Ad

புதன், 7 அக்டோபர், 2020

`புதிய பயணத்தைத் தொடங்குகிறேன்!’ - முன்னாள் ஆளுநர் அஸ்வனி குமார் தற்கொலை

இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஸ்வனி குமார் நேற்று இரவு அவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார், அவருக்கு வயது 69. அஸ்வனி குமார் வீட்டிலிருந்து, அவர் எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

1973 பேட்ஜ் ஐ.பி.எஸ் அதிகாரியான அஸ்வனி குமார், 2006 முதல் 2008 வரை இமாச்சலப்பிரதேச டிஜிபி-யாக செயல்பட்டவர். பின்னர் பதவி உயர்வு காரணமாக 2008 -ம் ஆண்டு முதல் 2010 வரை சி.பி.ஐ அமைப்பின் இயக்குநராக செயல்பட்டார். தொடர்ந்து 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மணிப்பூர், நாகலாந்து ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் அஸ்வனி குமார் செயல்பட்டுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். பல்வேறு பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அஸ்வனி குமார், தனது குடும்பத்துடன் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

சிம்லா வீடு

இந்நிலையில், அவர் நேற்று இரவு வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் அஸ்வனி குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். மேலும், தற்கொலை செய்வதற்கு முன்னர் அவர் எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடிதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இமாச்சல்பிரதேஸ டிஜிபி, சஞ்சய் குண்டு, ``அவர் தனது ஆன்மா ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதாக கடிதத்தில் எழுதியுள்ளார் . மேலும் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், சடங்குகள் போன்றவை இருக்கக்கூடாது என்று அவர் எழுதியுள்ளார்” என்றார். மேலும் அவர் கூறுகையில், ``குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். அவருக்கு மன அழுத்தம் இருந்ததாக உணர்ந்ததில்லை என்கிறார்கள். நேற்று மாலை வரை நன்றாக தான் இருந்திருக்கிறார். என்ன காரணத்துக்காக இந்த முடிவை அவர் எடுத்தார் என்று தெரியவில்லை” என்றார் டி.ஜி.பி.

இமாச்சல்பிரதேஸ டிஜிபி, சஞ்சய்

சி.பி.ஐ -யில் முக்கிய வழக்குகளை கையாண்ட அஸ்வனி குமார்!

2008 முதல் 2010 -ம் ஆண்டு வரையில் சிபிஐ இயக்குநராக செயல்பட்ட அஸ்வனி குமார், பல முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்தியுள்ளார். பல மர்ம முடிச்சிகளை கொணட ஆருஷி கொலை வழக்கை, முற்றிலும் புதிய குழு அமைத்து விசாரிக்க செய்தது அப்போதைய சிபிஐ இயக்குநர் அஸ்வனி குமார் தான். இந்த குழுவின் விசாரணை அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

Also Read: ஆருஷி மரணம் முதல் பெற்றோர் விடுதலை வரை... ஆருஷி கொலை வழக்கில் நடந்தது இதுதான்! #AarushiMurderCase

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பான விசாரணை தொடங்கியதும் அஸ்வனி குமார் பதவி காலத்தில் தான். மேலும் அவரின் பதவிக்காலத்தில், தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா மீதான போலி என்கவுன்டர் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மணிப்பூர், நாகலாந்து மாநில கவர்னராக செயல்பட்டார். 2014 -ம் ஆண்டு நாகாலாந்து கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் தலைமையிலான அரசு, பதவியில் நியமித்தவர்களை 2014 -ம் ஆண்டில் புதியதாக பதவியேற்ற மோடி தலைமையிலான அரசு பதவி நீக்கலாம் என்று கருதி அவர் ராஜினாமா செய்ததாக சொல்லப்பட்டது. கவர்னர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வனி குமார் ஏபிஜி கோயல் சிம்லா பல்கலைகழகத்தில் 2018 -ம் ஆண்டு வரை வேந்தராக பணியாற்றினார் என்பது குறிப்பிதக்கது.



source https://www.vikatan.com/news/crime/former-cbi-director-ashwani-kumar-found-hanging-in-his-home

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக