Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

ஆன்லைன் சூதாட்டம்: `தன் தற்கொலையையே சாட்சியாக்கிய இளைஞர்; முடிவு எப்போது?’ - ராமதாஸ் கேள்வி

புதுச்சேரி, வில்லியனூரை அடுத்திருக்கும் கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஜயகுமார், வயது 38. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் இருக்கின்றனர். தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றின் சிம் கார்டுகளை விற்கும் மொத்த விற்பனையாளராக இருந்த இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்குக்காக ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கினார். பொழுதுபோக்குக்காக விளையாடத் தொடங்கியவரின் வாழ்க்கையில் ஆன்லைன் சூதாட்டம் கோரத் தாண்டவம் ஆடியது.

ஆன்லைன் சூதாட்டம்

ஒருகட்டத்தில் அந்தச் சூதாட்டத்துக்கு அடிமையாகி, தன்னிடமிருந்த சேமிப்புப் பணம் முழுவதையும் இழந்த அவர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் ரூ.30 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கியிருக்கிறார். இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர், தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்னர் தனது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு உருக்கமான ஆடியோ ஒன்றையும் அனுப்பியிருந்தார். அதில் ஆன்லைன் ரம்மி ஆட்டத்தால் தான் இழந்தவற்றைக் குறிப்பிட்டிருந்தார். வேறு யாரும் இதற்கு பலியாகக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

Also Read: புதுச்சேரி: `30 லட்ச ரூபாய்க்கு மேல விட்டுட்டேன், மதி!' - இளைஞரின் உயிரைப் பறித்த ஆன்லைன் ரம்மி

இந்தநிலையில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தடைசெய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார். அவர், ``ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் மோசடி மற்றும் பணப்பசிக்கு இன்னோர் இளைஞன் பலியாகியிருக்கிறான். இன்னும் வாழ்க்கையைக்கூட வாழத் தொடங்காத அவனது குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துவரும் நிலையில் அவற்றை அரசுகள் வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது” என்றார்.

ராமதாஸ்

தொடர்ந்து, ``புதுச்சேரி மாநிலம், கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற 35 வயது இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில், கடன் வாங்கியும், தமது சொத்துகளை அடகுவைத்தும், வங்கிச் சேமிப்புகளை கரைத்தும் ரூ.30 லட்சத்தை இழந்திருக்கிறார். அனைத்தையும் இழந்தநிலையில், வாழ்வதற்கு வழி தெரியாத சூழலில் மனைவியையும், கைக்குழந்தை உள்ளிட்ட இரு குழந்தைகளையும் பரிதவிக்க விட்டுவிட்டு, நேற்று முன்தினம் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தமது தற்கொலைக்கான காரணம் குறித்து மனைவிக்கு அனுப்பிய ஒலிச் செய்தியில், சூதாட்டத்துக்கு அடிமையாகி 30 லட்சத்துக்கும் கூடுதலான பணத்தை இழந்ததுதான் காரணம் என்றும், தமது தற்கொலையையே சாட்சியாக்கி ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும்படி பிரசாரம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தனியார் செல்பேசி நிறுவனத்தின் பணியாற்றிய அந்த இளைஞர் லட்சக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்; சொத்துகளை ஈட்டியிருக்கிறார். மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தியிருக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்குக்காக ஆன்லைன் சூதாட்டத்தை ஆடத் தொடங்கிய அந்த இளைஞர், தொடக்கத்தில் லட்சக்கணக்கில் பணத்தை ஜெயித்து, அதனால் ஏற்பட்ட போதையில் சூதாட்டத்துக்கு அடிமையாகி, தாம் ஈட்டிய அனைத்தையும் இழந்திருக்கிறார். இதற்கு முன்னர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்துகொண்டவர்கள் கூறிய அதே காரணங்களைத்தான் இந்த இளைஞரும் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் என மாநில எல்லைகளைக் கடந்து ஆன்லைன் சூதாட்டங்களும், அவற்றில் பணத்தை இழந்தவர்களின் தற்கொலைகளும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றைத் தடுக்க வேண்டிய அரசுகள், வேடிக்கை பார்க்கின்றன.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் சூதாட்டங்களின் ஆபத்துகள் குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 6-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்திருந்தேன். அண்மையில்கூட ஜூன் 17, ஜூலை 29 ஆகிய தேதிகளில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், அதன்மீது மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாக வாழ வேண்டியவர்கள் ஆன்லைன் ரம்மியில் வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்; ஒருகட்டத்தில் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். இந்தக் கொடுமை தொடர அனுமதிக்கக் கூடாது.

மதுவால் ஒரு குடும்பம் எந்த அளவுக்குச் சீரழியுமோ, அதைவிட மோசமான சீரழிவுகளை, அதைவிட குறைவான காலத்தில் ஆன்லைன் சூதாட்டம் ஏற்படுத்தும். மகாபாரதம் என்பது புராணக்கதையாக இருந்தாலும்கூட, அதில் சித்திரிக்கப்பட்டிருக்கும் சூதாட்டத்தின் தீமைகள் உண்மை. மகாபாரதத்தில் சகுனி எவ்வாறு காய்களை உருட்டி, தருமரை வீழ்த்தினாரோ, அதேபோல்தான் இன்று ஆன்லைன் சூதாட்டத்தில் கணினி ரோபோக்கள் செய்யும் செப்படி வித்தைகளால் அப்பாவிகள் வீழ்த்தப்படுகிறார்கள். ஆன்லைன் சூதாட்டம் என்பது புதைமணலைவிட மோசமானது; அதிலிருந்து மீண்டு வர முடியாது. இதற்கு ஆயிரமாயிரம் உதாரணங்களைக் கூற முடியும். அதனால் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும்.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாகத் தடைசெய்யப்படவில்லையென்றால், அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படும். அதை, மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டும். பொது இடங்களிலோ, மன்றங்களிலோ பணம்வைத்து சூதாடினால் அது குற்றம். ஆனால், ஆன்லைன் சூதாட்டங்கள் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களே வலியுறுத்தியும், ஆன்லைன் சூதாட்டம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை; தடை செய்யப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஏற்கெனவே பலமுறை வலியுறுத்தியிருக்கும்போதிலும், மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன். மத்திய, மாநில அரசுகளே... ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டோபஸ் இன்னும் பல குடும்பங்களை வளைத்து சீரழிப்பதற்கு முன்பாக அதைத் தடைசெய்யுங்கள்; அதன் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களைக் காப்பாற்றுங்கள் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்றார்.

Also Read: ஒழிக்கப்பட வேண்டிய ஆன்லைன் சூதாட்டம்!



source https://www.vikatan.com/social-affairs/crime/ramadoss-asks-to-ban-online-rummy-games

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக