ஈரோடு மாவட்டம், அந்தியூரில் உள்ள அந்தியூர் காலணி பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (35). அவருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து கொண்டும், தனியார் மாவு மில் ஒன்றிலும் வேலையும் பார்த்து வந்திருக்கிறார். இவருக்குக் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பவானி அருகேயுள்ள பெரிய மோளப்பாளையத்தைச் சேர்ந்த 20 வயதான பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே 15 வயதில் திருமணம் நடந்திருக்கிறது. ஒரு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரைப் பிரிந்து, இரண்டவதாக நந்தகுமாரைத் திருமணம் செய்திருக்கிறார்.
அந்தப் பெண் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில், ஜனவரி 31-ம் தேதி நந்தகுமார் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியுடன் உடல்நிலை பாதிக்கப்பட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உடனே, மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கின்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் நந்தகுமாருடைய ரத்தத்தில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. உடனே போலீஸார் மற்றும் மாஜிஸ்திரேட் முன்னிலையில், நந்தகுமாரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
`ஜனவரி 28-ம் தேதி என்னோட தோட்டத்துல பயிர்களுக்கு மருந்து அடிச்சிட்டு வீட்டுக்கு சாப்பிட வந்தேன். சாப்பாடு கசக்குற மாதிரி இருந்தது. அப்பவே என் பொண்டாட்டிக்கிட்ட ஏன் சாப்பாடு கசக்குதுன்னு கேட்டேன். `அப்படில்லாம் ஒன்னும் இல்லையே’ன்னு சொன்னா. அந்த சாப்பாட்டை சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் என் உடல்நிலை இப்படி ஆச்சு’ என்று வாக்குமூலம் கொடுத்த நந்தகுமார், அவருடைய மனைவி மீது சந்தேகம் இருப்பதாவும் கூறியிருக்கிறார்.
தீவிர சிகிச்சையில் இருந்த நந்தகுமார், சிகிச்சைப் பலனின்றி பிப்ரவரி 15-ம் தேதி உயிரிழந்தார். அதன்பிறகு நந்தகுமாரின் மனைவியிடம் போலீஸார் பலமுறை விசாரித்தும் எந்தவித கூடுதல் தகவலும் கிடைக்காமல் இருந்திருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 18-ம் தேதி மறுபடியும் நந்தகுமாரின் மனைவியை அந்தியூர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். மருத்துவ அறிக்கையை வைத்து போலீஸார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த, நந்தகுமாருக்கும் உணவில் விஷம் வைத்து நான் தான் கொலை செய்தேன் என உண்மையை அவர் ஒப்புக் கொண்டதாக போலீஸார் கூறுகிறார்கள்.
Also Read: மதுரை: ’மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் கொன்றோம்’ - மீண்டும் உருவெடுக்கும் சிசுக் கொலை?
விசாரணையில் நந்தகுமாரின் மனைவி போலீஸாரிடம், `திருமணமான புதிதில் செக்ஸ் வைத்துக் கொள்வதில் ஆர்வமில்லாமல் இருந்த என்னுடைய கணவர், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பிறகு இரவு, பகல் பாராமல் எனக்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து தொந்தரவு செய்தார். நான் கர்ப்பமான பின்பும், தொடர்ந்து எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் என்னுடைய உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்தக் கொடுமையை தாங்க முடியாமல் தான் குழம்பில் பூச்சி மருந்தைக் கலந்துக் கொடுத்து என்னுடைய கணவரை கொலை செய்தேன்’ எனக் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். அதையடுத்து அவர் பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/social-affairs/crime/erode-anthiyur-police-arrest-wife-over-husband-murder
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக