Ad

செவ்வாய், 10 நவம்பர், 2020

கரூர்: `செந்தில் பாலாஜிக்கு தேர்தல் பயம்!' - கொந்தளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

"பேனர் வைத்ததில் ஏற்பட்ட சிறிய பிரச்னையை பெரிதாக்கியதோடு, ஒரு பெரியவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. ஆனால், 'அவரை அ.தி.மு.க வினர் தான் தாக்கினர்' என்று பெரிதாக்கிய செந்தில் பாலாஜி, பிணத்தை வைத்து அரசியல் செய்தார். தி.மு.க வின் தலைமை எப்படியோ, அதே போலதான் கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியும் பொய்யை மட்டுமே சொல்லிவருகிறார்" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசமாக பேசினார்.

அ.தி.மு.க கூட்டம்

Also Read: கரூர்: `கலெக்டர் மீது கோர்ட்டில் வழக்கு தொடுப்போம்!' - கொதிக்கும் செந்தில் பாலாஜி

தி.மு.க மாவட்டப் பொறுப்பாளரான செந்தில் பாலாஜி, 'கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கும். அ.தி.மு.கவினர் சவாலுக்கு தயாரா?' என்று பேட்டிக்கொடுத்தார். அதோடு, கடந்த ஞாயிறன்று, 'கரூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 25,000 தி.மு.க வாக்காளர்களை நீக்க அ.தி.மு.கவினர் முயல்கின்றனர். இதற்கு, கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி உடந்தை' என்று கூறி, பரபரப்பை பற்றவைத்தார். இந்த நிலையில், அதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். அ.தி.மு.கவின் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், கரூர் அருகே உள்ள பசுபதிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்துதுறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில்,

எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது...

"கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்று திமுக வினர் தவித்துவருகிறார்கள். அதற்கு, பொதுமக்கள் இடம் கொடுத்துவிடக்கூடாது. இங்கு ஒருத்தர் (செந்தில் பாலாஜி), 'கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியிலும், தி.மு.க பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கும்' என்று சவால்விட்டு வருகிறார். மக்கள்தான் அந்த 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாச வெற்றியினை வாக்குகள் மூலம் தெரிவிக்க வேண்டுமே தவிர, அவர் (செந்தில்பாலாஜி) தெரிவிக்க முடியாது. ஆகவே, 10 ஆயிரம் முறை அவர், வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தாலும், வெற்றியையும், தோல்வியையும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

தமிழகத்திலேயே கடந்த உள்ளாட்சி தேர்தலில் கரூரில் 100 சதவிகிதம் அ.தி.மு.கதான் வெற்றி பெற்றது. கரூர் மாவட்ட மக்களிடம் அ.தி.மு.க வின் திட்டங்களை சொல்வோம். உண்மையை சொல்வோம். ஆகவே, அ.தி.மு.க கட்சிக்கு தான் கரூர் மாவட்டம் என்பதை உணர்த்த, 100 சதவிகித வெற்றியை அ.தி.மு.க விற்கு கொடுத்தது தான் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தல் வெற்றி. ஆகவே, செந்தில் பாலாஜி வெறும் வாய்சவடால் பேச வேண்டாம். 100 சதவிகிதம் இது அம்மாவின் ஆட்சி. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 25 ஆயிரம் வாக்குகளை, கரூர் தொகுதிக்கு கொண்டு வந்து விட்டதாக பத்திரிகையில் பேட்டி கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி. அப்படி செய்ய முடியுமா?. அப்போது அதிகாரிகள் என்ன தூங்கி கொண்டு இருக்கிறார்களா?. நாளை கரூர் தொகுதியில் தி.மு.கவுக்கு தோல்வி ஏற்பட்டால், இதை காரணம் சொல்வதற்கா?.

அ.தி.மு.க கூட்டம்

எங்களுக்கு எந்த வாக்குகளையும் நீக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க கட்சி தான் ஜெயிக்கும். தேர்தல் பயம் வந்த காரணத்தினால் மட்டுமே செந்தில் பாலாஜி ஏதோ உளறிக் கொண்டு இருக்கிறார். பேனர் வைத்ததில் ஏற்பட்ட பிரச்னையை பெரிதாக்கியதோடு, ஒரு பெரியவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. ஆனால், அவரை அ.தி.மு.க வினர் தான் தாக்கினர் என்று கூறி பிணத்தை வைத்து அரசியல் செய்தார் செந்தில் பாலாஜி. தி.மு.க வின் தலைமை எப்படியோ, அதே போல தான் கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியும் பொய்யை மட்டுமே சொல்லிவருகிறார்" என்றார் அதிரடியாக!.



source https://www.vikatan.com/news/politics/mrvijayabaskar-speech-against-senthil-balaji

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக