Ad

வெள்ளி, 12 மார்ச், 2021

`நாற்காலிக்காக சென்றவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்!’ - நமச்சிவாயத்தை விளாசும் நாராயணசாமி

காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்த நமச்சிவாயம், முதல்வர் பதவிக்காக அக்கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.கவில் இணைந்தார். அவரையடுத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் அடுத்தடுத்து பா.ஜ.கவில் இணைந்ததையடுத்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இந்த சூழலில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ வைத்தியநாதன் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “என்.ஆர்.காங்கிரஸ் மதவாத சக்திகளோடு இணைந்துள்ளது. மதவாத சக்தியாக உள்ள பா.ஜ.கவை மக்கள் புறக்கணித்துள்ளார்கள்.

தள்ளாடத்தில் புதுச்சேரி அரசியல்

பல கட்சிகளில் இருந்து நிறையபேர் விலகி காங்கிரஸ் கட்சியை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம், புதுவையில் வேரூன்றாத, டெபாசிட்டை இழந்த பா.ஜ.க, நியமன எம்.எல்.ஏக்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் அனைத்து பதவி சுகங்களையும் அனுபவித்ததுடன், காங்கிரஸின் முதுகில் குத்திவிட்டு அந்த துரோகிகள் பா.ஜ.கவில் சேர்ந்து எங்களுடைய ஆ்டசியை கவிழ்த்திருக்கிறார்கள். அதனுடைய பலனை இப்போது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிற்பதற்குக் கூட தொகுதிகள் கிடைக்காமல், அலைந்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் நாற்காலிக்காக சென்றவர்கள் இப்போது நடுத்தெருவில் நிற்கிறார்கள். இதுதான் பா.ஜ.கவின் சரித்திரம்.

இதனை புதுவை மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கு நூறு சதவீதம் மக்கள் பா.ஜ.கவை வெறுக்கிறார்கள். பல பகுதிகளுக்கு செல்லும்போதும், சமூக வலைத்தளங்களில் பார்க்கும்போதும் பா.ஜ.கவை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. புதுவையை பொறுத்தவரை மக்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறவர்கள். ஆனால், மதவாத சக்திகள் மாநிலத்தில் நுழைந்து மக்களின் ஒற்றுமையை குலைக்கக் கூடாது என்று நாங்கள் ஒருங்கிணைந்து செல்படுகிறோம். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம். புதுச்சேரியின் தனித்தன்மையை காப்பதற்கும், புதுச்சேரி மாநிலம் தனி மாநில அந்தஸ்து பெறுவதற்கும் இணைந்து பாடுபடுவோம்.

பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் நமச்சிவாயம

வருகிற தேர்தலில் கண்டிப்பாக பா.ஜ.கவுடன் சேர்ந்துள்ள என்.ஆர் காங்கிரஸ், அ.தி.மு.கவை புறக்கணித்து காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி ஆட்சி அமைவதற்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்திலும், புதுவையிலும் தி.மு.க – காங்கிரஸ் அலை வீசுகிறது. புதுவை மக்கள் மதவாத சக்திகளை புறக்கணிப்பார்கள் என்பதில் எங்களுக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்தமுறை குறைவான இடத்தை பெற்றிருப்பதாகக் கூறியிருக்கின்றனர். அதனை கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். 30 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதன் மீது பரிசீலனை செய்து நேர்க்காணலும் நடைபெற்றுள்ளது. தொகுதி வரையறை மற்றும் வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு முடிவு செய்யும். புதுவையில் பா.ஜ.க புல் பூண்டு இல்லாத கட்சி. மற்ற கட்சியில் உள்ளவர்களை இழுக்கிறார்களே தவிர, அவர்களுக்கு எந்தவிதமான பலமும் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் இருந்த அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் மிரட்டி வெளியே கொண்டுவந்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தார்கள்.

Also Read: புதுச்சேரி: `பதவியும் இல்லை; தொகுதியும் இல்லை!’ - பா.ஜ.க-வுக்குத் தாவிய நமச்சிவாயம் அப்செட்

அதற்கு உறுதுணையாக என்.ஆர்.காங்கிரஸும், அ.தி.மு.கவும் இருந்தது. நியமன உறுப்பினர்களைக் கொண்டு ஆட்சியைக் கவிழ்த்த சரித்திரம் எந்த நாட்டிலும் கிடையாது. ஆனால் அப்படியான ஒரு அராஜக செயலையும், சர்வாதிகார செயலையும் மத்தியில் உள்ள மோடி அரசு செய்துள்ளது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இணைந்து, புதுவையில் சிரத்தன்மையோடு இருந்த அரசியலை குலைத்து மக்களுக்கு துன்பத்தை விளைவிக்கிறார்கள். அதன் விளைவுகளை வருகிற தேர்தலில் சந்திப்பார்கள்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-former-cm-narayansamy-slams-bjp-and-namachivayam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக