Ad

சனி, 7 நவம்பர், 2020

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 3,000 பக்க ஆவணங்கள் தாக்கல்!

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018-ல் தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் 100வது நாளில் (மே-22) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதற்காக பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து (மே 28-ம் தேதி) அரசாணை வெளியிடப்பட்டு ஆலை சீல் வைத்து மூடப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை நியமித்தது தமிழக அரசு.

ஸ்டெர்லைட் ஆலை

இச்சம்பவம் குறித்த வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு பின்னர் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், ஆலையை சீல் வைத்து மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது வேதாந்தா நிறுவனம். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை ஆய்வு செய்ய நியமித்தது தீர்ப்பாயம். அக்குழு சமர்பித்த ஆய்வறிக்கையின்படி, `சில விதிமுறைகளுடன் மீண்டும் ஆலையை திறக்கலாம்’ என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. `ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை விதித்ததுடன், இவ்வழக்கை விசாரிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு எந்த அனுமதியும் இல்லை’ எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ஆலைத் தரப்பிற்கு அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம். தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் ஆலைத் தரப்பு தொடர்ந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம்

அதில், `ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனுமதி இல்லை, தமிழக அரசின் உத்தரவு செல்லும், அந்த உத்தரவே தொடரும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு தீர்ப்பு அளித்தது. அத்தீர்ப்பு, 815 பக்கங்களைக் கொண்டது. இத்தீர்ப்பு, தூத்துக்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இத்தீர்ப்பினை வரவேற்று போராளிகள், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள், கட்சியினர் ஆகியோர் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Also Read: `திறக்கவும் பராமரிக்கவும் அனுமதிக்க முடியாது!’ - ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது. முன்னதாக, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பிலும், தமிழக அரசு சார்பிலும், ம.தி.மு.க சார்பிலும் இவ்வழக்கில் கேவியேட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்கு வரும் 16-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, இவ்வழக்கு தொடர்பான 3,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை

அதில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்பட்ட காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு, மக்களுக்கு ஏற்பட்ட நோய்கள் தொடர்பான அனைத்து பாதிப்புகள் குறித்தும், ஸ்டெர்லைட் ஆலையின் விதிமிறல்கள் குறித்தும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டுதான், மாநில அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்துள்ளது. எனவே, ஆலை நிர்வாகத்திற்கு எந்த சலுகை வழங்குவதோ, பராமரிப்பு பணிக்காக அனுமதி அளிப்பதோ கூடாது. அத்துடன் இதுதொடர்பான ஆலை தரப்பின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அதில் குறிபிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/judiciary/tn-pollution-control-board-submits-3k-pages-document-in-sterlite-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக