Ad

வெள்ளி, 20 நவம்பர், 2020

அனுவின் கோரிக்கை, பெரியப்பாவின் `அதிர்ச்சி...' எப்படிச் சமாளிப்பாள் அபி? #VallamaiTharayo

இரவெல்லாம் உறங்காமல் அரட்டையடித்து, அதிகாலையில் அபியின் தோசையைச் சாப்பிடும் அனு, ``நீயும் குழந்தைகளும் என்னுடன் ஓடிவந்துடுங்க. உன்னை நல்லா பார்த்துக்குறேன்” என்கிறாள். இந்தத் தொடரில் அபியை `ஓடிப்போ' என்றோ, `ஓடி வந்துவிடு' என்றோ யாராவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்!

அப்போது காலிங் பெல் அழைப்பு. இருவரும் திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல அதிர்ச்சியடைகிறார்கள். வாசலில் அபியின் பெரியப்பாவும் பெரியம்மாவும் நிற்பதை அறிந்து அனுவுக்கே பயம் வந்துவிடுகிறது. வேகமாகத் தன்னுடைய துணிகளை எடுத்துப் பையில் திணித்துக்கொண்டு ஹாலில் அமர்கிறாள் அனு.

Vallamai Tharayo

இந்தக் காலத்தில் தகவல் சொல்லாமல் வருகிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை!

பெரியம்மாவும் பெரியப்பாவும் அனுவைப் பார்த்தவுடன் எரிச்சலடைகிறார்கள். தான் ஒரு வேலை விஷயமாகச் சென்னை வந்ததாகவும் அபி வீட்டுக்கு வந்து 10 நிமிடங்கள்தான் ஆகிறதாகவும் சொல்லிவிட்டுக் கிளம்புகிறாள் அனு. இரண்டு நாள்கள் தங்குவதற்காக வந்தவளை இப்படி ஒரே நாளில் அனுப்புகிறோமே என்று அபிக்குச் சங்கடமாக இருக்கிறது. குடும்பத்தினரை எதிர்த்துப் பேச முடியாமல், வேறு வழியின்றி அவளை அனுப்பி வைக்கிறாள்.

அதற்குள், பெரியம்மா அபியின் அம்மாவிடம் அனுவைப் பற்றிச் சொல்லிவிட, அபியின் அம்மா போனிலேயே காய்ச்சி எடுக்கிறார். சித்தார்த்துக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என்று கவலைப்படுகிறார். டாக்டரைப் பார்க்க வந்திருக்கும் பெரியப்பா, பெரியம்மாவை நன்றாகக் கவனித்து அனுப்பும்படியும் சொல்கிறார். அபியின் அம்மா இதுவரை சொன்னதிலேயே இதுதான் நல்ல விஷயம். தன்னுடைய மச்சினனையும் அவருடைய மனைவியையும் தன் மகள் நன்றாகக் கவனித்து, நான்கு சேலைகளும் எடுத்துக் கொடுத்து அனுப்பச் சொல்லும்போது அந்த கேரக்டர் ஈர்க்கிறது!

Vallamai Tharayo

அனு வந்த அதிர்ச்சி ஒரு பக்கம் என்றால் அபியின் உடை இன்னொரு பக்கம் அதிர்ச்சி. இப்படிப் பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும் மகிழ்ச்சி காணாமல் போயிருந்தபோது, பேரக் குழந்தைகள் அந்தச் சூழலை மகிழ்ச்சியாக மாற்றுகிறார்கள்.

அபியின் அண்ணன் சேதுராமனும் வருகிறார். அவரை அப்பார்ட்மென்ட் செகரட்டரி மடக்கி, யார் என்று விசாரிக்கிறார். `அபியின் அண்ணன்' என்று சொன்னால், `அபி ஒரே மகள்தானே' என்று கேட்கிறார். அவ்வளவு பெரிய அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் ஒருவர் பற்றி இவ்வளவு எல்லாமா ஒருவருக்குத் தெரிந்திருக்கும்?

உடனே சேதுராமன் தன்னுடைய ஃபேமிலி ட்ரீயை வரைந்து, சந்தேகமே வராத அளவுக்கு விளக்கிச் சொல்கிறார். செகரட்டரி ஜெர்க் ஆகிறார். இதைப் பார்த்த செக்யூரிட்டி, `இவரோடு ஒரே தொல்லை. இனி யார்கிட்டேயும் இப்படிக் கேள்வி கேட்க மாட்டார்' என்று மகிழ்ச்சியடைகிறார். அபியின் பெருமைகளை எடுத்துச் சொல்லியபடி சேதுராமனுடன் நடந்து செல்கிறார்.

வீட்டில் இனி கலாட்டாக்களுக்குப் பஞ்சமிருக்காது!

அடுத்து என்ன?

இன்று இரவு 7 மணிக்குப் பார்ப்போம்!

- எஸ்.சங்கீதா



source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக