Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினர் கோரிக்கை என்ன? - 5 விஷயங்களைப் பட்டியலிட்ட பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தநிலையில், இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று முன்தினம் ஹத்ராஸ் செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை உ.பி எல்லையில் போலீஸார் தடுத்தனர். மேலும், அப்போது ராகுல் காந்தியை போலீஸார் கீழே தள்ளிவிட்டதாகவும் காங்கிரஸார் குற்றம்சாட்டினர்.

ராகுல் காந்தி

இந்தநிலையில், இரண்டு நாள்களாக மூடப்பட்டிருந்த ஹத்ராஸ் மாவட்ட எல்லை நேற்று திறக்கப்பட்டது. இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க முதலில் ஊடகத்தினருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரம், அரசியல் கட்சியினருக்கு அனுமதி இல்லை என ஹத்ராஸ் மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இந்த சூழலில், காங்கிரஸ் எம்.பி-க்கள் உள்பட ராகுல், பிரியங்கா உள்ளிட்டோஎ ஹத்ராஸுக்கு நேற்று செல்ல முயன்றனர். இதையொட்டி டெல்லி - உ.பி எல்லையான நொய்டாவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

Also Read: ஹத்ராஸ் சம்பவம்: `அவப்பெயர்... சகோதரியாகச் சொல்கிறேன்!' - யோகி ஆதித்யநாத்துக்கு உமா பாரதி அட்வைஸ்

நொய்டா எல்லையில் காங்கிரஸ் கட்சியினரைத் தடுத்து நிறுத்திய உ.பி போலீஸார், ராகுல் காந்தி உள்பட 5 பேர் ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கலாம் என்று அனுமதி கொடுத்தனர். ஆனால், தங்களுடன் வந்த காங்கிரஸ் தலைவர்களையும் அனுமதிக்க வேண்டும் என சிறிதுநேரம் அவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர், ஹத்ராஸ் சென்ற ராகுல், பிரியங்கா இளம்பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர்.

ஹத்ராஸ் - ராகுல், பிரியங்கா காந்தி

இந்தநிலையில், ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினரின் கோரிக்கைகளாக 5 விஷயங்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பட்டியலிட்டிருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பதிவில்,``ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினர் எழுப்பியுள்ள கேள்விகள் - 1.உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். 2. ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்; அவருக்கு பெரிய பதவிகள் வழங்கக் கூடாது.

Also Read: ஹத்ராஸ்: கூட்டுப் பாலியல் வன்முறை...சி.பி.ஐ விசாரணை வரை...நடந்தது என்ன?

3.எங்களது ஒப்புதல் இல்லாமல் எங்கள் மகளின் உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது ஏன்? 4.எப்போதும் எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு பொய்யான தகவகல்கள் எங்களுக்கு அளிக்கப்பட்டது ஏன்? 5. எரிக்கப்பட்டது எங்கள் மகளது உடல்தான் என்று எப்படி நாங்கள் நம்ப முடியும்?.

ஹத்ராஸ்- ராகுல் காந்தி

இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு உத்தரப்பிரதேச அரசுக்கு இருக்கிறது. பதில் தெரிந்துகொள்ள வேண்டிய உரிமை பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு இருக்கிறது’’ என பிரியங்கா காந்தி தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/politics/what-hathras-victims-family-wants-priyanka-gandhi-lists-5-things

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக