Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

`தெருக்களில் உணவின்றித் தவித்தேன்!' - நியூசிலாந்து எம்.பி-யான இந்தியர் கெளரவ்

கொரோனா காலத்திலும் பாதுகாப்பு விதிமுறைகளோடு நடந்து முடிந்த நியூசிலாந்து பொதுத் தேர்தலில், தொழிலாளர் கட்சியின் ஜெசிந்தா ஆர்டர்ன் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று, பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறார்.

தொழிலாளர் கட்சியின் சார்பாக நியூசிலாந்தின் மேற்கு ஹாமில்டன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கும் 33 வயதான டாக்டர் கெளரவ் ஷர்மா, இமாச்சலப்பிரதேசத்தில் பிறந்தவர். இந்தியரான இவர், 20 ஆண்டுகளுக்கு முன்னர், தன் தந்தையின் தொழில் நிமித்தமாக குடும்பத்தினரோடு நியூசிலாந்தில் குடியேறியிருக்கிறார்.

கெளரவ் ஷர்மா

கெளரவ் ஷர்மா இமாச்சலப்பிரதேசத்தின் ஹமீர்பூரிலுள்ள காலோட்டில் 1987-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை கிர்தர் ஷர்மா, அரசு மின்வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்துவந்தார். தாயார் பூர்ணிமா ஷர்மா இல்லத்தரசி. இவர்களின் ஒரே மகன்தான் கெளரவ் ஷர்மா.

தனது தந்தை குறித்து கெளரவ் ஷர்மா கூறுகையில், ``நான் பிறந்து எனது ஒன்பதாம் வகுப்பு வரை இமாச்சலப்பிரதேசத்தில்தான் படித்தேன். பின்னர், 1996-ம் ஆண்டு என் தந்தை பொறியாளராகப் பணிபுரிந்துவந்த அரசு மின்வாரியப் பணியிலிருந்து சுயதொழில் தொடங்கும் நோக்கத்தால், விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர், வெறும் 250 டாலருடன் நியூசிலாந்துக்கு வந்தோம். முதல் ஆறு வருடங்களுக்கு என் தந்தைக்கு அவர் துறை சார்ந்த வேலை எதுவும் கிடைக்காததால், நியூசிலாந்து தெருக்களில் தனியாக மிகவும் சிரமப்பட்டோம். பல நாள்கள் உணவின்றி, நிலையாகத் தங்க வீடின்றி தவித்திருக்கிறோம். அப்போதெல்லாம் எங்களுக்கு பெரிதும் உறுதுணையாக நின்றவர்கள் நியூசிலாந்தின் ஆக்லாந்து தொண்டு நிறுவன உறுப்பினர்கள்தான்.

Also Read: `இரண்டாவது முறையாகத் தேர்தலில் வெற்றி!’- மீண்டும் நியூசிலாந்து பிரதமராகும் ஜெசிந்தா

நானும் எனது குடும்பமும் சிரமப்பட்ட காலத்தில் எங்கள் வளர்ச்சிக்கு நியூசிலாந்து சமூகம் எங்களுக்கு உறுதுணையாக நின்றது. அவர்கள் பணி மகத்தானது. அதனால், இந்த சமூகத்துக்காக நான் பணிசெய்வது எனது தலையாய கடமை” என்று பெருமையுடன் கூறியிருக்கிறார்.

கெளரவ் ஷர்மா

2014-ம் ஆண்டு நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்த இவர், படிப்படியாக உயர்ந்து தற்போது அந்தக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராகி, தற்போது எம்.பி-யாகவும் வென்றிருக்கிறார்.

கெளரவ் ஷர்மா, ஆக்லாந்து மருத்துவக் கல்லூரியில் மருத்துவ இளங்கலைப் பட்டமும், வாஷிங்டன் டி.சி-யிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.

ஜெசிந்தா

`இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த கெளரவ் ஷர்மா, தனது வெற்றியின் மூலம் இந்தியாவுக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்” என்று அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பாராட்டியிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/himachal-pradesh-man-gaurav-sharma-is-now-mp-in-jacinda-arderns-cabinet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக