Ad

வியாழன், 6 மே, 2021

புத்தம் புது காலை : கனவுகளைக் கலைக்கும் கொரோனா... என்னவாகும் இந்த ஒலிம்பிக் வீரரின் லட்சியம்?!

சென்ற ஆண்டு கொரோனாவின் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், இந்த ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை டோக்கியோவில் திட்டமிட்டபடி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இந்தியாவின் இரண்டாவது கோவிட் அலை, விளையாட்டு வீரர்கள் பலரது கனவுகளையும் தகர்த்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

பொதுவாகவே, ஒலிம்பிக் தடகளப் போட்டிகளுக்கும் இந்தியாவிற்கும் ஏழாம் பொருத்தம். ஒவ்வொரு முறையும் பதக்கத்திற்கு மிக அருகில் வந்து, அதைத் தவறவிட்டு விடுவதுதான் பெரும்பாலும் நடக்கும். 1984, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில், தவறவிட்ட வெண்கலப் பதக்கத்திற்காக இன்னமும் கண்ணீர் மல்குகிறார் இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷா.

ஆனால், இந்தமுறை அப்படி நடக்காது என்று இந்தியா நம்பியது. 2020 ஒலிம்பிக் போட்டிகள் அறிவிக்கப்பட்டது முதலாக, பல நம்பிக்கை நட்சத்திரங்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது நமது நாடு. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் அவினாஷ் சாபிள்.

அவினாஷ் சாபிள்... மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது வீரர். Steeplechase event எனப்படும் 3000 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தின் நம்பிக்கை நட்சத்திரம். உண்மையில் இவர் ஒரு இராணுவ வீரர். பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுமே இந்திய இராணுவத்தில் சேர்ந்த இவர், சியாச்சென் பனியாறு, ராஜஸ்தான் பாலைவனம், சிக்கிம் பனிமலை என அனைத்து சிரமமான பணியிடங்களிலும் பணிபுரிந்திருக்கிறார். என்னதான் இராணுவ வீரராக பணிபுரிந்தாலும் அவினாஷ் சாபிளுக்குள் வேறு ஒரு பெருங்கனவு இருந்தது. அது தடகளச் சாம்பியன் ஆகவேண்டும் என்கிற லட்சியக் கனவு.

அவினாஷ் சாபிள்

விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவினாஷுக்கு ஆரம்பத்தில் இது ஒரு எட்டமுடியாத கனவாகத்தான் இருந்தது. தனது கிராமத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், தினமும் பள்ளிக்கு ஆறு கிலோமீட்டர் தொலைவை நடந்தே சென்று பயின்றதும், பள்ளிக்கு தாமதமான காலங்களில் ஓடியே இந்த தூரங்களைக் கடந்ததும்தான், தன்னை தடகளப் போட்டிகளுக்குத் தயார்படுத்தியது என்று சொல்லியிருக்கிறார் அவினாஷ்.

2015-ம் ஆண்டு, இந்திய இராணுவத்தில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் பெரிய அளவில் வெற்றிபெற்ற பிறகுதான், தனக்குள் இருந்த தடகள வீரரை வளர்த்தெடுக்க முடியும் என்று புரிந்துகொண்ட அவினாஷ் அதன்பிறகே தன்னை steeplechase பயிற்சிகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் தனது முந்தைய சாதனையை முறியடித்து முன்னேறிய அவர், தோஹாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்று, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், அவரது சமீபத்திய சாதனையான 8:20:20 நிமிடங்கள் என்பது அதற்கு முந்தைய சாதனையான் 8:24:40 நிமிடங்களை விடக் குறைவு என்பதுடன், இவை இரண்டுமே உலக சாம்பியன்களைக் காட்டிலும் குறைவான நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவினாஷை ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு முன்பாக, சிறப்பு பயிற்சி பெறுவதற்காக உகாண்டாவிற்கு அனுப்பி வைக்க இந்திய அரசாங்கம் முடிவுசெய்திருந்தது. ஆனால், இந்தியாவில் கோவிட் நோயின் இரண்டாம் அலை தீவிரமடைய, சர்வதேச விமானப் போக்குவரத்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன என்பது அவினாஷுக்கு முதல் அடி என்றால், சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட கோவிட் தொற்று இன்னொரு அடியாக உள்ளது.

அவினாஷ் சாபிள்

கோவிட் தொற்று நிலையிலும், ''ஒலிம்பிக்ஸில் தங்கம் என்ற தனது கனவை நனவாக்க, ஓய்வுக்கு நடுவே மருத்துவர்கள் அறிவுரையுடன் சிறுபயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டபடிதான் இருக்கிறேன்'' என்று தன்னம்பிக்கையுடன் புன்னகைக்கும் அவினாஷ், ஒலிம்பிக் தங்கத்தை நிச்சயம் இந்தியா கொண்டுவருவேன் என்று உறுதியுடன் கூறுகிறார்.

''வெற்றி என்பது உண்மையில் இலக்கு அல்ல, பயணம்'' என்று கூறும் அவினாஷ் சாபிளுக்கு, உங்களது இலக்கின் தூரம், இனி ஒன்றும் அதிகமில்லை என்று கூறி மனதார வாழ்த்துவோம்.

#WorldAthleteDay



source https://cinema.vikatan.com/sports-news/indias-olympic-aspirant-avinash-sable-affected-by-cornoa

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக