Ad

புதன், 18 நவம்பர், 2020

சூரிய சக்தியில் இஸ்திரி பெட்டி... ஸ்வீடன் நாட்டு விருதுபெற்ற தமிழக மாணவி!

திருவண்ணாமலைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கருக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இளம் வயது கண்டுபிடிப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வினிஷா வழங்கியுள்ள பேட்டி ஒன்றில் "சிறு வயதிலிருந்து எனக்கு அறிவியலின் மீது ஆர்வம் அதிகம். என் அப்பா வாங்கிக் கொடுத்த பொதுஅறிவுப் புத்தகத்தின் மூலம் அறிவியல் சார்ந்து நிறைய தகவல்களைக் கற்றுக்கொண்டேன்.

அவ்வப்போது நிறைய ஆராய்சிகளிலும் ஈடுபடுவேன். சில ஆண்டுகளுக்கு முன் தானாகவே இயங்கும் அறிதிறன் மின்விசிறியைக் கண்டறிந்து விருதுகள் பெற்றேன். அடுத்தகட்ட முயற்சியாக சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி பெட்டி கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் இறங்கினேன். இதை முழுமையாக வடிவமைக்க எனக்கு இரண்டு மாத காலம் ஆனது.

Also Read: 1,000 ரூபாயில் களை எடுக்கும் கருவி! - கரூர் விவசாயியின் கண்டுபிடிப்பு!

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி 100 ஏ.எச் திறன் கொண்ட் மின்கலனுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இது முழுமையாக மின்னேற்றம் அடைய 5 மணி நேரம் சூரிய ஆற்றல் தேவை. அப்படி ஒருமுறை மின்னேற்றம் ஆன இஸ்திரி பெட்டியை, தொடர்ந்து ஆறு மணிநேரம் வரை பயன்படுத்த இயலும். இதன் வடிவமைப்பை குஜராத்தில் உள்ள நேஷனல் இன்னோவேஷன் அறக்கட்டளையின் பொறியாளர்கள் வடிவமைத்து காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளனர்.

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி

இந்த ஆண்டு இறுதிக்குள் காப்புரிமை கிடைத்தது விடும் எனக் கூறியிருக்கிறார்கள். கொரோனா சூழலுக்கு ஏற்ப தானாக இயங்கும் வகையில் அத்தியாவசியப் பொருள்கள் கண்டுபிடிப்பில் இறங்கியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சூரிய ஒளி இஸ்திரி பெட்டி கண்டுபிடிப்புக்காக, ஸ்வீடன் துணைப் பிரதமர் கலந்து கொள்ளும் இணைய வழி நிகழ்வில் வினிஷாவிற்கு பட்டயமும் பதக்கமும் வழங்கப்பட இருக்கின்றது.



source https://www.vikatan.com/events/environment/tn-girl-won-swedens-childrens-climate-prize-for-designing-a-solar-ironing-cart

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக