`கடனைக் கட்டலன்னா, உன்னைக் கொன்னுருவேன்' என்று வேலை செய்யும் இடத்துக்கே சென்று தி.மு.க புள்ளி ஒருவர் மிரட்டியதால், பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் அருகே உள்ள ஆத்தூர் கிராமம் செல்லரபாளையம் காலனியில் வசித்து வருபவர் பொன்னுசாமி. இவருக்கு திருமணமாகி பாப்பாத்தி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர்.
Also Read: கரூர்: `நிலத்தைப் பிரிச்சுக் கொடுங்க’ -சொத்துப் பிரச்னையில் தம்பியின் கழுத்தறுத்த சகோதரர்கள்!
மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆத்தூர் சமத்துவபுரம் பகுதியில் சொந்தமாக வீடுகட்டி வசித்தபோது, அப்பகுதியில் கந்துவட்டி தொழில் செய்து வரும் தி.மு.க பிரமுகர் மாயவன் என்பவரிடம், பாப்பாத்தி கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், வாங்கிய கடனைக் கட்டவில்லை என்று மாயவன், சமத்துவபுரத்தில் இருந்த பாப்பாத்தியின் வீட்டை எழுதி வாங்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். அது தவிர கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 5 லட்ச ரூபாய் கடன் தொகையைச் செலுத்தியும் மீதம் ரூ.8 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என தொந்தரவு செய்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், கரூர் - மதுரை சாலையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் பணி செய்யும் பாப்பாத்தியைப் பணியிடத்தில் வைத்து மாயனும், அவரது மனைவியும் கடனுக்கான வட்டியை கேட்டு தகராறு செய்திருக்கிறார்கள்.
Also Read: `கடனை வாங்கி சொத்து சேர்க்கிறியா?' - அரசு ஊழியருக்குக் கந்துவட்டி கும்பலால் நேர்ந்த கொடுமை
சக பணியாளர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் மனமுடைந்துபோன பாப்பாத்தி, நேற்று அதிகாலை 5 மணியளவில் தனது வீடு அருகே உள்ள பயன்படுத்தாத பழைய ஓட்டு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, வாங்கல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தூக்கில் தொங்கிய பாப்பாத்தியை மீட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், மனைவி தற்கொலை செய்து கொண்டதை கண்ட பாப்பாத்தியின் கணவர் பொன்னுசாமிக்கு சம்பவ இடத்தில் அதிர்ச்சியில் வலிப்பு ஏற்பட்டு, 108 வாகனம் மூலம் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த பாப்பாத்தியின் உறவினர்கள், பாப்பாத்தியை தொந்தரவு செய்த, அவரது இறப்புக்கு காரணமான கந்துவட்டி கும்பலை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/crime/usury-karur-woman-ends-life
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக