Ad

திங்கள், 10 மே, 2021

கங்கையில் மிதக்கும் கொரோனா பிணங்கள்... பழி போடும் பீகார், உத்திரபிரதேச மாநிலங்கள்!

இந்து மதத்தின் மிக முக்கிய புண்ணிய நதியான கங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களின் உடல்கள் வீசப்பட்டு கிடப்பதாக தகவல்கள் வெளியாகின. பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டம் சவுசா(chausa) கிராமத்தின் மகாதேவ் கட் வழியாக செல்லும் கங்கை நிதியில் பல உடல்கள் மிதந்து செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. உத்திரப்பிரதேசம் மாநில எல்லையில் உள்ள பக்ஸர் மக்கள், “ கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வீடுகளில் இறப்பவர்களின் உடல்களை இவ்வாறு கங்கையில் தள்ளி விடுகின்றன என குற்றம் சாட்டினர்.

கொரோனா சிகிச்சைக்கு தேவையான சுகாதார, மருத்துவ கட்டமைப்பு இல்லாததனால் நோய் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் வீடுகளிளேயே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. எளிய மக்களின் வீடுகளில் நோயாளிகளை தனிமைப்படுத்தும் வாய்ப்புகள் இல்லாததனால் பல குழந்தைகளின் கண்முன்னே தாயும் தந்தையும் இறந்து போகும் நிலையில் 40-50 பிணங்கள் நதியில் மிதந்து வரும் காட்சி வேதனை அளிக்கிறது.

கோவிட் தொற்று ஏற்பட்டு இறப்பவர்களின் உடல்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாதுகாப்பாக எரிக்கப்பட வேண்டும். கொரோனா இரண்டாவது அலையால் தினம்தோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் தினமும் உயிரிழப்பதினால் மயானங்கள் நிரம்பி வழியும் காட்சிகளை பார்த்து வருகிறோம். ஆனால் உத்திரபிரதேசத்தின் சில கிராம மக்கள் உடல்களை கங்கையில் போட்டிருக்கும் நிகழ்வு சுற்றுவட்டார மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கை புனிதத்தை போலவே நோய் தொற்றுகளையும் எப்போதும் கொண்டிருக்கும். கங்கையில் மிதக்கும் கொரோனா பாதிக்கப்பட்ட உடல்கள் பல மக்களுக்கு நோய்தொற்றினை பரப்ப வாய்ப்புகள் உள்ளது. மிதக்கும் உடல்கள் 6,7 நாட்கள் நீரில் ஊறி இருக்கலாம் என தெரிவிக்கும் மக்கள் கரை ஒதுங்கிய பிணங்களை தெரு நாய்கள் கடிப்பதாகவும் கூறிகின்றனர்.

பக்ஸர் மாவட்டம் சவுசா வட்டார அலுவலர் அசோக் குமார், “சம்பவம் அறிந்து நாங்கள் மகாதேவ் கட் விரைந்த போது நதியில் வரிசையாக 40-50 உடல்கள் மிதப்பதை பார்த்தோம். இதுவரை 100 பிணங்கள் சென்றுள்ளதாக பகுதி வாசிகள் கூறுகின்றனர். கங்கை நதி கரையில் பல உத்திரபிரதேச கிராமங்கல் உள்ளன. உடல்கள் உத்திரபிரதேசத்தின் எந்த கிராமத்தில் இருந்து வந்துள்ளன என விசாரணை நடத்துவோம். மேலும் இவை எந்த காரணத்திற்காக தூக்கி வீசப்பட்டுள்ளன என்றும் இவை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் தானா என்றும் விசாரணையில் தெரியவரும். தற்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சில உடல்களை கைப்பற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளோம்”. என கூறினார்.

பீகாரில் இறந்தவர்களின் உடலை ஆற்றில் தள்ளிவிடும் வழக்கம் இல்லாததனால் இவை உத்திரபிரதேசத்தில் இருந்து வந்தவை என பீகார் அதிகாரிகள் தெரிவித்தாலும் உத்திரபிரதேச அதிகாரிகள் பழியை மறுத்து வருகின்றனர். மக்கள் கோவிட் பரவும் அச்சத்தில் தவித்து வருகின்றனர். சனிக்கிழமை சில பாதி எரிந்த உடல்கள் ஹமிர்பூர் நகர், யமுனா நதியில் கண்டெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ், இவை கணக்கில் காட்டப்படாத கொரோனா பாதிப்பிற்கான சான்றுகள் என விமர்சித்துள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/dozens-of-bodies-wash-up-on-banks-of-ganges-river

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக