Ad

சனி, 7 நவம்பர், 2020

இரண்டு தொகுதிகள்... ஜெயலலிதா சென்டிமென்ட் - எடப்பாடியின் புது ஸ்கெட்ச்? #TNElection2021

``அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி” - கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி அ.தி.மு.க தலைமை வெளியிட்ட அறிவிப்பு இது. ``முதல்வர் வேட்பாளர் என்ற இந்த அறிவிப்புக்கு, ஓ.பி.எஸ் அணியிடம் எடப்பாடி ஒரு பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. அப்படிப் போராடிப் பெற்ற இந்த வாய்ப்பை உண்மையாக்க வேண்டுமென்றால், வரப்போகும் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். குறிப்பாக, தனிப் பெரும்பான்மையாக அ.தி.மு.க வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், தாம் களமிறங்கும் தொகுதியிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் பழனிசாமிக்கு இருக்கிறது’’ என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

எடப்பாடி பழனிசாமி

எம்.பி தேர்தல் அடித்த எச்சரிக்கை மணி! 

``கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், துணை முதல்வர் ஓ.பி.எஸ், தன் சொந்த மாவட்டத்தில், அவருடைய மகன் ரவீந்திரநாத்தை வெற்றி பெறவைத்து ஸ்கோர் செய்தார். ஆனால், முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே அ.தி.மு.க தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், சேலம் எம்.பி தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி சட்டமன்றத் தொகுதியிலேயே நாங்கள் 8,088 வாக்குகள் குறைவாகப் பெற்று மண்ணைக் கவ்வினோம். இங்கு தி.மு.க-வின் எஸ்.ஆர்.பார்த்திபன் 1,04,573 வாக்குகளைப் பெற, அ.தி.மு.க-வின் சரவணனோ 96,485 வாக்குகளைத்தான் பெற முடிந்தது. அடுத்து, கடந்த பத்து ஆண்டுகளாக ஒரே தொகுதியில் இருப்பதால், தொகுதியில் இயல்பாக மக்களிடம் ஏற்படும் சலிப்புணர்வு. அதை எதிர்ப்புணர்வாக மாற்றி, தங்களுக்கான வாக்குகளாக மாற்ற முயற்சிக்கும் எதிர்க்கட்சியின் திட்டம், என்னதான் முதல்வராகப் பல நன்மைகள் கொண்டுவந்தாலும், தொகுதியில் பரவலாக எழுந்திருக்கும் அதிருப்தி... இப்படிப் பல காரணங்களை வைத்துத்தான் தொகுதி மாறலாமா என்ற யோசனையில் இருக்கிறார் முதல்வர். இதையொட்டியே வியூக வகுப்பாளர் சுனில் டீம் மற்றும் உளவுத்துறையிடம் தமக்கு சாதகமான தொகுதிகள் பட்டியலைக் கேட்டிருக்கிறார் எடப்பாடியார்" என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான சிலர்.

``சர்வே குழுவினரும், பலகட்ட ஆய்வுக்கு உட்படுத்தி காங்கேயம், பல்லடம், சூலூர், சேலம் மேற்கு என நான்கு சாதகமான தொகுதிகளின் பட்டியலையும் முதல்வருக்கு முதற்கட்டமாக கொடுத்திருக்கிறார்கள்" என்றார்கள். அவர்களிடம், அந்தப் பட்டியலில் இடம்பிடித்த தொகுதிகள் மற்றும் தேர்வான பின்னணி குறித்துக் கேட்டோம்.

`கிங் மேக்கர் கொங்கு’

``1996 மற்றும் 2006 தேர்தல்களைத் தவிர்த்து, 1977-லிருந்து 2016 வரை காங்கேயம் தொகுதியில் அ.தி.மு.க மட்டுமே வெற்றியடைந்திருக்கிறது. 2016-ல் அ.தி.மு.க கூட்டணியின் மூலமே உ.தனியரசு இங்கு வெற்றி பெற்றார். கட்சிக்கு ஸ்ட்ராங்கான தொகுதி மற்றும் அடர்த்தியான கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூக மக்கள் உள்ள தொகுதி. தி.மு.க-விலோ கார்த்திகேய சிவசேனாபதி (ஜல்லிக்கட்டு புகழ்) என்கிற புதிய வேட்பாளரைக் களமிறக்கலாம் எனும் யோசனை. இவையெல்லாம் நமக்கு எளிதான வெற்றியைக் கொடுக்கலாம்.

எடப்பாடி பழனிசாமி

அடுத்து, மிக மிகக் கணிசமான வெள்ளாளக் கவுண்டர் சமுதாய வாக்குவங்கி இருப்பதைவைத்தே சூலூர் மற்றும் பல்லடம் தொகுதியைப் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். இதில் பல்லடம் தொகுதியிலோ 2001-ல் இருந்து 2016 வரை தொடர்ந்து நான்கு முறை அ.தி.மு.க வென்றிருக்கிறது. 1977-ல் இருந்து நடந்த பத்து தேர்தல்களில், இங்கு அ.தி.மு.க எட்டு முறை வென்றிருக்கிறது. எனவே, இந்த பல்லடம் கோட்டையிலிருந்தே தமது கோட்டைக் கனவையும் , எடப்பாடி நிறைவேற்றிக்கொள்ளலாம்.

இதற்கடுத்து, அ.தி.மு.க-வின் அடர்த்தியான வாக்குவங்கி இருக்கும் சேலம் மாநகரத்தின் சிறிய தொகுதி, சேலம் மேற்கு. விரைவாக பரப்புரையை முடித்துவிட்டு தமிழ்நாடு முழுக்க பரப்புரைக்குச் செல்லலாம். இந்தத் தொகுதியில் பிரமாண்டமான மேம்பாலங்கள் கட்டியது போன்ற சாதனைகள் சாதகமான சூழலை உருவாக்கலாம் என்பதால், சேலம் மேற்கையும் சாதகமான தொகுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த நான்கு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதிக்கு முதல்வர் மாறலாம், இந்தக் கொங்கு தொகுதிகள் எடப்பாடியை நிச்சயம் மீண்டும் கிங்காக மாற்றும்’’ என்றும் சர்வே செய்த குழுவினர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்ட முதல்வர், 'எடப்பாடி தொகுதியிலிருந்து மாறினால், `தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. எனவேதான் தொகுதி மாறுகிறார்’ என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வார்களே...’ என்ற கேள்வியை முன்வைக்கவே, `அப்படியென்றால் அம்மா பாணியைப் பின்தொடரலாமே... சென்டிமென்ட்டாகவும் வொர்கவுட் ஆகும்' என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள் அவருக்கு நெருக்கமான கொங்கு ரத்தத்தின் ரத்தங்கள்.

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி

இரண்டு தொகுகளில் எடப்பாடி பழனிசாமி?

1991-ல் காங்கேயம் மற்றும் பர்கூர் ஆகிய இரண்டு தொகுதியில் களமிறங்கிய ஜெயலலிதா, இரண்டிலுமே அமோக வெற்றிபெற்றார். இதைத்தான் கோடிட்டுக் காட்டுகிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான மூத்த ர.ர-க்கள். `1989 -ல் ஜானகி-ஜெயலலிதா அணி எனப் பிரிந்திருந்து கட்சி பல நெருக்கடியைச் சந்தித்து, இறுதியாகக் கட்சியைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. அதன் பிறகு ஒருங்கிணைந்த கட்சியின் மூலம் தேர்தலைச் சந்தித்து முதன்முறையாக முதல்வரானார் அம்மா. இப்போதும் சூழல் அப்படித்தான். அதனால் சென்டிமென்ட்டாக இரண்டு தொகுதியில் களமிறங்கினால், முதல்வர் வேட்பாளராக நேரடியாகத் தேர்தலைச் சந்தித்து வெற்றியும் பெறலாம் என்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. எல்லாவற்றையும் பரிசீலித்திருக்கிறார் முதல்வர். எனவே, எடப்பாடி தொகுதியோடு சேர்ந்து மேற்கண்ட நான்கு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியும் சேர்த்து இரண்டு தொகுதிகளில் அவர் களமிறங்கலாம். நிச்சயம் குறைந்தது ஒரு தொகுதியாவது க்ளிக் ஆகுமில்லையா..." என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் உற்சாகமான குரலில்.

Also Read: `சட்டம், தன் கடமையைச் செய்யும்!’ - வேல் யாத்திரை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி

அதேநேரத்தில், ``இது இப்போதைக்கு ஆலோசிக்கப்படும் ஒரு பிளான்தான். தேர்தல் நெருங்க நெருங்க வேறு பிளான்களும் போடப்படலாம். A, B, C என பல பிளான்களோடு தேர்தலைச் சந்திப்பதுதானே அரசியல் கட்சிகளின் வாடிக்கை’’ என்றும் புதிர் போடுகிறார்கள் அ .தி.மு.க-வினர். இந்நிலையில், இந்தத் தகவல்க குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தியிடம் கேட்டோம்.

``1989 ல் ஜா-ஜெ என இரண்டு அணிகளாகத் தேர்தலைச் சந்தித்தபோது, கடைசி நேரத்தில் 'என்னால பிரசாரத்துக்கு வர முடியாத சூழல். நீங்களே பார்த்துக்கோங்க பழனிசாமி. வாழ்த்துகள்’ என்று ஜெயலலிதாம்மா வாழ்த்து தெரிவிச்சாங்க. அப்போதே வெற்றியடைந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. இப்போ எங்கே நின்றாலும் அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அ.தி.மு.க-வும் வெற்றியடைந்து, மூன்றாவது முறை ஹாட்ரிக் ஆட்சி அமைக்கப்போவது நிச்சயம். மற்றபடி எடப்பாடி தொகுதியையே மிகச்சிறப்பாக அற்புதமாக வைத்திருப்பதால் அவர் தொகுதி மாற வாய்ப்பில்லை. மேலும், தேர்தல் நெருங்கும்போதுதானே தொகுதி குறித்தெல்லாம் பரிசீலிப்பார்கள்... இப்போதே என்ன அவசரம்..?" என்றார் தமது வழக்கமானபாணியில்.

பெங்களூரு புகழேந்தி

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தேர்தல் களத்தில் தன்னுடைய தனித்த தலைமைத்துவத்தை நிரூபித்துக்கொள்ளப் பெரும் முயற்சி எடுத்துவருகிறார் எடப்பாடி. `அரசியல் சதுரங்கத்தில் லாகவமாக காய்நகர்த்துபவர்களுக்கே வெற்றி சாத்தியம்’ என்பார்கள். உண்மைதான். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தலைவர்களுக்கு நிகரான கில்லாடிகளும் இருக்கிறார்கள். அவர்கள் தலைவர்களையே தேர்வு செய்யும் `வாக்காளர்கள்.’



source https://www.vikatan.com/news/politics/admk-cm-candidate-edappadi-palanisamys-plan-for-tn-election-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக