கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே வர்க்கலா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் கணவருக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கிறது. அதில், அவருடைய மனைவிக்கு வேறோர் ஆணுடன் பழக்கம் இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அது யாரோ வேண்டுமென்றே எழுதிய கடிதம் என்பதை உணர்ந்துகொண்ட அந்தப் பெண்ணின் கணவர், அது குறித்து வர்க்கலா காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரளிக்கச் சென்றபோது உடன் தனது மனைவியின் உறவினரான டாக்டர் சுபு என்பவரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். டாக்டர் சுபு, அரசு பல் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார்.
அந்தப் பெண் சுபுவின் தங்கை முறை என்பதால், அந்தக் குடும்பத்தினருக்குத் தொடர்ந்து உதவி செய்துவந்திருக்கிறார். மொட்டைக் கடிதம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், ஒருநாள் அந்த இளம்பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அவரது ஆபாசப் புகைப்படங்கள் ஓர் எண்ணிலிருந்து வந்திருக்கின்றன. அதே ஆபாசப் படங்கள் அந்தப் பெண்ணின் கணவரின் வாட்ஸ்அப், உறவினர்களின் வாட்ஸ்அப்புக்கும் சென்றிருக்கின்றன. இதையறிந்த, இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.
இது யாருடைய வேலையாக இருக்கும் என்று யோசித்தவர், தனது கணவரின் வேலையாகத்தான் இருக்கும் என்று சந்தேகப்பட்டார் அந்தப் பெண். அதைக் கணவரிடம் நேரடியாகக் கேட்டும்விட்டார். இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கணவன் மீது சந்தேகம் வலுத்ததையடுத்து அந்த இளம்பெண், கணவனைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அதோடு, கணவன் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருக்கிறார். காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்ற அந்த இளம் பெண்ணுடன் டாக்டர் சுபுவும் சென்று உதவியிருக்கிறார்.
இளம்பெண்ணின் புகார் குறித்து விசாரணை நடத்த உதவி கமிஷனர் பிரதாப் சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸார் விசாரணையில் திருவனந்தபுரம், நெடுமங்காடு அருகே ஆனாடு என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் (30) என்பவர் ஆபாசப் படங்கள் அனுப்பியது தெரியவந்தது. ஸ்ரீஜித் அதே பகுதியில் செல்போன் ரீசார்ஜ் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்திவந்திருக்கிறார். கடைக்குச் வந்த ஒரு வாடிக்கையாளரின் ஆதார் கார்டைவைத்து மோசடியாக சிம் கார்டு வாங்கியிருக்கிறார். அந்த சிம் கார்டை பிரபல சின்னத்திரை நடிகரும், டாக்டர் சுபு-வின் நெருங்கிய நண்பருமான ஜாஸ்மீர் கானிடம் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் டாக்டர் சுபு கூறியபடி, இளம்பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து அனுப்பிவைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இளம்பெண்ணின் உறவினரான டாக்டர் சுபு, அவருடைய நண்பரான நடிகர் ஜாஸ்மீர் கான், ரீசார்ஜ் கடை வைத்திருக்கும் ஸ்ரீஜித் ஆகிய மூவரையும் போலீஸார் கைதுசெய்தனர். அந்த இளம்பெண்ணின் அண்ணன் முறை வரும் சுபுவே அவருக்கு எதிராக மொட்டைக் கடிதம் அனுப்பியதும், அவரது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டதும் தெரியவந்திருக்கிறது.
Also Read: திருச்சி: 400 ஆபாச வீடியோக்கள்... பெண் வாடிக்கையாளர்கள் டார்கெட்! - சிக்கிய வங்கி ஊழியர்
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``டாக்டர் சுபு, தனக்கு தங்கை முறைவரும் இளம்பெண்ணை அவருக்குத் தெரியாமலேயே விரும்பியிருக்கிறார். அவருக்குத் திருமணம் ஆன பின்னரும் அந்தப் பெண்ணை மறக்காத சுபு, இளம்பெண்ணைக் கணவரிடமிருந்து பிரிப்பதற்காக மொட்டைக் கடிதம் எழுதியதுடன், மார்பிங் செய்து ஆபாசப் படங்களையும் அனுப்பியிருக்கிறார்.
இதையெல்லாம் செய்துவிட்டு, அந்த இளம்பெண்ணுக்கு உதவுவதுபோல் நடித்திருக்கிறார். சுபு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த இளம்பெண்ணும், அவருடைய கணவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ முடிவெடுத்திருக்கிறார்கள்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/thiruvananthapuram-police-arrests-doctor-over-harassment-complaint
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக