Ad

செவ்வாய், 2 மார்ச், 2021

`மும்பையில் வழக்கு விசாரணை... என் உயிருக்கே ஆபத்து!’ - உச்ச நீதிமன்றத்தை நாடிய கங்கனா

நடிகை கங்கனா மீது மும்பை நீதிமன்றத்தில் 3 வழக்குகள் இருக்கிறது. இதில் ஒரு வழக்கில் கடந்த ஒன்றாம் தேதி கோர்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் கங்கனா கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஜூலை 20ம் தேதி பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குறித்து கங்கனா ரிபப்ளிக் டிவியில் அளித்த பேட்டி ஒன்றில் அக்தரை களங்கப்படுத்தும் வகையில் சில தகவல்களை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விளம்பரத்திற்காக தனது பெயரை தேவையில்லாமல் இழுத்து களங்கப்படுத்தியாக கூறி கங்கனா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று அக்தர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் கோர்ட் இந்த பிடிவாரன்டை பிறத்துள்ளது.

கங்கனா

இது தவிர கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது தேசதுரோக வழக்கு ஒன்றும் நிலுவையில் இருக்கிறது. இரு சமுதாயத்திற்கு இடையே பகையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக இவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் காஜிப் அலி கான் தேஷ்முக் இது தொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ``ரங்கோலி ட்விட்டரில் பதிவிட்டிருந்த பதிவில் குறிப்பிட்ட சமுதாயம் குறித்தும் , இரு சமுதாயத்தினருக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பதிவிட்டார். இதையடுத்து ரங்கோலியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அவருக்கு சாதகமாக நடிகை கங்கனா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதுவும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருந்தது.

இதில் போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். மலிவான விளம்பரத்திற்காக இருவரும் சமூக வலைத்தளத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர்” என்று கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தேஷ்முக் தெரிவித்தார். இருவருக்கும் எதிராக மும்பை அம்போலி போலீஸிலும் தேஷ்முக் புகார் செய்துள்ளார். இதே போன்று பாலிவுட் பிரமுகர் முன்னாவார் அலி சையத்தும் கங்கனா சகோதரிகள், பாலிவுட் குறித்து மிகவும் மோசமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதோடு அவர்கள் பதிவிட்ட மிகவும் ஆட்சேபகரமான கருத்துக்கள் எனது மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது என்று கூறி கங்கனா சகோதரிகள் மீது கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்

சிம்லா நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்!

இந்த முன்று வழக்குகளையும் சிம்லா கோர்ட்டிற்கு மாற்ற உத்தரவிடவேண்டும் என்று கோரி கங்கனா தனது வழக்கறிஞர் நீரஜ் சேகர் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ``இவ்வழக்கு விசாரணை மும்பையில் நடைபெற்றால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனக்கும் சிவசேனா தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பகை இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இம்மனு விரைவில் சுப்ரிம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருக்கிறது.

இதற்கிடையே கங்கனா மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. `விவசாய மசோதாவுக்கு ஆதரவு கொடுத்தற்காக என் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக’ கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். `விவசாய மசோதாக்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பியவர்கள் தான் கலவரத்திற்கு காரணமானவர்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kangana-request-supreme-court-to-move-her-case-to-simla

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக