``இதையெல்லாம் கேக்கணும்ங்க. நாங்கல்லாம் கட்சிக்கு வந்து 30 வருஷம் ஆச்சு. நாங்கதான் சீனியாரிட்டி. நாங்கல்லாம் கீழ உக்காந்துக்கிட்டு இருக்கோம். அந்தம்மா நேத்துதான் கட்சிக்கு வந்துருக்கு. எந்தப் பொறுப்புலயும் இல்லை. ஆனா, மேடைல ஏறி உக்காருறாங்க. வசதியானவங்கன்னா மேல உக்கார வெப்பாங்களா? எப்ப வந்தாலும் அந்தம்மா இப்படித்தான் பண்றாங்க.
Also Read: `என் வைரல் மீம்களை ஃபார்வர்டு செய்வதற்கு முன்..?' - கோவை அ.தி.மு.க. உறுப்பினர் சோனாலி
கட்சி வேலை செய்யட்டும். அப்பறம் மேல வரட்டும், வரவேற்கறோம். போராட்டம், உண்ணாவிரதம் பண்ணி வந்தவங்க நாங்க. எதுவுமே பண்ணாம ஷோவிட்டு வந்தா ஸ்டேஜ்ல உக்காரவெப்பீங்களா?”
கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில்தான் இந்த அர்ச்சனை வார்த்தைகள் விழுந்தன. முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே மேடையில் இடம் என்று கூறிவிட்டனர். இந்த நிலையில், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை இணைச் செயலாளர் சோனாலி பிரதீப், கையில் ஒரு பார்சலுடன் நின்றுகொண்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி என்ட்ரி கொடுப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு சோனாலி மேடையில் ஏறி அமர்ந்துவிட்டார். ``சீனியர்கள் இருக்கும்போது, அவரை எப்படி மேடையேற்றலாம்?” என்ற ஆத்திரத்தில் அதிமுக மகளிர் நிர்வாகிகள் சோனாலியைத் திட்டித் தீர்த்தனர்.
இது குறித்து அதிமுக பெண் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``வேலுமணி கட்சியைச் சரியாகத்தான் நடத்துகிறார். எங்கு அவரின் நிகழ்ச்சி நடந்தாலும், சோனாலி காரில் வந்து ஆஜராகிவிடுவார். அவர் இருப்பது கவுண்டம்பாளையம் தொகுதி. ஆனால், வேலுமணி நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் கையில் ஸ்வீட், புக் போன்ற பரிசுகளுடன் வந்துவிடுவார். சில மாதங்களுக்கு முன்பு வ.உ.சி பூங்காவில் ரூ.7 லட்சத்துக்கு ஏதோ நிகழ்ச்சி நடத்தியதாக வேலுமணியிடம் சோனாலி கூறிவந்தார்.
‘எதுவாக இருந்தாலும், மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ-கிட்ட கேட்டுப் பண்ணுங்க’ என்று வேலுமணி சொல்லிவிட்டார். சோனாலியைப்போல பாசறை நிர்வாகிகள், அவ்வளவு ஏன்... மாநில பொதுக்குழு உறுப்பினர்கூட கீழேதான் அமர்ந்திருந்தனர். சோனாலி குறித்து யாரிடம் சொன்னாலும், ‘அமைச்சர்கிட்ட (வேலுமணி) பேசிக்கோங்க’ என்று நழுவிவிடுவார்கள்.
நேற்றுகூட பல மூத்த நிர்வாகிகள் சொல்லியும் அவர் மேடையிலிருந்து இறங்கவில்லை. தன்னுடைய இருப்பை வேலுமணியிடம் பதிவுசெய்வதற்காகத்தான் இப்படிச் செய்துகொண்டிருக்கிறார். ‘உங்களைவிட எல்லாரும் சீனியர்கள். அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க’ என்று வேலுமணியும் கூறிவிட்டார். அதையெல்லாம் சோனாலி கண்டுகொள்வதாக இல்லை. சோனாலி மேயர் பதவிக்கு முயன்றுவருவதாகக் கூறுகின்றனர்.
கட்சியில் இறங்கி வேலை செய்யட்டும். எங்களைப்போல ஆர்ப்பாட்டம், போராட்டத்திலெல்லாம் கலந்துகொள்ளட்டும். அதைவிடுத்து, நேரடியாக ஸ்டேஜில் ஏறி போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, பொக்கே கொடுப்பது போன்றவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றனர்.
இது தொடர்பாக விளக்கம் கேட்க சோனாலி பிரதீப்பைத் தொடர்பு கொண்டோம். ``அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நான் நேற்று கீழேதான் அமரச் சென்றேன். ஆனால் கீழே இடமில்லை. சீட் பார்த்துக்கொண்டிருந்தபோது, என் அப்பாவுடன் நீண்ட ஆண்டுக்காலமாக இருந்த ஒரு அண்ணா, என்னை மேடையில் ஏற்றி அமரவைத்துவிட்டார். இதற்கு முந்தைய நிகழ்ச்சியிலும் அவர்தான் மேடையில் அமரவைத்தார்.
நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்காமல், மேடையில் அமரவைத்துவிட்டார். மற்றபடி அவர்கள் சொல்வதுபோல பணத்தை வைத்தெல்லாம் எதுவும் செய்வதில்லை. கடவுள் எங்கள் தேவைக்குப் பணம் கொடுத்திருக்கிறார். அவ்வளவுதான்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/coimbatore-admk-women-against-sonali-pradeep-what-was-the-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக