Ad

செவ்வாய், 11 மே, 2021

மதுரை: கடன் சுமை.. 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை! - அதிர்ச்சி சம்பவம்

கடன் பிரச்னையால் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரவணன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஜாரில் நகைப்பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார் சரவணன். இவர் மனைவி ஸ்ரீநிதி. இத்தம்பதியினருக்கு மகாலட்சுமி, அபிராமி, அமுதன் என 3 குழந்தைகள்.

நேற்று காலை சரவணன் வீட்டு வாசல் திறக்கப்பட்டு தண்ணீர் தெளித்து கோலமிட்டுள்ளனர். பின்னர் அவர் மகள் பக்கத்திலிருக்கும் கடைக்கு வந்து பால் பாக்கெட் வாங்கி சென்றுள்ளார். அதன் பின்பு 11 மணி வரை வீடு பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீண்டநேரம் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அருகில் வசிப்பவர்கள் சந்தேகமடைந்து கதவை தட்டியுள்ளனர். திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

சரவணன்- ஸ்ரீநிதி

அங்கே அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரவணன், அவர் மனைவி ஸ்ரீநிதி, மகள்கள் மகாலட்சுமி, அபிராமி, மகன் அமுதன் என 5 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர். உடனே உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

உசிலம்பட்டி காவல்துறையினர் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தியதில் சரவணன், நகை செய்ய பயன்படுத்தும் ரசாயணத்தை குடித்து மரணமடைந்தது தெரியவந்தது. சரவணன் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'எங்கள் மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. குடும்பத்தினர் என்னை கடனாளியாக்கி விட்டனர்' என்று எழுதியிருந்ததாக சொல்லப்படுகிறது.

தற்கொலை

இது குறித்து நாம் விசாரித்த போது, `உசிலம்பட்டியில் தந்தை நடத்திய நகைப்பட்டறையைத்தான் சரவணன் நடத்தி வந்துள்ளார். தொழிலுக்காக பலரிடமும் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். கடந்த ஆண்டு முதல் கொரோனா ஊரடங்கால் தொழில் பாதிப்படைந்திருக்கிறது. இதனால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட ரொம்ப சிரமப்பட்டுள்ளார்.

தந்தை அய்யாவு பெயரில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும், அதை விற்பனை செய்ய முடியாத வகையில் உயில் எழுதி வைத்துவிட்டு அவர் மரணம் அடைந்துள்ளார்.

இதனால், கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் அதன் மூலம் கடனை அடைக்க முடியவில்லையே என்று மன அழுத்தத்திற்கு சரவணன் ஆளாகியுள்ளார். அது மட்டுமில்லாமல் குடும்பத்திலும் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

சரவணன்- ஸ்ரீநிதி

இந்த நிலையில்தான் கடன் பிரச்னை நெருக்க, நேற்று காலை மனைவி, குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்’ என்று சொல்லப்பட்டது.

இளம் தம்பதியினர் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த மரணத்தில் வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/family-suicide-at-usilampatti-in-debt-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக