வேலூர் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நரேஷ்குமார். இவரது மனைவி கோமதி (27). இவர்களுக்கு ஐந்து வயதில் நித்தில்குமார் என்ற மகனும், மூன்று வயதில் ரியாஸ்ரீ என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் நெஞ்சு வலி ஏற்பட்டு நரேஷ்குமார் திடீரென மரணமடைந்துவிட்டார். இதனால், மனமுடைந்த கோமதி குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு விஷத்தன்மைக் கொண்ட கொசு மருந்தை குழந்தைகளை குடிக்க வைத்துவிட்டு அவரும் குடித்துள்ளார். நேற்று காலை கோமதி நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வராததால், அவரை எழுப்புவதற்காக மாமனாரும், மாமியாரும் அறைக்குச் சென்றுள்ளனர். அப்போது, பேரக்குழந்தைகளுடன் அவர் மூச்சுப் பேச்சு இல்லாமல் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் மூன்று பேரும் மீட்கப்பட்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவப் பரிசோதனையில், குழந்தை ரியாஸ்ரீ இறந்து நீண்ட நேரமானது தெரியவந்தது. கோமதியும், அவரது மகனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து வேலூர் வடக்குப் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
இதனிடையே, கடைசியாக கோமதி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், ‘‘எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க. அவர் இல்லாத இந்த உலகத்துல எனக்கு வாழப்பிடிக்கலை. சின்ன சின்ன விஷயம்கூட அவரை நினைக்க வைக்குது. யாருக்குமே கஷ்டம் கொடுக்காம வாழணும்னு அவர் சொல்லுவாரு. அதனால, நானும் குழந்தைகளை கூட்டிக்கிட்டு அவர் போன இடத்துக்கேப் போறேன்’’ என்று கூறியிருப்பதாக காவல்துறையினர் சொல்கிறார்கள். இந்த துயரச் சம்பவம், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/mother-attempt-suicides-by-poisoning-her-2-children-vellore-shock
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக