Ad

சனி, 20 மார்ச், 2021

`துறைமுகம் தூத்துக்குடிக்கு போய்விட்டது; உங்க விருப்பத்திற்கு மாறாக நடக்காது!' - பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக மக்கள் விரும்பும் திட்டத்தை கொண்டுவருபேன் என பேசிவந்தார். கன்னியாகுமரியில் அமைய உள்ள சரக்குப்பெட்டக துறைமுகம் குறித்து பேசவில்லை. இந்த நிலையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தளவாய்சுந்தரத்துடன் சேர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். பொழிக்கரை, கேசவன் புத்தன் துறை, புத்தன்துறை, பள்ளம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்த பிரசாரத்தின்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "தி.மு.க-வும், காங்கிரஸும் திட்டமிட்டு உங்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். தூத்துக்குடியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம், துறைமுகத்திற்கு பிரதமர் மோடி மூவாயிரம் கோடி ரூபாயில் அதற்கான பணிகளைத் தொடங்குவதற்கு ஆணையிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது இப்போ இங்கே இதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன. ஏனென்றால் இது அரசியல். இந்த தேர்தலில் அவர்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். பொய் சொல்லியாவது வெற்றி பெற வேண்டும். அதற்காக இது போன்ற புரளியை கிளப்பி விட்டு வருகின்றனர்.

தளவாய் சுந்தரத்துடன் இணைந்து வாக்கு கேட்ட பொன்.ராதாகிருஷ்ணன்

துறைமுகம் மட்டுமல்ல நான்கு வழி சாலை கொண்டுவரக் கூடாது என்றார்கள். இரட்டை ரயில் பாதை கொண்டுவரக் கூடாது என்றார்கள். அங்கெல்லாம் யாருக்கும் எந்த பிரசனையும் கிடையாது. ஒவ்வொரு நலத்திட்டங்கள் வரும்போது பொய்யான பிரசாரங்களை செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாக கன்னியாகுமரி மாவட்டமே அழிந்துவிடும் என்ற நிலைக்கு பிரசாரம் செய்து வைத்துள்ளனர்.

104 கோடி ரூபாயில்  தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவமனை திட்டத்தை இல்லாமலாக  ஆக்கிவிட்டனர். தென்னை ஆராய்ச்சி மையம் ஏறக்குறைய 10 ஏக்கர் நிலத்தில் கொண்டுவர இருந்தோம். அதையும் இல்லாமல் ஆக்கி விட்டனர். இப்படி எல்லாம் திட்டத்தையும் இல்லாமல் ஆக்குவதற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திட்டமிட்டு வேலை பார்க்கின்றனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம்

யார் நாசமாகப் போனாலும் பரவாயில்லை. அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் இதுதான் அவர்கள் நோக்கம். எனவே மீனவ சகோதரர்கள் தைரியமாக நம்பி உங்கள் வாக்குகளை எங்களுக்குத் தாருங்கள். உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்காது என்பதை நான் உறுதி கூறிக்கொள்கிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ponrathakrishnan-campaign-in-fisherman-area-says-that-harbor-will-not-come

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக