Ad

வியாழன், 19 நவம்பர், 2020

`கரூரில் நலிவைச் சந்திக்கும் தொழில்கள்!’ - லட்சுமி விலாஸ் வங்கி விவகாரத்தில் ஜோதிமணி எம்.பி

``கரூர் லட்சுஷ்மி விலாஸ் வங்கிக்கு நிதியமைச்சகம் வர்த்தகத் தடை விதித்துள்ளது. கரூரில், நிதி நிறுவனங்களும், பேருந்து கட்டுமானம், கொசுவலை, ஜவுளி ஏற்றுமதி தொழில்களும் ஒன்றுக்கொன்று ஆதரவாக நின்று வளர்ந்தவை. ஒரு சிறிய நகரத்தில் இருந்து வங்கியை உருவாக்கியவர்களின் கனவு, தொலைநோக்குப் பார்வை, விவசாயிகள், தொழிலாளர்கள் தொழில்துறையினரின் பங்களிப்பில் உருவான வங்கியின் இன்றைய நிலை வருத்தமளிக்கிறது" என்று கரூர் எம்.பி ஜோதிமணி கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஜோதிமணி

மத்திய நிதியமைச்சகம் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.25,000 பணம் மட்டுமே எடுக்க முடியும் எனக் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த நிலையில், லட்சுமி விலாஸ் வங்கி உள்ள அனைத்துக் கிளைகளிலும் நடப்புக் கணக்கு முடக்கத்தால் ஜவுளித் தொழில், கொசுவலை, பஸ்பாடி கட்டும் தொழில் நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்பு என்று கரூர் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Also Read: ``குஷ்பு மாதிரியானவங்களுக்கு பா.ஜ.க ஏற்றதில்லை!" - ஜோதிமணி

கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு மிகப்பெரிய தனியார் வங்கியாக உருவெடுத்த லட்சுமி விலாஸ் வங்கி, தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடும் நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய நிதி அமைச்சகம் தலையிட்டு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.

ஜோதிமணி

இதன் அடிப்படையில், மத்திய நிதியமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ரூபாய் 25,000 மட்டுமே எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து கிளைகளிலும் ஆன்லைன் முறையில் பணபரிமாற்றம் மேற்கொள்ள வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும், சேமிப்புக் கணக்குகளை தவிர்த்து கரண்ட் அக்கவுண்ட் எனப்படும் நடப்பு கணக்குகளுக்கு சுமார் ஒரு மாத காலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது என வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், வர்த்தக பரிவர்த்தனை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரூரில் செய்தியாளர்களை சந்தித்த, கரூர் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி, ``கரூர் லட்சுமி விலாஸ் வங்கிக்கு நிதியமைச்சகம் வர்த்தகத் தடை விதித்துள்ளது. கரூரில் நிதி நிறுவனங்களும், பேருந்து கட்டுமானம், கொசுவலை, ஜவுளி ஏற்றுமதி தொழில்களும் ஒன்றுக்கொன்று ஆதரவாக நின்று வளர்ந்தவை. ஒரு சிறிய நகரத்தில் இருந்து வங்கியை உருவாக்கியவர்களின் கனவு, தொலைநோக்குப் பார்வை, விவசாயிகள், தொழிலாளர்கள் தொழில்துறையினரின் பங்களிப்பில் உருவான வங்கியின் இன்றைய நிலை வருத்தமளிக்கிறது.

Also Read: லட்சுமி விலாஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு... இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

ஜவுளி, கொசுவலை, பேருந்து, லாரி உள்ளிட்ட போக்குவரத்து நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களும், எரிவாயு நிறுவனங்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் பெருமளவில் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். முதலில், ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வாடிக்கையாளர் வங்கிக்கு சென்றபோது நடப்புக் கணக்குகள் மொத்தமாக முடக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆன்லைன் பண பரிவர்த்தனை, NEFT, RTGS ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளது.

ஜோதிமணி

இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கெனவே, பணமதிப்பிழப்பு, தவறாகச் செயல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி, மத்திய அரசின் ஆதரவின்மை ஆகியவற்றால், கரூரில் உள்நாட்டு வியாபாரம் மற்றும் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், வங்கியில் நடப்பு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், தொழில்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.

ஏற்கெனவே, வங்கித் துறையின் மீது ஏற்படும் அழுத்தம் காரணமாக 4 வங்கிகள் மோசமான நிலையை அடைந்துள்ளன. இதற்கிடையில், மோசமடைந்துள்ள தொழில்துறை மேலும் ஒரு பிரச்னையை எதிர்கொண்டுள்ளது. வங்கிகள் மூலமே தொழில்துறையினர் வரவு, செலவு செய்வதாலும், பொருளாதார மந்தநிலை காரணமாகவும் யாரிடமும் ஒரு மாதத்திற்கு தேவையான கையிருப்பு இல்லை. ஆகவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, உடனடியாக மத்திய அமைச்சகம் தலையிட்டு இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளேன்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/karur-congress-mp-jothimani-speaks-about-lakshmi-vilas-bank-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக