Ad

திங்கள், 15 மார்ச், 2021

எரிமலை எப்படிப் பொறுக்கும்... கொரோனாவிலிருந்து மீளும் முன்பே இத்தாலியைப் பயமுறுத்தும் மவுன்ட் எட்னா!

சென்ற வருடம் இந்த நேரம் கொரோனா உச்சக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. சீனாவில் ஆரம்பித்தாலும் ருத்ரதாண்டவம் ஆடியது என்னவோ முதலில் இத்தாலியில்தான். அந்த பயங்கரம் நிகழ்ந்து ஒரு வருடம் கூடப் பூர்த்தியாகா நிலையில் மீண்டும் ஓர் இயற்கை அனர்த்தம் இத்தாலியர்களின் அன்றாட வாழக்கையை அப்படியே திருப்பிப் போட்டுள்ளது.

கடந்த வாரம் இத்தாலியின் சிசிலியன் கிராமங்களை புகையால் இருளாக்கியது மவுன்ட் எட்னா எரிமலையின் சீற்றம். கடந்த இரு வாரங்களில் மட்டும் மொத்தம் ஏழு தடவை வெடித்து, அதன் சரிவுகளில் இறங்கி, நெருப்பாறாய் பாய்ந்தது எட்னா. வான் நோக்கி எழுந்த சுவாலை அருகிலுள்ள எட்டு கிராமங்களை சாம்பலால் குளிப்பாட்டியது. எரிமலையிலிருந்து வெடித்துச் சிதறிய கற்கள் வானத்திலிருந்து கொட்டும் மழை போல வீடுகளின் மேல் விழுந்து சிதறின. சிசிலியின் நகரங்களின் ஒவ்வொரு தெருவும் கறுப்பு நிற மையால் தீட்டப்பட்டது போல சாம்பலால் மூடியது. பாரிய சத்ததோடு கொழுந்து விட்டெரிந்த எரிமலையின் சூடு, குளிர்கால இத்தாலியின் சிசிலி நகரை வெப்பத்தின் அணலுக்குள் தள்ளியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதம் இதுவரை இல்லை. மூட்டை மூட்டைகளாய் கட்டப்பட்ட சாம்பல் நிறைந்த பைகள் சிசிலி வீதிகளின் ஓரங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

மவுன்ட் எட்னா எரிமலை சீற்றம்

இத்தாலிய தீவான சிசிலியில் உள்ள மவுன்ட் எட்னா, உலகின் மிகவும் சுறுசுறுப்பான Active எரிமலைகளில் ஒன்றாகும். கடந்த பிப்ரவரி 16 அன்று ஆரம்பித்த வெடிப்பு, பிப்ரவரி 18 அன்று மீண்டும் வெடித்தது. அதன் பின் பிப்ரவரி 20 முதல் 23 வரையான தேதிகளில் மீண்டும் உக்கிரமடைந்தது. இத்தாலியின் இரவு வானத்தில் 0.7 கிலோமீட்டருக்கு தீப்பிளம்பாய் உயர்ந்த தீச்சுவாலை கிட்டத்தட்ட 1.5 கி.மீ வரை உச்சம் தொட்டது. ஐரோப்பாவின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலை, ஆரஞ்சு, சிவப்பு எனும் தழலின் உக்கிர வர்ணங்களால் வானத்தை வண்ணமயமாக்கி, இயற்கையில் தீயின் வீரியத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துச் சென்றுள்ளது.

பிப்ரவரி 16 முதல் ஆரம்பித்த இந்த எரிமலை சீற்றத்தின் மிகப்பெரிய வெடிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலை நிறுவனமான என்.ஜி.வி (National geophysics and volcanology institute - INGV) கூறுகிறது.

ஐரோப்பாவின் எரிமலை தேசம்

இத்தாலியைப் பற்றி நாம் நினைக்கும் போது, முதலில் நினைவுக்கு வருவது அதன் பிரமிக்க வைக்கும் பண்டைய வரலாறு, அதிசயமான இயற்கை அழகு, சுவையான பீட்சா, சூடான பாஸ்தா, பழைமை வாய்ந்த ருசியான ஒயின்! இந்த லிஸ்ட்டில் முக்கியமாக இணையும் இன்னொரு ஹைலைட்தான், உலகின் மிக ஆபத்தான ஆக்டிவ் எரிமலைகள்! இதற்கு முக்கிய காரணம் இந்த நாடு பூகோள அமைப்பில் Eurasian தட்டுக்கும், ஆப்பிரிக்க தட்டுக்கும் இடையிலான எல்லையின் தெற்கே ஒரு குறுகிய தூரத்தில் இருப்பதாகும்.

மவுன்ட் எட்னா எரிமலை சீற்றம்

இத்தாலியில் முக்கியமான நான்கு எரிமலைகள் இருந்த போதிலும், 2000 வருடங்கள் வரை பழைமையான வரலாற்றை கொண்டதும், 10,900 அடி உயரமானதுமான மவுன்ட் எட்னாதான் இவை எல்லவற்றுக்கும் முப்பாட்டன். மவுன்ட் எட்னாவின் கடைசி பெரிய வெடிப்பு 1928-ம் ஆண்டில் நிகழ்ந்தது. அப்போது இத்தாலியின் மஸ்காலி நகரம் தீப்பிழம்பால் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

இந்த எரிமலைகள் உலகிற்கு அவசியமானவையா?

எரிமலைகள்தான் இந்தப் பூமியின் புவியியல் கட்டடக் கலைஞர்கள். அவை இந்த நிலத்தின் 80 சதவீதத்திற்கும் அதிகமான மேற்பரப்பை உருவாக்கி அதில் உயிர்கள் வாழ செழிப்பான அடித்தளத்தை அமைத்துத் தருகின்றன. அவற்றின் வெடிக்கும் சக்தியினால் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் உருவாக்குகின்றன. வறண்ட நிலப்பரப்புகளின் ஊடே பாயும் லாவா ஆறுகள் காலப்போக்கில் 'volcanic rocks'-ஆக உடைந்து அவற்றின் தாதுக்களை விடுவித்து, நாகரிகங்கள் செழிக்க தேவையான வளமான மண் வளத்தை வழங்குகின்றன.

உலகின் பனிக் கண்டமான அன்டார்டிகா உட்பட எல்லா கண்டங்களிலும் எரிமலைகள் உள்ளன. அதில் சுமார் 1,500 எரிமலைகள் இன்றும் ஆக்டிவ்வாக இருப்பதாக கருதப்படுகின்றது.

எரிமலை வெடிப்பினால் ஏற்படும் இழப்புகள்!

'Lava flows' எனப்படும் எரிமலை ஓட்டம் தவிர்த்து இந்த எரிமலை வெடிப்புகள் பல ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. அதில் முக்கியமானது பைரோகிளாஸ்டிக் (pyroclastic) கற்களின் பாய்ச்சலாகும்.

மணிக்கு 450 மைல் வேகத்தில், மலைச் சரிவுகளில் வேகமாக பாய்ந்து செல்லும் சூடான பாறைகள், கனமான சாம்பல் துகள்கள் மற்றும் நச்சு வாயு போன்றன அந்தப் பகுதியில் இருக்கும் அத்தனை உயிர்களையும், உடமைகளையும் சில நொடி நேரத்திற்குள்ளேயே அழித்து துடைத்து விட்டுச் சென்று விடுகின்றன. ஒரு முழு நகரத்தையே முற்றாகப் புதைத்த பல எரிமலை வெடிப்புகள் வரலாற்றில் இடம்பெற்று உள்ளன.

மவுன்ட் எட்னா எரிமலை சீற்றம்
இதிலிருந்து வெளியேறும் சல்பர் டை ஆக்சைடு (Sulfur dioxide), ஹைட்ரஜன் குளோரைடு (Hydrogen Chloride), கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide) மற்றும் ஹைட்ரஜன் ஃவுளூரைடு (Hydrogen Fluoride) போன்ற வாயுக்கள் பல சிக்கலான சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறன.

எரிமலையின் மற்றொரு அச்சுறுத்தும் ஆபத்து அதன் சாம்பலாகும். நம் வீடுகளில் எரியும் விறகு கட்டையிலிருந்து பிரியும் மெல்லிய பஞ்சு போன்ற சாம்பலல்ல இவை. ஒவ்வொன்றும் இரண்டு மில்லிமீட்டருக்கும் குறைவான கூர்மையான எரிமலைக் கண்ணாடிகளால் ஆன துண்டுகளாகும். எனவே இவற்றை சுவாசிப்பது மிகவும் ஆபத்தானது. இவை மிகவும் கனமானதாகையால் மிக விரைவாக படிமங்களாக உருவாகின்றன. அதனால் அவற்றை அகற்றுவதும் கூட ஒரு சவாலான விஷயமாகிறது.

Also Read: "இந்த சொர்க்க பூமியில் நாங்கள் மட்டும் ஏன் நரக வாழ்க்கை வாழ்கிறோம்?"- காங்கோவில் என்ன நடக்கிறது?!

எரிமலை வெடிப்பை முன்கூட்டியே கணிக்க முடியுமா?

மவுன்ட் எட்னா எரிமலை சீற்றம்

எரிமலைகள் வெடிப்பதற்கு முன்பாக சில எச்சரிக்கைகளை முன்கூட்டியே அளிக்கின்றன. சிறிய பூகம்பங்கள், எரிமலையின் பக்கங்களில் வீக்கம், அதன் துவாரங்களிலிருந்து வாயுக்களின் வெளியேற்றம் அதிகரித்தல் ஆகியவை இவற்றில் சிலவாகும். ஆனால் இந்த அறிகுறிகள் தென்படுவது எதுவுமே வெடிப்பு உடனடியாக நிகழப்போகிறது என்று அர்த்தமல்ல. ஆயினும் அந்த எரிமலையின் நிலையை மதிப்பீடு செய்ய விஞ்ஞானிகளுக்கு இவை உதவக்கூடும்.

வரலாற்றை எடுத்து பார்க்கும் போது, முந்தைய காலகட்டங்களைப் போல தற்காலத்தில் எரிமலை சீற்றங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை. எவ்வாறாயினும், எந்த எரிமலை எப்போது எப்படி வெடிக்கும் என்பது இயற்கைக்கு மட்டுமே தெரிந்த ஒரு பரம ரகசியம்!


source https://www.vikatan.com/science/international/mount-etna-volcanic-eruption-in-italy-threatens-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக