விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகிலுள்ள கலித்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சரோஜா (80), அவர் மகள் பூங்காவனம் (58) இருவரும் நேற்று முன்தினம் (07.12.2021) காலை அவர்களின் இல்லத்தில் தலைப் பகுதியில் பலமாகத் தாக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்துகிடந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களைக் கண்ட உறவினர்கள், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த கண்டமங்கலம் காவல்துறையினர், இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் பின்னர், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை தொடங்கியது. விழுப்புரம் சரக டி.ஐ.ஐி பாண்டியன், எஸ்.பி ஸ்ரீநாதா ஆகியோரும் நேரில் சென்று ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து இருவரும் நகை, பணத்துக்காகக் கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு காரணங்களுக்காகக் கொலை செய்யப்பட்டார்களா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டது விழுப்புரம் காவல்துறை.
Also Read: இருவர் கொலை; சாலையில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள்மீது கொடூரத் தாக்குதல்! - மர்ம ஆசாமிகளுக்கு வலை
அதேபோல, இந்தச் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினமே (6-ம் தேதி நள்ளிரவு) மேலும் இருவர் மர்மநபர்களால் தாக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த அஞ்சம்மா, நாகலிங்கம் என்ற அந்த இருவரும் கலித்திராம்பட்டில் செங்கல்சூளை ஒன்றில் வேலை செய்துவிட்டு, சாலையோரமாகப் படுத்து உறங்கிகொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, நள்ளிரவில் திடீரென வந்த மர்மநபர்கள், அந்த இருவரையும் பலமாகத் தாக்கியிருக்கின்றனர். அதில் பலத்த காயமடைந்த இருவரும் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், கலித்திராம்பட்டு பகுதியிலுள்ள ஒருசில கோயில்களிலும் உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியும் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 6-ம் தேதி இரவு அரங்கேறிய இந்தக் கொடூர குற்றச் சம்பவங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இரட்டைக் கொலை சம்பவத்தில் மூன்று பிரிவுகளிலும், சாலையோரமாக உறங்கிய இருவர் மீதான கொலை முயற்சித் தாக்குதல் சம்பவத்தில் மூன்று பிரிவுகளிலும் வழக்குகள் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் பதியப்பட்டன.
இந்தக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட மா்மநபர்களைப் பிடிப்பதற்காக, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., மாவட்ட எஸ்.பி-யின் பரிந்துரைப்படி, விழுப்புரம் மாவட்ட டி.எஸ்.பி கோவிந்தராஜ் தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடைபெற்றது. மேலும், இதே மாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த குற்றவாளிகள் மீதும் கவனம் செலுத்தி, தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது காவல்துறை. இந்நிலையில், இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட கவிதாஸ் (30) என்ற இளைஞரை அடுத்த 24 மணி நேரத்துக்குள் பிடித்து அதிரடிகாட்டியுள்ளனர் தனிப்படை போலீஸார்.
Also Read: பிபின் ராவத், சஞ்சய் காந்தி, செளந்தர்யா | விமான விபத்துகளில் உயிரிழந்த முக்கிய புள்ளிகள்
நேற்று (08.09.2021) மாலை செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்துள்ள விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியனும், எஸ்.பி ஸ்ரீநாதாவும் குற்றவாளி பிடிபட்டது தொடர்பாக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ``இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவரை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டபோது, எஸ்.ஐ பிரபு தலைமையிலான தனிப்படையினர் கவிதாஸ் என்ற இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த நபர், மேற்படி நடைபெற்ற இரட்டைக் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஒட்டனந்தல் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞரைக் கைதுசெய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, கொலை செய்யப்பட்ட சரோஜா, பூங்காவனம் இருவரும் அணிந்திருந்த சுமார் எட்டு கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடிப்பதற்காக இருவரையும் தடியால் தாக்கிக் கொலை செய்து, இறந்த பின்னும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, நகைகளுடன் தப்பித்துச் சென்றது தெரியவந்துள்ளது.
தொடர் விசாரணையில், குறிப்பாக வயதான பெண்களை குறிவைத்துச் செயல்படும் இந்த நபர், அவர்களைக் கொடூரமான முறையில் தாக்கி கொலைசெய்து, நகைகளைப் பறித்துக்கொண்டு செல்வதுடன் மட்டுமின்றி, தாக்கப்பட்ட அந்தப் பெண்கள் மயக்கநிலையில் இருக்கும்போதோ... இறந்த பின்னரோ பாலியல் வன்கொடுமை செய்யும் குணாதிசயங்களை உடையவர் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில், கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரில் வீட்டில் தனியாக இருந்த வயதான இரு பெண்களைத் தாக்கி, அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார். கண்டமங்கலம் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் எட்டு கிராம் நகைகளும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புலன் விசாரணையின் முடிவில், கவிதாஸ் என்ற இந்த நபர், தொடர்ந்து இது போன்ற கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கைப்போலவே திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில், ஒரு கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கும், ஒரு கொலை முயற்சி, வன்கொடுமை முயற்சி வழக்கும் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் காவல் நிலையத்தில், ஒரு கொலை, கொள்ளை மற்றும் வன்கொடுமை வழக்கும் உள்ளது. சேலம் மாவட்டத்தில் இரு கொள்ளை வழக்குகள் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளனர்.
Also Read: சாலையோரத்தில் உறங்கியவர் தலையில் கல்லைப் போட்டு கொலை! - சைக்கோ கொலையாளி கைது
மேலும், கண்டமங்கலம் அருகே நடந்த இந்தக் கொடூர இரட்டைக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கவிதாஸ் என்பவரை அடுத்த 24 மணி நேரத்துக்குள் பிடித்த தனிப்படையினருக்கு விழுப்புரம் டி.ஐ.ஜி-யும் எஸ்.பி-யும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
source https://www.vikatan.com/news/crime/the-psycho-thief-who-recently-killed-two-in-villupuram-district-was-caught-by-the-police
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக