Ad

புதன், 5 மே, 2021

`ஃபேஸ்புக் மூலம் வலை; குடும்பப் பெண்கள் டார்கெட்!’ - நகையைப் பறிக்க இளைஞர்களின் புதிய டெக்னிக்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா (27) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக இவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் ஒரு நபர் அறிமுகமாகியுள்ளார். 'உங்களைப் பார்க்க வேண்டும்' எனக் கூறி சரோஜாவின் ஜவுளிக்கடைக்கு வந்தாராம் அந்த நபர். சிறிது நேரம் பேசிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பார்ப்பதுபோல நடித்து, கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக சங்கராபுரம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி தன் கணவருடன் சென்று புகார் அளித்துள்ளார் சரோஜா.

கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாயுல் ஹக் ஆலோசனையின் பேரில், டி.எஸ்.பி ராஜூ மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது காவல்துறை. இகடந்த 29-ம் தேதி மாலை 3:00 மணி அளவில் S.குளத்தூர் பகுதியில் வாகன சோதனை நடத்தி வந்துள்ளனர் காவல்துறையினர். அப்போது சங்கராபுரத்திலிருந்து திருவண்ணாமலையை நோக்கி வந்த காரிலிருந்த இரண்டு பேர் காவல்துறையினரைப் பார்த்தவுடன் இறங்கி தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாயுல் ஹக், டி.எஸ்.பி ராஜூ

இரு நபர்களையும் மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர் காவல்துறையினர். அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், பழநி பகுதியைச் சேர்ந்த விசுவாசகுமார் மகன் மனோஜ்குமார் என்பதும், மற்றொருவர் ராஜேந்திரன் மகன் கௌதம் என்பதும் தெரியவந்துள்ளது. முன்னுக்குப் பின் இருவரும் முரணாக பதில் சொல்லவே காரை சோதனையிட்டுள்ளனர் காவல்துறையினர். காரின் பின்புற சீட்டின் அருகே தங்க சங்கிலியுடன் ஆறு தங்கக் காசுகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதைப் பற்றி கேள்வி எழுப்பிய காவல்துறையினரிடம் கடுவானூர் பகுதியில் சரோஜா எனும் பெண்ணிடம் ஏமாற்றியது பற்றி கூறி ஒப்புக்கொண்டனர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சியூட்டும் பல தகவல்களைக் கூறியுள்ளனர் அந்த முகநூல் மோசடி இளைஞர்கள்.

“என்னுடைய பெயர் மனோஜ்குமார். எனக்கு வயது 25 ஆகுது. நான் B.Sc fire & safety, 2018-ம் ஆண்டு முடித்தேன். படித்து முடித்ததும் கை செலவுக்காகப் பணம் தேவைப்பட்டது. நண்பர்களுடன் இணைந்து குடிப்பழக்கமும் ஏற்பட்டது. குடும்ப கஷ்டத்தினால் பெற்றோர்களால் எனக்கு சில சமயங்களில் பணம் தர முடியவில்லை. அப்போதுதான் பெண்களிடம் ஆசைவார்த்தை கூறிப் பழகி, அவர்களுடன் பாலியல் செயலில் ஈடுபடும்போது வீடியோ எடுத்து மிரட்டினால் பணம் கிடைக்கும் எனத் தோன்றியது. அதன்படி ஃபேஸ்புக்கில் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஆசைவார்த்தைகளைக் கூறி முதன்முறையாகப் பேசத் தொடங்கினேன்.

முதன்முறையாக 15,000 ரூபாய் பணம் பெற்றேன். அந்தச் சமயத்தில்தான் என்னுடன் ஆறாம் வகுப்பு வரை படித்த கௌதம் மீண்டும் அறிமுகமானான். கௌதம் ஓட்டிவந்த உறவினரின் எட்டியோஸ் காரைக் கேட்டு வாங்கிக்கொண்டு, அந்தப் பெண்ணை அழைத்து சென்று பாலியல் செயலில் ஈடுபட்டேன். பின், சில காரணம் கூறி அவரிடமிருந்து நான்கரை சவரன் தாலியை வாங்கிக்கொண்டு போன் நம்பரை பிளாக் செய்துவிட்டு ஏமாற்றினேன். எட்டியோஸ் காரை நான் சற்று சேதப்படுத்தவே, 'இனி நானே உனக்குக் காரை ஓட்டிவருகிறேன்' எனக் கூறி கௌதம் என்னுடன் இணைந்துகொண்டான். இப்படியாக பல பெண்களுடன் சமூக வலைதளம் மூலம் பழகி, ஏமாற்றிவந்தோம். கடந்த வருடம், (2020) மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு போடப்பட்டது. கையில் காசு இல்லாமல் போகவே மீண்டும் சமூக வலைதளம் மூலம் பெண்களிடம் சாட்டிங் செய்யத் தொடங்கினோம். இந்த முறை திருமணமான பெண்களைக் குறிவைத்துப் பேசத் தொடங்கினோம். ஃபேஸ்புக் மூலம் பழகும் பெண்களிடம் அவர்களுடைய வாட்ஸ்அப் நம்பரைக் கேட்டு வாங்கி, பின்னர் வீடியோ கால் செய்து பேசுவோம். வீடியோ காலில் பேசும்போது அவர்கள் தங்க செயின் அணிந்திருந்தால் தொடர்ந்து பேசுவோம். இல்லையென்றால் போன் நம்பரை பிளாக் செய்துவிடுவோம்.

பறிமுதல் செய்யப்பட்டவை

அவர்கள் அணிந்திருப்பது தங்க நகையா, கவரிங்கா... என சகஜமாகக் கேட்டு உறுதி செய்துகொள்வோம். வீட்டின் அமைவிடம், ஆட்கள் நடமாட்டம், வீட்டில் யார் யாரெல்லாம் இருப்பார்கள் எனப் பேச்சுவாக்கிலேயே தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்வோம். அதன் பிறகு ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வீட்டுக்குச் செல்வோம். சம்பந்தப்பட்ட பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, திருப்பி தந்துவிடுவதாகக் கூறி அவர்களின் நகையை, பணத்தை பெற்றுவந்துவிடுவேன். கௌதம் தயாராக வைத்திருக்கும் காரில் தப்பி வந்துவிடுவோம். பின் நம்பரை பிளாக் செய்துவிட்டு மீண்டும் பழையபடியே வேறு பெண்களிடம் சாட்டிங் செய்ய தொடங்குவோம். ஒரே காரில் சென்றுகொண்டிருந்தால் சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையிடம் சிக்கிக்கொள்வோமோ என்ற பயத்தில் மற்றொரு காரையும் பயன்படுத்தத் தொடங்கினோம். மொத்தமாக இரண்டு கார்களைப் பயன்படுத்தினோம். சமூக வலைதளம் மூலம் பழக்கமான பெண்ணின் வீட்டுக்குச் செல்லும்போது மகேந்திரா காரில் நானும், மற்றொரு எட்டியோஸ் காரில் கௌதமும் ஓட்டிச் செல்வோம்.

நான் ஓட்டிச்செல்லும் மகேந்திரா காரை மட்டும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகாத வண்ணம் மறைவான இடங்களில் நிறுத்திவிடுவோம். பின், கௌதம் ஒட்டிவரும் எட்டியோஸ் காரின் மூலம் இருவரும் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் செல்வோம். ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதால் பெரும்பாலும் மதிய நேரத்தையே தேர்ந்தெடுப்போம். பெண்களை ஏமாற்றிவிட்டு நகை, பணத்தோடு வரும்போது, கௌதம் தயாராக காரை ஸ்டார்ட் செய்து வைத்திருப்பான். அதில் தப்பி வந்துவிடுவோம். அந்த காரையும் சிசிடிவி காட்சிகளில் படாதபடி ஓர் இடத்தில் மறைமுகமான விட்டுவிடுவோம். பின், நான் முன்பே மறைவான இடத்தில் நிறுத்தி வைத்திருந்த மகேந்திரா காரில் இருவரும் வீட்டுக்கு வந்துவிடுவோம். ஓரிரு தினங்களில் அந்த எட்டியோஸ் காரை எடுத்து வந்துவிடுவோம். இப்படிச் செய்தால் காவல்துறையால் எங்களைக் கண்டுபிடிக்க முடியாது என நம்பியிருந்தோம்.

கைது செய்யப்பட்ட முகநூல் மோசடி இளைஞர்கள்

அந்த வரிசையில்தான் சரோஜா என்பவரும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானார். அவரிடம் பேசி, பழகிய பின் அவரை நேரில் சந்திக்க வருவதாக அவரிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். பின், நானும் என் நண்பன் கௌதமும் வழக்கம்போல் இரண்டு கார்களில் சென்றோம். அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டு, பின்னர் பாலியல் உறவில் ஈடுபட்டோம். அப்போது, 'உன் தாலியைப் பார்த்தால் உன்னுடைய கணவன் ஞாபகம் வருகிறது' எனக் கூறி அதை கழற்றிவைக்கச் சொன்னேன். சரோஜாவும் கழற்றி வைத்தார். பின் அவர் பாத்ரூம் சென்றவுடன் நான் அந்த நகைகளை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். அவருடைய போன் நம்பரையும் பிளாக் செய்துவிட்டேன். லோன் கட்டாததால் எட்டியோஸ் காரை ஃபைனான்ஸ் கம்பெனி எடுத்துச் சென்றுவிட்டது. சில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அவரை ஏமாற்றிவிட வேண்டும் என்றுதான் 29-ம் தேதி மகேந்திரா காரில் நானும், எனது நண்பன் கௌதமும் சென்றுகொண்டிருந்தோம். அப்போதுதான் நீங்கள் எங்களைப் பிடித்துவிட்டீர்கள்" எனக் கூறியுள்ளனர். இதைக் கேட்டபோது தாங்களே அதிர்ந்துபோய்விட்டதாகக் கூறுகின்றனர் காவல்துறையினர்.



source https://www.vikatan.com/news/crime/youths-arrested-for-cheating-on-women-through-facebook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக