Ad

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

மகாராஷ்டிரா: `நேரம் வந்தால் சேனா பவனை இடிப்போம்’ -பாஜக உறுப்பினர் கருத்துக்கு உத்தவ் தாக்கரே பதிலடி

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா இடையே பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. சிவசேனா கூட்டணி அரசை எப்படியாவது கலைத்துவிடவேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பாஜக பல வழிகளில் முயற்சி மேற்கொண்டது, ஆனாலும் பாஜகவின் முயற்சி கைகூடவில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். எனவே சிவசேனா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கு பாஜக அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ மூலம் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாஜக சட்டமேலவை உறுப்பினர் பிரசாத் லாட் மும்பை மாகிமில் நடந்த பாஜக உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ``நாங்கள் எப்போது எங்கு வந்தாலும் அதிகப்படியான போலீஸாரை அனுப்புகின்றனர்.

உத்தவ்தாக்கரே

எங்களைக்கண்டு பயப்படுகின்றனர். நாங்கள் மாகிமிற்கு வரும்போது சிவசேனா பவனை இடித்துவிடுவோம் என்று அவர்கள் நினைக்கின்றனர். பயப்படவேண்டாம். நேரம் வந்தால் அதையும் செய்வோம்” என்று தெரிவித்தார். சிவசேனா பவனை இடிப்போம் என்று பாஜக சட்டமேலவை உறுப்பினர் பேசியது சிவசேனாவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா தலைவரும், முதல்வருமான உத்தவ் தாக்கரே, ``சிலர் எங்களை அடிக்க நினைக்கின்றனர். ஆனால் நாங்கள் திரும்ப அடிக்கின்ற அடி அவர்கள் மீண்டும் எழுந்து நிற்க முடியாத படி இருக்கும்” என்று தெரிவித்தார். உத்தவ் தாக்கரே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இதனை தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

உத்தவ் தாக்கரே

சிவசேனா பவனை இடிப்பதாக பேசியது குறித்து பிரசாத் லாடிடம் கேட்டதற்கு, ``எனது கருத்தை மீடியா தவறாக திரித்து தெரிவித்துவிட்டன. பாலாசாஹேப் தாக்கரே மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். சேனா பவன் பாலாசாஹேப்புடன் தொடர்புடைய இடம். இந்த இடத்திற்கு அவமரியாதை செய்ய மாட்டோம். மீடியாவில் வெளியான தகவல் கடந்த மாதம் சேனா பவனுக்கு வெளியில் பாஜகவினர் மீது சிவசேனாவினர் தாக்கிய போது சிவசேனாவினர் எங்களை தாக்கினால் நாங்களும் திரும்ப தாக்குவோம் என்று தெரிவித்திருந்தேன். அதனைத்தான் இப்போது வெளியிட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: `சிவசேனா, தேசியவாத காங்கிரஸுக்கு பா.ஜ.க நன்றி சொல்ல வேண்டும்!’ - மத்திய அமைச்சரவை குறித்து சிவசேனா

உத்தவ் தாக்கரேயின் கருத்து குறித்து எதிர்க்கட்சி தலைவரான தேவேந்திர பட்நவிஸ் கூறுகையில், ``நாங்கள மோசமான வார்த்தையை பயன்படுத்துவதில்லை. அது பாஜகவினரின் கலாசாரம் இல்லை. அதேசமயம் எங்களை யாராவது தாக்கினால் நாங்கள் அவர்களை விடமாட்டோம்” என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/politics/when-the-time-comes-we-will-demolish-sena-bhavan-uddhav-thackeray-retaliates-against-bjp-legislator

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக