளி, 13 நவம்பர், 2020

அனுவின் கம்பேக், அபியின் பாசம்... லேண்ட்லைன் காலில் காத்திருக்கிறதா வில்லங்கம்? #VallamaiTharayo

நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் நெருக்கமான தோழியைச் சந்திக்கப் போகும் மகிழ்ச்சி ஒரு பக்கம்; பதற்றம் மறுபக்கம். ஒவ்வொரு நொடியையும் வேகமாகக் கடக்கச் சொல்லி, அடித்துப் பிடித்து அனுப்பிக்கொண்டிருக்கிறாள் அபி. அப்போது ஒரு அழைப்பு வர, யார் என்று பார்க்காமல் ‘எங்கே இருக்க அனு?’ என்று கேட்டு விடுகிறாள். அழைத்த அவள் அம்மாவோ, `இன்னுமா அவளோடு தொடர்பு வைத்திருக்கே' என்று ருத்ரதாண்டவம் ஆடுகிறார். `அந்த அனு அல்ல, இது அபார்ட்மெண்டில் இருக்கும் அனுப்ரியா' என்று சமாளிக்கிறாள்.

Vallamai Tharayo

அபியை நிலைகொள்ளாமல் இருக்க வைத்துவிட்டு, வந்து சேர்கிறாள் அனு. கிராமத்திலிருக்கும்போதே மிகவும் மாடர்னாக யோசிக்கும் அனு, இப்போது ஹைதராபாத் ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதால் நடை உடை பாவனைகளில் ரொம்பவே மாறிப் போயிருக்கிறாள். சென்னைக்கு வந்தும் கிராமத்தில் இருப்பது போலவே இருக்கும் அபியையும் கொஞ்சம் மாறச் சொல்கிறாள்.

இருவரும் ஜாலியாகப் பல விஷயங்களைப் பேசுகிறார்கள். “அழகா இருக்கு வீடு. குழந்தைகளும் உன்னை மாதிரி ஸ்வீட். ஆனா, உன் புருஷன் உம்மனாமூஞ்சி. ஒரு பயந்தாகொள்ளியும் உம்மனாமூஞ்சியும் எப்படி ரெண்டு குழந்தைகளைப் பெத்து எடுத்தீங்கன்னுதான் தெரியலை” என்கிறாள் அனு. `அது வேறு இது வேறு' என்று சொல்லும் அபி, பழைய நினைவுகளுக்குள் செல்கிறாள்.

தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை அணைக்கிறான் சித்தார்த். `உங்களிடம் பேச வேண்டும்' என்கிறாள் அபி. அவன் எரிச்சலுடன் என்னவென்று கேட்கிறான். “நாம மனம் விட்டு ஜாலியா பேசணும். ஒருத்தரை இன்னொருத்தர் கிண்டல் பண்ணிக்கணும். மெதுவா, இயல்பா தாம்பத்தியம் நடக்கணும்” என்கிறாள் அபி.

Vallamai Tharayo

மனைவியின் இந்த நியாயமான கோரிக்கையைக்கூட வழக்கம்போலவே தவறாக எடுத்துக்கொள்கிறான் சித்தார்த். “செக்ஸ் பத்தி நீ எனக்குக் கத்துக் கொடுக்கிறீயா? அது தெரியாமல்தான் ரெண்டு குழந்தை பெத்திருக்கியா?” என்று கத்துகிறான். “ஏங்க, குழந்தை பிறக்கறது வேற, இது வேற. ரெண்டும் எப்படிங்க ஒண்ணாகும்?” என்று கேட்கிறாள் அபி. அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியவனா, சித்தார்த்?

இந்தியச் சமூகத்தில் பெரும்பாலும் காதலாகி, கசிந்துருகி, தாம்பத்யத்தில் ஈடுபட்டு, குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதில்லை. பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது போலவே அது ஒரு கடமையாக நடந்து முடிந்துவிடுகிறது.

Vallamai Tharayo

இங்கே ஒரு நியாயமான எதிர்பார்ப்பைக்கூட, அபி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெளிப்படுத்துகிறாள். அதையே சித்தார்த்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. `உன் மேல் இருந்த கொஞ்சம் மரியாதையும் இத்துடன் இல்லாமல் போய்விட்டது' என்று திரும்பிப் படுத்துக்கொள்கிறான்.

அபியும் அனுவும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு லேண்ட்லைன் அழைப்பு வருகிறது. அதை அபி எடுக்கவில்லை. வில்லங்கம் அதில்தான் இருக்கிறது போல!

இன்று இரவு 7 மணிக்குப் பார்ப்போம்!

- எஸ்.சங்கீதா



source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக