Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

`சிம்புவுக்கு கல்யாணம் ஆகணும்!’ - கோயிலில் மண்டியிட்டு வேண்டுதல் நிறைவேற்றிய ரசிகர்கள்

ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் `மச்சி’ மதன் என்கிற மதன்குமார். இவர், நடிகர் சிம்புவின் வெறித்தனமான ரசிகர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சிம்பு ரசிகர் மன்றத் தலைவராகவும் மச்சி மதன் உள்ளார். சிம்புவை தன்னுடைய `கடவுள்’ என்று கூறிக்கொண்டு அவர் செய்யக்கூடிய நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் சிலநேரங்களில் நகைப்புக்குள்ளாகிவிடுகிறது. அடிக்கடி வம்பு வழக்குகளிலும் சிக்கிக்கொள்வதால், `தலைவருக்கேற்ற ரசிகன்’ என்பதற்கு உதாரணம் மச்சி மதன்தான் என்று நெட்டிசன்களும் கலாய்ப்பதுண்டு.

கடந்த ஆண்டு தொடக்கத்தில், ரஜினியின் `பேட்ட’, அஜித்தின் `விஸ்வாசம்’ படம் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில், சிம்புவின் `வந்தா ராஜாவாதான் வருவேன்’ படமும் ரிலீஸானது. ரஜினி, அஜித் திரைப்படங்களால் சிம்பு படத்துக்கு மவுசு கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மச்சி மதன், ``என் தலைவன் நடித்தப் படத்தை ஓட்ட மாட்டோம்னு தியேட்டர் ஓனருக்கு சொல்றாங்க.

சிம்புவுடன் மச்சி மதன்

எவன் தடுத்தாலும், சிம்பு படத்தை ஓட்டணும். தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருக்கிற பேட்ட, விஸ்வாசம் படங்களின் பேனர்களைக் கிழித்துவிட்டு சிம்பு பேனரை வைக்கிறேன். முடிந்தால் தடுத்துப்பாருங்கள். சிங்கத்தோடு மோது, சிம்பு ரசிகர்களிடம் மோதாதே’’ என்று ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து, சிம்பு பேனரை பிரிண்ட் செய்துகொடுக்க தாமதப்படுத்திய டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளருக்கும் கொலை மிரட்டல் விடுத்து, சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றையும் மச்சி மதனே பதிவேற்றம் செய்தார்.

Also Read: ``சிம்பு நடிக்க `புதிய பாதை - 2'... விரைவில் உங்களுக்காக!'' - பார்த்திபன் தொடர் - 17

அதுதொடர்பான புகாரில், கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்ற மச்சி மதன் ஜாமீனில் வெளிவந்து, `சிறையைத் தகர்த்த சிங்கம்’ என்கிற தொனியில் தனக்குத் தானே `பில்டப்’புகளை அள்ளிவிட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களுடனும் நெருக்கமாக இருப்பதாக வெளிவட்டாரத்தில் காட்டிக்கொண்டு மச்சி மதன் செய்யும் சேட்டைகளால் தலைவலிதான் என்று சிம்பு ரசிகர்களே புலம்புகிறார்கள். இந்தநிலையில், `சிம்புவுக்கு விரைவில் திருமணம் ஆகவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டு வேலூரை அடுத்துள்ள ரத்தினகிரி கோயிலில் மண்டியிட்டு படிக்கட்டில் ஏறிச்சென்று சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார் மச்சி மதன்.

மண்டியிட்டு படிக்கட்டில் ஏறிய ரசிகர்கள்

அவருடன் மேலும் 8 பேர், சிம்புவின் படத்தை கையில் பிடித்துக்கொண்டு கோயிலில் மண்டியிட்டு ஏறினர். ``விளம்பரப் பிரியரான அவர், கடந்த ஓராண்டாக தன்னைப் பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகாமல் இருந்த காரணத்தினால், தற்போது இந்த`காமெடி ஷோ’வை நடத்தியிருக்கிறார்’’ என்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்.

இதுபற்றி மச்சி மதனிடமே கேட்டதற்கு, ``என் அம்மாவை நான் அம்மானு கூப்பிடுறதுனால இன்னொருத்தனுக்கு பிடிக்கலைனா.. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்தா, நாலு நெகட்டிவ் கமெண்ட்ஸும் வரத்தான் செய்யும். எனக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்தான் பிடிக்கும். என் தலைவன் சிம்பு நல்லாயிருக்கணும். மாநாடு படப்பிடிப்பு சீக்கிரம் முடிஞ்சி, படம் திரைக்கு நல்லப்படியாக வரணும். தலைவருக்கு நல்ல பொண்ணு மனைவியா வரணும் என்று வேண்டிக்கொண்டேன்’’ என்றார்.

மச்சி மதனின் இந்த நிகழ்ச்சியையும் வழக்கம்போல் கிண்டலடித்துவருகிறார்கள் நெட்டிசன்கள்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/vellore-simbu-fans-prayer-over-his-marriage

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக